Monday, January 31, 2011

மாம்பழமா மாம்பழம்...

 நேற்று தில்லி சென்றதும் முதல்வர் பா.ம.க எங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்ததும் அசந்துவிட்டேன். ஏனெனில் இழுபறி நிலையில் தமிழ் நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இரண்டு கட்சிகள் பா.ம.க வும் தே.மு.தி.க வும்தான்.

ரகசியமாகப் பேச்சு வார்த்தைகள் முற்றடைந்து இறுதிக்கட்டம் வரை போனபின் தலைநகரில் முதல்வர் இப்படி அறிவித்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஓரிரவில் (ஓரிரவு என்பது அண்ணாவால் மறக்க முடியாத ஒரு பதமாக தமிழுக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் முன்னால் ஆண்டாள் அதைப் பிரயோகித்திருக்கிறார் என நினைக்கிறேன். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து...) கதை அதன் யதா ஸ்திதியை அடைந்து ராமதாஸ், ‘அப்படியெல்லாம் கிடையாதே’ எனத் தெரிவிக்க உடனே முதல்வரும் ‘ஆமா. அப்படியெல்லாம் கிடையாது’ என்று அடுத்த அறிவிப்பு கொடுத்துவிட்டார்.

முதல்வருக்கு தார்மீக அளவையில் ‘அவர்கள் எங்கள் கூட்டணி’ என்று கூற முன்னம்போட்ட ஒப்பந்தம் இருக்கிறது.மற்றபடி வேட்புமனு தாக்கல் செய்வது வரை ராமதாசை நம்பமுடியாது என்று அவருக்குத் தெரியாமல் இருக்காது.
மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அன்னையைச்( சோனியா) சுற்றினால் ஆதாயகரமாக இருக்கும் என்று முதல்வர் மு.க நினைத்தார்.
மாம்பழத்துக்கு இவ்வளவு டிமாண்ட் இருந்தால்தான் அம்மா (ஜெ) வைச் சுற்றச் சரியாக இருக்கும் என்று ராமதாசும் நினைத்தார்.
எப்படியோ பா.ம.க வுக்கு முப்பது சீட்டுகள் உறுதியாகிவிட்டது.

Friday, January 28, 2011

உ(க)ள்ளக் காதல்

நேற்றைய தினமலரில் ஒரு செய்தி கள்ளக் காதலர்கள் தற்கொலையைப் பற்றியது. வெளி நாட்டில் கணவன் வாழும் மனைவியுடன் இங்கிருக்கும் ஒருவருக்கு காதல். இங்குள்ளவருக்கும் மனைவி இருக்கிறார். இந்நிலையில் காதலன் வீட்டுக்கு காதலி தேடிச் செல்கிறார். வீட்டிலிருந்த மனைவி கோபித்துக்கொண்டு சண்டைபிடித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்.

காதலன் காதலி இருவரும் தூக்கில் தொங்குகின்றனர்.காதலன் மரணம்.காதலி உயிர் ஊசல். இது செய்தி. செய்தியை கணினி வழிப் படித்த நான் அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தையும் படித்தேன்.

பின்னூட்டம் மலேசியா - ‘கில்’லாங் கிலிருந்து வந்திருந்தது. ‘சாவட்டும் உடுங்க’ என்பதுதான் பின்னூட்டம். அனுப்பியவரின் பேரைப் பார்த்தேன். வாசுதேவன் என்றிருந்தது. நல்லவேளை ‘சாவு தேவன் ‘ என்றில்லாதது குறித்து சற்றே ஆறுதலடைந்தேன்.

Wednesday, January 26, 2011

தாமரை பூணுதல்

இந்த ஆண்டு தாமரை விருதுகள் பட்டியலைப் பார்த்ததும் - தமிழ் சாகித்ய அகாடமி விருது நாஞ்சில் நாடனுக்குக் கிட்டிய மகிழ்வைப் போன்றே - பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்திற்குக் கிட்டியதைக் கண்டதும் மகிழ்ச்சி தலைவாரிக்கொண்டு ஆடியது. தங்கத் தாமரை மகனே... லா லலல்லா... என்று பாடத்தோன்றியது.
சிற்பம் ஓவியம் நாட்டியம் முதலாய கலைகளில் எனக்கு அவ்வளவு தேர்ச்சியும் தொடரலும் கிடையாது என்பதால் அத்தகையவற்றை விட்டுவிட்டு எழுத்தாளர்கள் யாரேனும் தாமரையாளர்களாகத் தமிழில் அறிவிக்கப்பட்டிருப்பார்களா எனத் தேடினேன். வழக்கம்போல ஏமாற்றம்தான்.

கன்னடத்தில் தேவனூரு மகாதேவ- வுக்குக் கிட்டியிருக்கிறது. (அவரது சிறுகதைத் தொகுப்பு தமிழில் வந்திருக்கிறது. பசித்தவர்கள் என்பது தலைப்பென நினைவு.) ஏதோ ஒரு கதையில் , ‘நட்சத்திரங்கள் வானில். பைத்தியமடிக்குமளவு அத்தனை நட்சத்திரங்கள்’ என்றொரு வாக்கியம் வரும்.

உண்மையில் விருதுகள் தரும்போது அத்தனை அத்தனை நட்சத்திரங்கள் தேர்வுக்கு முன்னர் மிளிர்வார்கள் என்பது உண்மைதான்.தமிழில் கவிதைக்கு சாகிதய அகாடமி எப்போது கிடைக்கும்? ஆராதனை-க்குப் பரிசு பெற்ற அப்துல் ரகுமானை நான் மறந்துவிடவில்லை.தேவதேவன், தேவ தச்சன் (எனது இந்தப் பனிக்காலக் குறிப்பில் நான் விரும்பிய சில பேர்களை இதில் நான் குறிப்பிடவில்லை) இப்படிப் பல கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கவிதை என்பது மொழி நதியின் அதி திரவம். ஆண்டுக்கு ஒரு சாகித்ய அகாடமிதான் எனும்போது அனைவருக்கும் அது சாத்யமில்லை எனும்போது தாமரை போன்ற விருதுகளால் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையா?

இந்தப் பட்டியல் தயாரித்தல் மனுச்செய்தல் எல்லாம் எந்த ரூபங்களிலும் முகாந்திரங்களிலும் நடைபெறுகிறது என்பது எனக்குப் பிடிகிட்டவில்லை.மொழியைக் கணிக்கிற வேலையிலும் புறக்கணிக்கிற வேளையிலும் இங்கு பெருந்தவறு நடந்துகொண்டிருக்கிறது என்பதுமட்டும் புரிகிறது. ஒப்பீடுகள் மனதை மேலும் சிதிலமாக்கி ஆறுதலைத் தரும்.

மலயாளத்தில் ஓ.என்.வி குருப்புக்கு விருது கிட்டியிருப்பதாக நண்பர் சொன்னார். உறுதிப்படாத தகவல். செல்வேந்திரன் விசாரித்துச் சொல்லலாம். ஆனால் குருப்பின் ஒரு திரைப்பாடல் வரி மனதில் வந்துவந்து மின்னியும்பின்னியும் செல்கிறது.

‘மௌனம் தேடி மொழிகள் யாத்ரயாய்....’

Tuesday, January 18, 2011

மின்னஞ்சலி

இன்று இந்தக் காலை இடையறாது மின்னஞ்சல் அனுப்பும் நண்பரின் sangkavi.blogspot.com மில் அந்தச் செய்தியைப் படித்தேன். கோபி லட்சுமண அய்யர் காலமாகிவிட்டார். அய்யர் உலக அளவில் அறியப்படவேண்டியவர். உள்ளூர் அலவிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.(அவரைப் பற்றிய விதந்தலுக்கு சங்கவியின் வலைப்பூவை வாசிக்கவும்.)

இறுதிச் சடங்கில் நூற்றுக்கும் குறைவான நபர்களே வந்திருந்தனர் என்பது கோபி நகருக்கு அவர் ஆற்றிய முன்னோடித் தொண்டுகளினை ஒப்பிடுகையில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கறது. நூற்றுக்கணக்கான ஹெக்டேர்களை வைத்திருந்த அவரது குடும்பத்திற்கு கடைசியில் அவருக்கு ஆறடிதான் சாஸ்வதமாகியிருக்கிறது.

தன்னுயிர் இயல்பின் அடிப்படையில் அவர் (நாம் பாவிக்கிற அளவு) ‘தியாகி’யாக தன்னை உணர்ந்திருக்கமாட்டார் என எண்ணுகிறேன்.சில ஆண்டுகளுக்கு முன் அவரைப்பற்றி தேவிபாரதி அல்லது ஜோதிமணி என நினைக்கிறேன் சொல்லக்கேட்டு அவரைச் சென்று பார்க்கவேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன்.

ஆனால் கோபிசெட்டி பாளையத்துக்கே கூடப் போகமுடியவில்லை.இனிப் போக நேர்ந்தால் ‘இப்படியும் ஒருவர் வாழ்ந்தார்’ என எண்ணிச் சிலிர்ப்புற வேண்டியதுதான். தேசியக் கொடி போர்த்தப்படாமல் அவரது ஈமக் கிரியை நடைபெற்றது சமகால வாழ்வின் நிர்த்தாக்ஷண்யக் குறியீடு. தானமாக வழங்கப்பட்ட அவரது கண்கள் இனியடுத்த பாரத நிகழ்வுகளையும் காணக்கூடும்.

அரசியலர்கள்,ஆசிரியர்கள் , மாணவர்கள்  மற்றும் பொதுமக்கள் என அவ்வளவு ஆட்கூட்டமுள்ள ஒரு ஊரில் வெறும் நூறுபேரைத் தவிர அத்தனை ஆட்களும் படு பிசியாக இருந்திருக்கிறார்கள் எனும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

‘மந்திரியின் நாய் இறந்தது
அத்தனை பேர் இழவு கேட்க
வந்தார்கள். மந்திரி இறந்தார்.
ஒரு நாயும் வரவில்லை.’ (அனேகமாக தாகூர் என நினைக்கிறேன்)

என்கிற வாக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன. அப்போதைக்கு பயன் தருகிறவர்கள் பாலது உலகம் இருக்கிறது.மறுமைகளில் நம்பிக்கை இல்லாமலிருப்பது எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. இல்லாவிடில் அவர் சுவர்க்கத்தில் துன்புறக்கூடும். அவருக்கும் மறு உலகம் பற்றிய நம்பிக்கை இல்லாமலிருப்பதையே அவரது கண் தானமும் காட்டுகிறது.

Friday, January 14, 2011

என்னமோ போங்கள்!

பொங்கல் வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரியப்படுத்த உத்தேசித்துத்தான் கணினியை இயக்க ஆரம்பித்தது. அதற்கு முன் இன்றைய நாளிதழ் செய்திகளை ஒருமுறை படித்துவிடலாமே என ‘தின சரி’ களின் பக்கம் பார்வையை ஓட்டியபோதுதான் செய்தியைப் பார்த்தேன்.
சபரி மலை ‘புல்லு மேடு’ வாகன விபத்து. பக்தர்கள் இல்லாத காலத்தில் ஆளரவமற்றதும் அலைவரிசை ஆம்புலன்ஸ் வசதிகளும் அற்றதும் ஆன பிரதேசமாகையால் செய்திகளின் முழு வடிவம் இன்னும் மனத்தொகுப்புக்கு வர இயலாதவாறு வெவ்வேறுவிதமான செய்திகள்.

ஒரு நாளிதழில் ஜீப் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனப் பார்த்ததும்  ஜீப்பில் நூறு பேரா என திகைத்தேன். பிறகு  வேறு பத்திரிக்கைகளை வாசிக்கையில் விபத்தில் பேருந்து ஒன்றும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி எனக்கண்டதும் எங்கேணும் விமான விபத்தோ என்றுதான் முதல்வினாடிச் சந்தேகம் எழுந்தது.’விமானத் தாவளம் அமைத்து தரிசிக்கப்படும் அளவில் இன்னும் மணிகண்டனுக்கு வாய்ப்புகள் கூடவில்லை. நூறு...தொண்ணூறு... நூற்றுக்கும் மேல் எனச் சொல்லப்படும் எண்ணிக்கைகள் வருத்தத்தில் ஆழ்த்துகின்றன. விழாக்காலங்களில் அருள்த்தலங்களில் கூடும் தமிழர் அல்லது பக்தர் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தக்கூடியதுதான். இது குறித்து விமர்சிக்க என்ன இருக்கிறது. எதோ ஒரு சூழலில் நாமும் இப்படி நேரக்கூடியவர்கள்தான்.

இன்னும் கொஞ்சம் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை இரு மாநில அரசுகளும் மேற்கொள்ளவேண்டும். நேற்று ‘தமிழக அரசியல்’ இதழை வாசித்தபோது ‘பாண்டி பக்தர்களை’ (தமிழ்ச்சாமிகள்) கேரளக் காவலரும் கடை வியாபாரிகளும் நடத்துகிற விதம் பற்றிப் படித்தபோது, ‘இவ்வளவு அவமானப் பட்டு சாமி கும்பிடவேண்டுமா?’ என்றே தோன்றியது.

வருடத்தையும் வருமானத்தையும் வருங்காலத்தையும் வாபரின் நண்பன் சாஸ்தா குறைவறக் கவனித்துக்கொள்வானெனில் எளிய அவமானங்களைச் சகித்துக் கொள்ளவேண்டியதுதான். ஊரெல்லாம் சாமியாகப் பார்க்கும் ஒரு நபரை எதோ ஒரு கணம் ஒரு காக்கிச் சட்டை ‘’ஏ பாண்டிப் பட்டி!’ என விளிச்சால் என்ன மோசம் போகிறது?

டாஸ் மாக் விற்பனையைக் குறைக்கிற காரியத்தில் நான் எப்பவும் ‘கார்த்திகை மாதத்தில் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருக்கிற’ பக்கத்தில்தான் நிற்பேன்.

வருமானம் தருகிற தளம் என்கிற அளவிலாவது சில நேர்த்திகளை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.பக்தர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டால் ‘மகர ஜோதி பார்ப்பதினும் பார்க்க வீட்டில் ஒரு மத்தாப்புக் கொளுத்துவது உத்தமம்’. என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

அதற்கும் முன் தரிசனம் என்றால் என்னவென்ற குறைந்தபட்சப் புரிதலுக்கு மனிதன் உள்ளாகவேண்டும். இதை ‘மாலைகள்’ எப்போதும் தருவதில்லை.

Wednesday, January 12, 2011

நிலா நாற்பது -12

அதி முதல்இரவின் தனி ஒளி
நிலா கண்டு திகைத்து இமைகள்
திறந்த விண் விழிகள்
பல பகல்வரை கூடித்துடிக்கும்.

Sunday, January 9, 2011

மீன்களுக்கு உணவு- அரசியல் குளம்

போனவாரம் விஜயகாந்த் கனவில் வந்தாரே என்று நேற்றுதான் தே.மு.தி.க (உரிமை மீட்பு மாநாடு!) சேலத்தில் நடந்த தினத்தில் விருதகிரி படம் பார்த்துமுடித்தேன்.முதலமைச்சரே ஆகிவிட்ட நிலையிலும் கூட எம்.ஜி.ஆர் , ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்றுதான் படமெடுத்தார். அவர் மக்களுக்கு ஆற்றவேண்டியவற்றை (அதாவது உரைகளை) நாடோடி மன்னனிலேயே ஆற்றிவிட்டதால் விஜயகாந்த் அளவு மெனக்கெடவில்லை. விருதகிரியில் வில்லன்கள் மன்சூர் அலிகான்,ஆஷிஸ் வித்யார்த்தி முதல் காமெடியன்கள் வெளிநாட்டு முகங்கள் என அனைவரும் விஜயகாந்தின் கொ.ப.செ க்கள்தான்.படம் பார்த்துவிட்டு முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது உரிமை மாநாடு சிறப்பாக (பெரிய வெட்டுக்குத்து இல்லாமல்) முடிவடைந்துவிட்டது.

நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு பேனர் நாட்டியதை கின்னஸில் பதியுங்கள் என சுதீஷ் சொல்லியதன் மூலம் தமிழக வெகுஜன கொண்டாட்டக் கலாசாரத்துக்கு கட்சி தயாராகிவிட்டது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

பா.ம.க அடுத்த மூவை சரியாக வைக்கவேண்டும் என்கிற (விஸ்வநாதன் ஆனந்துக்கு நிகரான) பதற்றத்தை எட்டியிருக்கிறது.

வைகுண்டசாமி அய்யாவின் விழாவில் ‘வேலிகள் இல்லா உலகம்’ என ஜெயலலிதா லாவணி பாடியிருக்கிறார்.

தேவையென்றால் விமானம் ஏறி டெல்லி செல்கிற மு.க வாசலுக்கு வந்த மன்மோகனை பார்க்கப்போகாமல் சட்டசபை வளாக மீன்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்துவிட்டார்.

சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கத் தமிழகத்துக்குத் தெரியவில்லை.

ஜெயலலிதா இல்லாத மூன்றாம் அணி அமையும் பட்சத்தில் இதர இரண்டை அவர் முற்றாகப் பெருக்கித் தள்ளிவிடுவார். விஜயகாந்த்தின் பேச்சு அ.தி.மு.க - தே.மு.தி.க உறவுப் பாலத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த அணிச் சேர்க்கையையே அரிவாள் விரும்பவும் கூடும். அரிவாள் கைக்குப் போக விரும்பாது.

சொல்லி அடிக்கிற அழகிரியை தி.மு.க அவருக்கேற்ப நடத்தவில்லை என்பதால் பாரதூரமான விளைவுகளை கழகத்துக்கு அவர் கொணர்ந்து சேர்ப்பாரோ என்கிற அச்சுறுத்தலும் இருக்கிறது.

இந்த நிலையிலும் பத்திரிக்கைகளைப் பகைத்துக்கொள்ளும் ஜெயலலிதாவைப் பார்க்கையில் அவர் என்றும் மாறாத இளமையுடனும் நிலைமையுடனும் காட்சிதருகிறார்.

அற்றுப்போகாத கூட்டு தொல். திருமா & தி.மு.கதான் போலிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியும் காட்சியும் என்னவென்பது இரண்டேபேருக்குத்தான் தெரியும். ஒருவர் கடவுள் இன்னொருவர் கி.வீரமணி. இருவருமே ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பதால்தான் கால’மே’ கடவுளாய் நிற்கிறது.