Sunday, January 9, 2011

மீன்களுக்கு உணவு- அரசியல் குளம்

போனவாரம் விஜயகாந்த் கனவில் வந்தாரே என்று நேற்றுதான் தே.மு.தி.க (உரிமை மீட்பு மாநாடு!) சேலத்தில் நடந்த தினத்தில் விருதகிரி படம் பார்த்துமுடித்தேன்.முதலமைச்சரே ஆகிவிட்ட நிலையிலும் கூட எம்.ஜி.ஆர் , ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்றுதான் படமெடுத்தார். அவர் மக்களுக்கு ஆற்றவேண்டியவற்றை (அதாவது உரைகளை) நாடோடி மன்னனிலேயே ஆற்றிவிட்டதால் விஜயகாந்த் அளவு மெனக்கெடவில்லை. விருதகிரியில் வில்லன்கள் மன்சூர் அலிகான்,ஆஷிஸ் வித்யார்த்தி முதல் காமெடியன்கள் வெளிநாட்டு முகங்கள் என அனைவரும் விஜயகாந்தின் கொ.ப.செ க்கள்தான்.படம் பார்த்துவிட்டு முதுகு வலியால் நான் அவதிப்பட்டுக்கொண்டிருந்த போது உரிமை மாநாடு சிறப்பாக (பெரிய வெட்டுக்குத்து இல்லாமல்) முடிவடைந்துவிட்டது.

நாங்கள் ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு பேனர் நாட்டியதை கின்னஸில் பதியுங்கள் என சுதீஷ் சொல்லியதன் மூலம் தமிழக வெகுஜன கொண்டாட்டக் கலாசாரத்துக்கு கட்சி தயாராகிவிட்டது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

பா.ம.க அடுத்த மூவை சரியாக வைக்கவேண்டும் என்கிற (விஸ்வநாதன் ஆனந்துக்கு நிகரான) பதற்றத்தை எட்டியிருக்கிறது.

வைகுண்டசாமி அய்யாவின் விழாவில் ‘வேலிகள் இல்லா உலகம்’ என ஜெயலலிதா லாவணி பாடியிருக்கிறார்.

தேவையென்றால் விமானம் ஏறி டெல்லி செல்கிற மு.க வாசலுக்கு வந்த மன்மோகனை பார்க்கப்போகாமல் சட்டசபை வளாக மீன்களுக்கு உணவளித்துக்கொண்டிருந்துவிட்டார்.

சான்றிதழ் வழங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்கத் தமிழகத்துக்குத் தெரியவில்லை.

ஜெயலலிதா இல்லாத மூன்றாம் அணி அமையும் பட்சத்தில் இதர இரண்டை அவர் முற்றாகப் பெருக்கித் தள்ளிவிடுவார். விஜயகாந்த்தின் பேச்சு அ.தி.மு.க - தே.மு.தி.க உறவுப் பாலத்துக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இந்த அணிச் சேர்க்கையையே அரிவாள் விரும்பவும் கூடும். அரிவாள் கைக்குப் போக விரும்பாது.

சொல்லி அடிக்கிற அழகிரியை தி.மு.க அவருக்கேற்ப நடத்தவில்லை என்பதால் பாரதூரமான விளைவுகளை கழகத்துக்கு அவர் கொணர்ந்து சேர்ப்பாரோ என்கிற அச்சுறுத்தலும் இருக்கிறது.

இந்த நிலையிலும் பத்திரிக்கைகளைப் பகைத்துக்கொள்ளும் ஜெயலலிதாவைப் பார்க்கையில் அவர் என்றும் மாறாத இளமையுடனும் நிலைமையுடனும் காட்சிதருகிறார்.

அற்றுப்போகாத கூட்டு தொல். திருமா & தி.மு.கதான் போலிருக்கிறது. தமிழகத்தில் அடுத்த ஆட்சியும் காட்சியும் என்னவென்பது இரண்டேபேருக்குத்தான் தெரியும். ஒருவர் கடவுள் இன்னொருவர் கி.வீரமணி. இருவருமே ஒன்றும் சொல்லமாட்டார்கள் என்பதால்தான் கால’மே’ கடவுளாய் நிற்கிறது.

No comments: