Thursday, November 12, 2009

60/60

பாரந்தூர்60;பாரதம் 60 என்பது இதற்கு -இதற்கு முந்தைய கச்சா வடிவில் வைத்திருந்த தலைப்பு.உலகம் அறுபது வினாடிகள் ஒரு நிமிடம் என்றும் அறுபது நிமிடங்கள் ஒரு மணி என்பதையும் அங்கீகரித்திருக்கிறது.தமிழ் மரபு நாளை அறுபது நாழிகையாகவும் ஆண்டுகளை அறுபதுச் சுற்றுகளாகவும் பிரித்து வைத்திருக்கிறது. எட்டு எட்டாக மனித வாழ்வைப் பிரித்தால் எட்டாவது எட்டினை முடிக்க தமிழ்ச் சுற்றில் இடமில்லை. பழைய விரோதி,பிங்கள ஆண்டுகளின் பெயரிலேயே திரும்ப வாழவேண்டியதுதான்.

இந்தியா விடுதலை அடைந்து அறுபதின் வைரம் மின்னும் ஆகஸ்ட்-15 தினத்தில் ஒரு கிராமத்துக்குப்போனேன். மல்லிகை மகள் (பத்திரிக்கை) ஆசிரியர் ம.கா.சிவஞானம் அப்படி ஒரு பணியை ஏவியிருந்தார். அந்த ஏவலுக்கு இப்போது நன்றி.

ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டை செல்லும் வழியில் 20-வது கி.மீ யில் இருக்கிறது.எம்.பாரந்தூர்.கம்யூனிஸ்ட்டுகள் சீட்டுக் கொடுக்காததால் சுயேச்சையாகவே தாளித்து தளி ராமச்சந்திரன் வெற்றிபெற்ற சட்டமன்றத்துள் வருகிறது இந்தப்பகுதி.தெலுகு அதிகம் பேசும் ஆனால் தமிழக ஆளிகைக்கு உட்பட்ட பகுதி.

நூறுக்கும் குறைவான வீடுகள்.அனேகமும் சீமை ஓடுகள்.பயணிகள் நிழற்குடைகளில் பலகாரக்கடைகள். சாலைவாகனங்களால் ஊடறுத்துவிட முடியாத அமைதியின் ஊர்.ஊர்த்தலைவாசல் கோயிலுக்கு முன்பாக விக்கிரமாக நின்று விடுதலை உணர்ச்சியை ஊட்டிக்கொண்டிருப்பவர்.பி.கே.தேவய்யா.

தேவய்யா அப்போதே பி.ஏ.முடித்தவர்.மோகன்தாஸ் கரம்சந்த்தின் அணுக்கமாக இருந்த பல்லாயிரவரில் ஒருவர்.இவரது முயற்சியால் இந்தச்சிறிய ஊருக்கும் ஒரு முறை வந்துவிட்டுப் போயிருக்கிறார் தேசப்பிதா.

ஊரில் முதலில் நான் சந்தித்தது வன்னப்பள்ளி எம்.வெங்கடேசப்பாவை.கார் ஷெட் வடிவத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலின் நுழைவுவாசல் முகப்பில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வினாயகரை பிரதிஷ்டை செய்துவிட்ட மகிழ்வில் அன்றெல்லாம் திளைத்துக்கொண்டிருந்தார்.65 வயது. சுதந்திரம் வாங்கியது நினைவில்லை என்றார்.ஏனெனில் அப்போது அவருக்கு வயது 5. குழந்தைகளுக்கு மன்னரோ பிரதமரோ இருக்க முடியுமா என்ன?

கீழ்பாய்ச்சுக் கட்டிக்கொண்டிருந்த ஆண்கள் ‘பழனி’ திரைப்படத்தை நினைவூட்டுகிறார்கள்.நீரோடும் வீதி எங்கும் ஏரோடுது என.’’நூறு ரூபாய் இருந்தால் அப்பவெல்லாம் என்ன செய்வீங்க?’’ என்று வெங்கட்டைக் கேட்டேன். ‘ஒரு மூட்டை நிறைய சாமான் வாங்கிவருவேன்’ என்ரு அபிநயம் காண்பித்தார்.மாஸ்டருக்கு ஃபீஸ் கட்டி எட்டாவது வரை படித்திருக்கிறார்.நீளமான தரைப் பலகையில் அமர்ந்து படிப்பாம்.ஆனால் கல்வி எல்லாக் காலத்திலும் கட்டணம் கட்டிப் படிப்பதாகத்தான் இருந்திருக்கிறது.மாதச் சம்பளத்தை பெற்றோர்கள் ஆசிரியர்களுக்குக் கொடுத்துவிடுவதாகச் சொன்ன அவர் தொகை எவ்வளவு என்ன என்பது நினைவில்லை என்றார்.அது அவரது கொடுப்பினைகளில் ஒன்று போலும் என நினைத்துக்கொண்டேன்.

கல்தூண்களை நிறுத்தி அதன்மீது நான்கு பக்கமும் கல்பலகைகளை நிறுத்தி தண்ணீர் டேங்குகள் இருந்தன ஊரைச் சுற்றி பல இடங்களில். விரும்பினால் மறு உபயோகத்துக்கு நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிற தரத்தில் இருக்கும் அவை இருபது லிட்டர்கள் முதல் ஐம்பது லிட்டர்கள் வரை கொள்ளளவு உடையன.முன்னம் வழிப்போக்கர்களுக்கு விடாய் தீர்க்க உதவின என்பது ஊரார் கூற்று.
ஊருக்குப் புறத்தே தெளித்தாற்போல சிலைகள்,கல்தூண்கள்,சிலா சாசனங்கள்(கல்வெட்டுகள்) புடை சிற்பங்கள் என கல்லின் கலை வடிவம் மிகுந்தே இருந்தது.

ஆலமரத்து பஸ் ஸ்டாப்பில் பேருந்துக்கு நின்ற பெண்,’ராயி உந்தி.தான்ட்லோ பிரயோஜனம் ஏம் உந்தி?’ (கல்லினால் ஆன பயனென்ன சொல்?)எனக் கேட்டு சிந்தனையைக் கிளறிவிட்டுச் சென்றார்.வயது35.

ஒரு கல்மண்டபத்துக்குள் சென்று ஓ.எம்.நாராயணன் என்கிற துறவி என நம்பத்தக்க ஒருவரை சந்தித்தேன்.தெலுகில் எங்கள் உரையாடல் நடந்தது.இப்போது தெலுங்கு என்பதை தெலுகு என எழுதுவதை பொறுப்பீர்கள் என நம்புகிறேன். ஆள் எழுத்தாளராகவும் இருந்தார்.அத்தனையும் கவிதைகள்.20 குயருக்கான பேப்பர்களை வைத்திருந்தார்.அந்த உரையாடலை எழுதினால் சிலபேச்ர்க்கு சூஃபிகள் கிடைத்துவிடுவார் என்பதால் எழுதாமல் விடுகிறேன்.
அவர்தான் எம்.பாரந்தூர் என்பது முக்காசி பாரந்தூர் என்றார்.நான் பஞ்சாயத்து அலுவலகம் உள்ள ஊரை மனதில் இருத்தி முக்கானபள்ளி பாரந்தூர் என நினைத்திருந்தேன்.இந்த ஊர் மூன்று காசிகளுக்கு சமம் என்றார்.அவரிடம் விடைபெற்றபோது அக்ஷரப் பிரவாகத்திலிருந்து கடைத்தேறிய உணர்வு.

அடுத்து சந்தித்தது எர்ரப்பா(எ) முனியப்பாவை.கையில் சிகரெட்டுடன் வீட்டின் தோற்றமே உள்ள பெட்டிக்கடையில் அம்ர்ந்திருந்தார்.ஆட்கள் வந்தால் வீட்டு அடுப்பு தேநீர்க்கடை அடுப்பாக மாறுகிறது.விறகடுப்பு.டோப்பி நேஷனல் சிகரெட்டில் தனது ’நுரையீரல் மீதான சவாலை’த் துவக்கியதாகச்சொன்னார்.கத்திரி சிகரெட் பாக்கெட்டும் அரிசியும் ஐம்பது காசுக்கு சம விலையில் விற்ற காலத்தை அவர் சொன்னபோது கத்திரிசிகரெட் பாக்கெட் விலைக்கும் சாதாரண அரிசி விலைக்கும் ஒரு மாதிரி நத்தை& ஓடு தொடர்பு நீடித்து வருவதை கண்டுபிடித்தேன்.

படிக்கணக்கு கிலோக்கணக்காக மாறியதன் ஏக பலன் ஆட்கள் பலமிழந்து போனதுதான் என்ற அவரது கண்டுபிடிப்பைச் சொன்னார்.எனக்குக் குறைவான ஒரு ஆளை வாழ்க்கை முழுவதிலும் நான் சந்திக்கப்போவதில்லை.நிறைய வீடுகளுக்கு இலவச டி.வி.கிடைத்திருப்பதை மகிழ்ந்து சொன்னார்.ஊரில் டாக்டர்கள் எஞ்சினியர்கள் ஆசிரியர்கள் யாருமில்லியா? என வினவினேன்.
தப்பினாற்போல அப்படி ஆன ஓரிருவரும் வெளியூர்களில் வசிக்கிறார்கள் என்றார்.
‘டாக்டரு லேது.மாஸ்டரு லேது.’
இங்குள்ள குழந்தைகள் படிப்பது தெலுகில்தான்.பாரந்தூர் மேல்நிலைப் பள்ளியில் 900 மாணாக்கர்.இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பயிற்று மொழிக்குழப்பம் வயிற்று மொழிக்குழப்பம் ஆகியன மிகும்.ஊருக்குள் ஜீன்ஸ்கள் சுடிதார்கள் நைட்டிகள் உள.முனியப்பாவிடம் நான் விடைபெறுவதற்குள் மூன்று சிகரெட்டுகளை முடித்திருந்தார்.

