Thursday, April 28, 2011

கருதாப் பிழை...

நேற்று யூ - டியூப் பில் கரூரில் சீமான் ஆற்றிய உரை கேட்டேன். காங்கிரசை எதிர்த்து பொரிந்து தள்ளியிருந்தார். கட்டிக் காது அறுத்தல் என்பது அதுதான். நான் எழுத வந்தது அது பற்றி அல்ல.

கூட்டத் துவக்கத்தில் வந்த தமிழர் ஒருவர் இப்படித் தொடங்கினார்.
‘’பொங்கு தமிழர்க்கு இனனல் விளைந்தால் சிங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு ‘’

சம்ஹாரத்தின் அடியாகப் பிறந்த சங்காரம் என்ற வார்த்தையை அன்பர் அறிந்திருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை படிக்க நேர்ந்திருந்தாலும் ‘’ சிங்காரத்தை இப்படி தப்பா அடிச்சிருக்காங்க பாரு’’ என்ற எண்ணத்தில் ‘திருத்தி’ வாசித்திருப்பார் என நினைக்கிறேன்.

சீமான் பேசியதைப் பார்த்தபோதும் சில விஷயங்களை யோசிக்கும் வேளையிலும் அன்பர் சொன்னதிலும் அர்த்தமுள்ளது போல ஒரு தோற்றம் மேவியது,

Monday, April 25, 2011

ஓய்வென்னும் உய்வு...

விஜய் தொலைக் காட்சியில் ’நீயா? நானா?’ நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது. அதன் முதலாவது நிகழ்ச்சியில் பங்கேற்பாளராகக் கலந்துகொண்டது நினைவுக்கு வருகிறது. அது போக்குவரத்துத் தொழிலாலர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இப்போதும் வருகிற மே-1 தொழிலாளர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பாக இருக்கிற நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றிருக்கிறேன்.

லீவே போடாமல் பணி செய்கிற ஆட்களும் நிர்வாகத்தை டபாய்த்து லீவு போடும் ஆட்களும் பங்குபெற்ற சுவாரசியமான நிகழ்ச்சி. இதற்குப் புறத்திலும் இதன் அன்னியிலும் இரண்டாயிரத்தை ஒட்டிய வருடங்களில் இருந்து ஹெச் ஆர் எனப்படும் டிபார்ட்மெண்டின் வருகையையும் அதை யொட்டிய சரியத் தொடங்கியிருக்கிற தொழிற் சங்கங்களின் வீழ்ச்சியும் சமகாலப் புள்ளியில் இணைவது குறித்த ஆச்சரியக் கேள்வியை ஓரிரு வாக்கியங்களில் பதிவு செய்திருக்கிறேன். மின் தடங்கலும் நுண் தடங்கலும் ஏற்படாதவர்கள் நிகழ்ச்சியைப் பாருங்கள் என  அன்பார்ந்த முறையில் தகவல் விடுக்கிறேன்.

Sunday, April 17, 2011

நிலா நாற்பது - 15

அழிவதும் பொங்கி
வழிவதுமாகத் தானே
மிதக்கும் கண்ணாடிக்
கள் மொந்தை. சுற்றிலும்
போதையில் சிமிட்டும்
விண் கண்களின் மந்தை,

நிலா நாற்பது-14

படுத்துறங்கும் புவிமீது
பழுத்திறங்கும் கனிரசம்.
பால் வெண் படர்வின்
பாத ரசம்.

Wednesday, April 6, 2011

திசையிலி

எழுந்து விடிந்த காலை
ஒரு அவதினத்தைப் போல
உணர்வளித்தால் என்ன
செய்ய இயலும்?

முட்டிக்கொண்டு சாகலாம்
போல நரம்புகள் தெறிக்கிற
இந்த நாளின் ஆரம்பத்தை
என்ன செய்து
சீரமைக்க முடியும்.

முடிவற்றதும் நீங்கவே
நீங்காததுமான
உறைவுத் தோற்றத்தினூடே
பகல் வெளிச்சம் விஷமெனப்
பாரித்திருக்கிறது.

பொழுதின் எந்த நேரத்துக்
கதிர் உயிர்ப்பின் சிறு
துளியைக் கொண்டு வரும்
எனக் காத்திருத்தலில்
கண் அயர்ந்தே கிடக்கிறது
இருப்பின் சோர்வு.

தேநீரைத்தான் எத்தனை முறை
அருந்துவது. இப்படித் துவங்கும் எனில்
சூரியனைக் கழுத்தை
நெரித்திருப்பேன், அது மண்டைக்கும்
சற்றே
கீழாகத்தான் இருந்தது,

செய்ய ஏதுமில்லாக்
கைகளின் கண்கள்
எத்தனையோ பலநாட்கள் மாதிரி
இன்றும் பார்த்தே கழித்துவிட
ஆயத்தமாகிவிட்டன.

மீண்டும் ஒரு தேநீர், ஒரு
மூன்று முறை மூத்திரம்
பெய்தபின் ஏதேனும்
மாற்றம் தெரியக்கூடலாம். 

வாக்காளர்களுக்கு...

தேர்தல் கமிஷனால் கைப்பற்றப்படும் பணத்தின் அளவு மலைக்கவைப்பதாய் இருக்கிறது. அதிலும் இன்றைய செய்தியான , ‘திருச்சி;ஆம்னி பஸ்ஸில் அஞ்சு கோடி’ மகத்தான செய்திதான். ஆம்புலன்சு முதல் ஆம்னி பஸ் வரை என ஏற்கெனவே பேரிட்டும் ஆகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு அம்மி கொத்துகிறவர் பூட்டு குடை ரிப்பேர்காரர்கள் வரை குடைந்து எடுப்பார்கள் என நம்புவோம். வாக்காளர்களிடம் வேட்பாளர்களும் காலில் விழத் தொடங்கிவிட்டார்கள். நல்லது ஆற்றப் போகிறவர்கள் அத்தனை பாடுபட்டு அந்த வாய்ப்பை வாங்காவிட்டால்தான் என்ன கெட்டுப்போகும் என்று தெரியவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னையில் ‘பணம் வாங்காதீர்கள், கட்டாயம் வாக்களியுங்கள்’ என கலெக்டர் அமுதா முன்னிலையில் கல்லூரி மாணாக்கர்/கியர்கள் பொதுமக்களின் காலில் விழுந்து வேண்டிக்கொண்ட நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டு என்ன விதமான உணர்ச்சியை அடைவது எனத் தெரியாமல் பேதலித்துவிட்டேன்.

’முள்ளை முள்ளால் எடுப்பது’ என்பது இதுதானோ?

Friday, April 1, 2011

தர்ம அடி... சாரி... சாரி.... தர்ம புரி!

 தர்ம புரியில் வேனில் வைத்து வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததாக செய்தியும் (தொலைக்)காட்சியும் கிடைத்தது. மறு மறு ஒளிபரப்புகளில் அவர் அடித்துக்குமுறுவதுபோல அக்காட்சி சித்தரிக்கப்படுகிறது. அது தவிரவும் அடித்து உதைப்பு, அடித்துத் துவைப்பு என அளவுக்கு மீறிய வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன. இக்காட்சி அனேகமாக ‘’கொல பண்றாங்கப்பா! அய்யோ கொல்றாங்களே!’’ அளவுக்கு ஒளிபரப்பப்படலாம் என்பது என் கணிப்பு.

நல்லவேலையாக பாண்டியன் என்று விஜயகாந்த்தால் அழைக்கப்பட்ட பாஸ்கரன் விஜயகாந்த்தை திருப்பி அடிக்காததன் மூலம் ராசாபாசம் பாதி மட்டுப்பட்டுவிட்டது.

மதுரைக்காரர் என்கிற அளவில் ‘பாண்டியன்’ என்கிற பெயர் ரத்தத்திலும் சத்தத்திலும் ஊறியதாகும். ஒருவேளை பாஸ்கரனை தனிச்சந்திப்புகளில் விஜயகாந்த் ‘பாண்டியன்’ என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தாரோ என்னவோ?... பாண்டியன் தவறு செய்கிற இடத்தில் அல்லது சரியே செய்கிற பட்சத்தில் கூட செல்லமாக அவ்வப்போது தட்டுவதை விஜயகாந்த் வழக்கமாகக் கொண்டிருக்கலாம். அடித்த கையும் உதைத்த காலும் சும்மா இருக்குமா?

கிரிகெட் ஆட்டங்களில் ஸ்டம்பு கேமரா இருப்பதுபோல வேனின் பிரச்சாரச் செவ்வகத்தை ஒட்டி ஒரு கேமரா இருந்தால்தான் உண்மை நிலை விளங்கும். செய்திகளின் போது நிஜமான வேகத்தில் ஒளிபரப்பவேண்டுமே தவிர ரீ-ப்ளே, ஃப்ளர்ப், மிகை இயக்கம், தாழ் இயக்கம், மிசைக்குரல் போன்ற சினிமா சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்தி வெளியிடுவது தவிர்க்கப்படவேண்டும்.
எனக்கென்னவோ ‘ச்சே பேசாம இருடா... ’ என்கிற தொனொயில் விஜயகாந்த் வேட்பாளரின் வலதுதோள் பட்டையை ஒன்று அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளியதுமாதிரித்தான் பட்டது.

பாஸ்கரனே இதுபற்றி முறையிடாத போது நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லைதான். ஆனால் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்குத்தான் தெரியும் உண்மை எதுவென்று.

கட்சிக்காரர்களை அடிக்கும் உரிமை எடுத்துக்கொள்கிற அளவில் விஜயகாந்த் இருப்பாரேயாகில்  அவர் மக்களை என்னவெல்லாம் செய்வார் என நினைக்கும்போது திகிலாகத்தான் இருக்கிறது. அடிப்படைச் செயல்பாடுகள் இயல்பூக்கம் உயிரியல்பு ஆகியவற்றின் ஆதாரத்திலேயே விஜயகாந்த் இப்படி ஒரு ஆளாக இருப்பாராகில் மக்களாகிய நாம் சொல்லிவிடவேண்டியதுதான்.

தமிழ்ல நமக்குப் பிடிக்காத வார்த்தை. ‘மன்னிப்பு!’ ஹ்ஹா....ங்.