நஞ்சம்மா எழுபது வயதைக் கடந்திருந்தார்.70.பச்சை குத்தியிருந்தார்.அவரது தகப்பனார் மகளுக்கு ரூ.100 செலவில் 10 பவுன் அடித்துப்போட்டிருக்கிறார்.பூப்போல வளர்த்த பொண்ணை ஆசிரியன் அடிப்பதா என பள்ளிக்கூடத்திலிருந்து தகப்பனால் தடுத்த்டாட்கொள்ளப்பட்டவர்.அன்றைக்கு எதற்கோ ‘இடது கைப் பெருவிரல் ரேகை’ வைக்கப் போயிருந்த அவரை ஏழாம் வகுப்பு படிக்கும் பேத்தி அழைத்து வந்தாள். அன்றைக்கு சுதந்திரட்துக்கு முந்தய பிறப்பர்களைச் சந்திப்பது எனது திட்டமாக இருந்தது.அவரிடன் உரையாடுவது சிரமமாக இருந்தது.கணவனை இழந்த கழுத்தோடு காதுத்திறனை இழந்திருந்தார்.எவ்வளவு தேவையில்லையோ அவ்வளவு.பலதரப்பட்ட பதின்மர் எங்கள் உரையாடலை மொழிபெயர்த்தனர்.
‘பாட்டி சுதந்திரம்...’ என்றேன்.அவரது மொழிக்கிடங்கில் அது இல்லை.அது எனக்குப் புரியவில்லை.இஞ்சினியரிங் படிக்கும் பேரன்,’பாட்டி நீ வெள்ளைக்காரனைப் பாத்திருக்கியா?’ என்று கேள்வியை எளிதாக்கினான்.மக்கா இஞ்சினியர் இஞ்சினியர்தாண்டா என மனதுக்குள் வியந்தேன்.
சத்திரத்தில் வைத்து கல்யாணங்கள் நடப்பது தனக்குப்பிடிக்கவில்லை என்றார்.முன்பொருதடவை எப்போதோ ‘காங்கிரஸ் ரங்கசாமி’க்கு வாக்களித்தது நினைவிருக்கிறது என்றார்.(நீ கூடத்தான் வந்திட்டுப்போறே அதெல்லாம் ஞாபகம் வச்சுக்க முடியுமா?)பேருந்தில் போய் வெகுநாளாகிவிட்டது என்றார்.

முற்றாகக் கைவிட்டுவிடாத விவசாயம்.ஓடு,செங்கல் தயாரிப்பு,கன்றுகாலி கறவைகள் என பாரந்தூரின் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது.சாஷேக்களில் பொருட்கள் கிடைக்கின்றன.

நஞ்சம்மா எனது அளப்பரிய கேள்விகள் மற்றும் கோணங்களைப் பார்த்துவிட்டு திடீரென,’ஏப்பா காசுகிது குடுக்கப்போறியா?’என வினவினார். விடுதலை நாள் அன்று ரேகை வைக்கப்போன அவர்பாலான வியப்பை விட்டொழித்தேன்.நஞ்சம்மா எதிர்பாராத விதமாக காந்திஜியைப் பார்த்ததை நினைவு வைத்திருந்தார்.சிறுமி.சிறுமி.
‘அன்னிக்கு தேவகவுடா முள்ளைவெட்டி இழுத்து மேடைக்கான இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.’
தேவகவுடா என அங்குள்ளோர் குறிப்பிடுவது ஊர்முகப்பில் சிலையாய் நிற்கிற தேவய்யாவைத்தான்.

திரும்ப கடைவீதிக்கு வந்தேன்.அவரது சிலை முன் தேசியக்கொடி கட்டிய சிலை ஒன்று நீண்டநேரன் நின்றிருந்தது பிற்பகலில்.காரிலிருந்து யாரும் இறங்கி அவரு கழுத்துக்கு ஒரு மாலை போட்டுவிடுவார்கள் என எதிர்பார்த்தேன்.நினைத்ததே நடந்தது.விரும்பியது நடக்கவில்லை.காரில் இருந்தோர் அவரை கண்டுகொள்ளவேயில்லை.தேவய்யாவின் வீடும் பக்கத்தில்தான் என்று காட்டினார்கள்.தேவய்யா காந்திய ஊருக்குக் கூட்டியாந்ததெல்லாம் உனக்கு தேவையா?- எனக் கேள்வி ஓடியது.சிலைகட்குச் செவியில்லை எப்போதும்.

அறுபது ஆண்டுகள் என்பது ஐயந்திரிபற முள்ளும் மலருமேயான நினைவுதான்.

2 comments:

சங்கர் said...

//இந்தியா விடுதலை அடைந்து அறுபதின் வைரம் மின்னும் ஆகஸ்ட்-15 தினத்தில் ஒரு கிராமத்துக்குப்போனேன்.//

கரியிலிருந்து பிறந்ததாலோ என்னவோ, அவ்வப்போது முகத்தில் கரி பூசவும் செய்கிறது இந்திய சுதந்திரம்

செ.சரவணக்குமார் said...

வணக்கம் நண்பரே..
நீங்கள் வலையில் எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி