Thursday, June 30, 2011

சமகால நகைச்சுவைப் படம்

போன வாரத்தில் பிராஞ்சியேட்டன் ( பிரான்சிஸ் சேட்டன்) என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். பார்த்தவுடன் சிரிப்பு வராமல் காட்சிகள் கடந்துபோனபின் சிரிப்பு வருவது இந்தப் படத்தின் சிறப்பு.
தொழிலதிபரும் அரிசிக்கடை அதிபருமான மம்முட்டியை ஊரார் விளிப்பது அரி(சி)ப் பிராஞ்சி என்றுதான்.

இந்த அவப்பேரைப் போக்கிக்கொள்ள சங்கத்தில் பிரசிடெண்டாகப் போட்டியிடுவது பத்மஸ்ரீ பட்டத்துக்கு முயற்சிப்பது என பலவேலைகள் செய்து கை நஷ்டப்படுகிறார். கடைசியில் பத்ம ஸ்ரீ என்ற பெயரை உடைய ப்ரியா மணி அவர் வாழ்வில் இடறுவதால் சுபத்தை நோக்கித் திரைக்கதை செல்கிறது.

பொருட்செலவு குறைவாகவே பிடிக்கும் இந்தப் படத்தை தமிழில் சத்ய ராஜ் முயன்றால் எப்படி இருக்கும் என யோசித்தபோது இன்னும் சுவாரசியமாக இருந்தது. 

Tuesday, June 21, 2011

தொலைத்த ஒரு கவிதை

கவிதைக்குள் போகுமுன்னரே அதைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிடுதல் உத்தமம். பெயரில்லாமல் ஒரு கவிதை பிரிண்ட் அவுட் வடிவில் என்னிடம் கிடக்கிறது. சொந்தப் பைகளில் பழைய பேப்பர் பொறுக்குவதில் கிடைத்தது.கவிஞர் யாரென யூகிப்பதில் மொழி சார்ந்து அல்லாமல் வாழ்வியல் தொடர்பு சார்ந்து அது   ‘தூரன் குணா’அவர்களின் கவிதை என ஆலோசிக்கிறேன்.

வளர்சிதை மாற்றங்கள் பெற்ற நிலையில் இன்றைய அவரது கவிதைகள் இதுபோல இல்லை. இதுபோன்ற தருணங்களும் அவருக்கு வாய்க்கும் நிலையிலுமவர் இப்போது இல்லை. அவரது சேமிப்புக் கோப்பில் இல்லாமல் என்னிடம் இது தங்கியிருப்பின் இது பேறு.

தொலைந்த ஒரு மணி நேரம்
_________________________________

பொங்கல் அவ்வருடம் திங்கட்கிழமை
வேறு மாநிலத்திலிருக்கும் எனக்கோ
விடுமுறை இல்லை

இரு தினங்கள் விடுப்பெடுத்துக் கொண்டு
நிரம்பி வழியும் பலபஸ்கள்
மாறி வீடு சேர்ந்தேன்

தந்தை இல்லாத மாலையின்
ஒரு மணி நேரத்தை
எனக்களிப்பதாய் சொல்லியிருந்தாய்

புன்னகையின் தீபமேந்தி வந்திருந்தாய்

வேலையைப் பற்றி
இரவை உண்ணும் கொசுக்கள் பற்றி
ஒவ்வாமல் போகும் உணவு பற்றி
அறை நண்பர்களின் குறட்டை பற்றி
மாதக் கடைசியின் பற்றாக்குறை பற்றி
பயணக் களைப்பைப் பற்றி

இலையுதிர் காலத்து மரத்தளவு
வார்த்தைகளை உதிர்த்தபடி இருந்தேன்

சிரித்தபடி கரங்களை
கன்னங்களில் தாங்கிக் கொண்டு
கேட்டுக் கொண்டிருந்தாய்

மெள்ள இரவு தூவப்படுகையில்
விடைபெற்றுப் போனாய்

வலதுபக்கம் சரியும் பாதையில்
புள்ளியாய் நீ மறையும் வரை
முதுகு பார்த்தபடி இருந்தேன்

இடது பக்கம் மேடேறிச் செல்லும்
எனது நிழல் விழுந்த பாதையில்
நடந்தபோது நினைத்துக் கொண்டேன்

அந்த முறையும்
சொல்லாமல் விடப்பட்ட
எனது பிரியத்தை
எனது காதலை
__________________
___________________

இவ்வளவுதான். ஆனாலும் தன்மையிற் கவி சொல்லும் இந்தக் குரல் ஆணானதோ பெண்ணானதோ எதுவாக இருந்தாலும் (அறை நண்பர்களின் குறட்டை ஒலியிலிருந்து அது ஆண் என்று தெளிவாகிறது)  எதை எதைப் பற்றியெல்லாம் பேசுகிறது என்கிற பட்டியலைப் பார்க்கிறபோது... குறைந்த பட்சம் 7x7 நாற்பத்தி ஒன்பது ஜன்மங்களுக்கு காதலைச் சொல்ல இயலாது என்றுதான் தோன்றியது.

Sunday, June 19, 2011

ஒரு பரவச தருணம்

’கன்னி வாடி’ என்கிற என் ஊரின் பெயரை முதன் முதலில் திரைப்படம் ஒன்றில் கேள்விப்பட்டதும் பார்த்ததும் கோழி கூவுது என்கிற திரைப் படத்தில்தான். ஒரு கல்யாண நிச்சயதார்த்த ஓலை வாசிப்பில் அந்தப் பெயரைச் சொல்வார்கள்.

மூன்று நாட்களுக்குமுன் வேறொன்றும் கேள்விப்பட்டேன். பழைய படம் ஒன்றில் ‘கன்னி வாடி’ என்கிற ஊர்ப்பெயர் வருவதுடன் அந்த ஊரையே காட்டுகிறார்கள். ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் காட்சி வர்ணனை அடிப்படையில் எங்கள் கன்னி வாடியோ அல்லது திண்டுக்கல் மாவட்ட அப்பிய நாயக்கர் கன்னிவாடியோ அல்ல அது. சேலத்துக்குப் பக்கத்தில் எதோ ஒரு ஊரை கன்னி வாடி என்று காட்டியிருக்கிறார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம்,காளி என்.ரத்தினம். டி.எஸ்.துரைசாமி, டி.ஆர்.ராமச்சந்திரன்என்கிற நகைச்சுவைக் காவியர்களோடு சி.டி.ராஜகாந்தமும் நடித்த படம்.ராஜ காந்தம்தான் கன்னிவாடிக்காரி. சௌ சௌ என்கிற படம்:அதாவது மிக்சர் என்கிற அர்த்தத்தில். பிளாக் மார்கெட், விடாக்கண்டன் கொடாக் கண்டன் ஆகிய பார்ட்டுகளும் அதே படத்தில் உண்டு. ஒரு படம் மூன்று கதை கான்செப்ட்.

சைக்கிள் ஓட்டத் தெரியாத துரைசாமி கன்னி வாடிக்குப் பெண் பார்க்கப் போவது சைக்கிளில். கன்னீ வாடி! என்கிற பெயரே காளி என்.ரத்தினத்தை ஈர்த்துவிட துரைசாமியை சைக்கிளில் வைத்து அந்த ஊருக்குத் தள்ளிக்கொண்டே செல்கிறார். ஒரு சுண்டல் கிழவி மீது சைக்கிள் மோத சண்டையாகி தப்பிச்செல்லும் துரைசாமி பெண் வீட்டுக்குப் போய்விட தப்பிஓடி ஏரிக்கரை அருகில் ஊரின் பெயர்ப் பலகையைப் பார்க்கும் ரத்தினம் கன்னி வாடி, கன்னி வாடி என ராகம்போட்டு உச்சரித்துக்கொண்டு அங்கே தண்ணீருக்கு வரும் ராஜகாந்தத்தை ஓரக் கண்ணால் பார்க்கிறார்.

ராஜகாந்தம் தலைமையில் கும்பல் மொத்தமாக ரத்தினத்தை மொத்த அவர் தப்பித்து வந்து சேரும் இடம் பெண் பார்க்கும் வீடு.... இப்படியாக அவர்களது சைக்கிள் பயணம் முடிகிறது.

வாழ்வின் திசைப் போக்கை மாற்றிய மறக்க இயலாத இடங்களில் ஒன்றான பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் நான் அவரைச் சந்திக்க நேர்ந்தது. கெழுதகை அண்ணார் விஜயன் விஜயன் மூலமாக அறிமுகமான மறு நொடியில் என் ஊர்ப் பெயரை விசாரித்ததும் ‘கண்களில் காட்சிகளே விரியும்படி ஏராளமான தகவல்களுடன்’ இதைப் பகிர்ந்துகொண்டவர் விட்டல் ராவ்.

அவரது ‘நதி மூலம்’ நாவலை இன்னொரு முறை படிக்க ஆசைப் படுகிறேன். கிடைத்தால் சௌ சௌ படத்தினையும் பார்த்திட வேண்டும்.

Saturday, June 4, 2011

நிலா நாற்பது - 16

நித்யம் தரித்து
மரித்த பின்னாலும்
பொழிவிற் சோராது
வான் மசிக் குடுவை.

ராம லீலா மைதானம்- ஊழல் விரோதம்: சூழல் மிக வினோதம்



04.06.20011 .கர வருடம் வைகாசி இருபத்தொன்றாம் நாள் திரிதியை திதியில் தில்லி ராம லீலா மைதானத்தில் ‘ஊழலுக்கு எதிரான’ தனது உண்ணா விரதத்தைத் தொடங்கியிருக்கிறார் யோகா குரு ராம்தேவ்.

வீட்டில் எனது நாட்காட்டியிலும் கிணறு வாஸ்துக்கு இது நல்ல நாள் என்றே போட்டிருக்கிறது. ஊழல் தூர் வாரப் பட்டு நல்ல கிணத்துத் தண்ணியாக சுத்தமாக எல்லோருக்கும் எல்லாமும் பகிரக் கிடைத்தால்தான் எத்தனை மகிழ்ச்சி.

புகழுக்காக அவர் இதைச் செய்கிறார் என்று நாம் இதைக் கொச்சைப் படுத்திவிடக் கூடாது. புகழுக்காக பட்டினி கிடந்து ஒருவர் நோன்பு நோற்கத் தயாராவார் என நான் நம்பவில்லை. மிகச் சில நாட்கள் முன்னதாக ஹசாரே காட்டிய வழியில் யோகா குருவும் இந்த உண்ணா நோன்புக்குத் தயாராகிவிட்டார்.

நாடு முழுக்கவும் பல்வேறு இடங்களில் கிளைகள் உருவாகி பல பெரு சிறு நகரங்களிலும் பலர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார்கள். கிளைகள் என்றதும் இதை வங்கிக் கிளை போன்று குறிப்பிட்டுவிட்டேனோ என யாரும் கருதவேண்டாம். கிளை என்றால் உறவு என்ற பொருளில் இந்தியாவின் ஆன்மீக மற்றும் ஆத்மீக பந்தத்தினால்தான் அவருக்கு இத்தகைய வரவேற்பு.

செய்தி கொண்டு செல்லும் அல்லது செலுத்தும் ஊடகங்களால் இந்த உடனடிப் பரவலும் சாத்தியப்பட்டிருக்கிறது. ‘அவர் கூறுவது நியாயம்தான்’ என்று செய்தித் தொடர்பு அமைச்சரே கூறும் போது செய்தி மிகப் பெரும் வலிமையுடையதாக மாறுகிறது.

முதற்கண் ராம் தேவினை மறுத்துப் பேச இங்கு யாருக்கும் நாவில்லை என்பதாக சூழல் இருக்கிறது.அன்னா ஹசாரேவும் முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு தார்மீக ஆதரவைத் தருவார்.

ராம் தேவ், ராம் லீலா மைதானம் ஆகிய பதங்களின் தொடர்ச்சியாக காந்தி சொன்ன ராம ராஜ்யம் என்கிற பதப்பிரயோகமும் நமக்கு ஞாபகம் வருகிறது. ஆனால் பிரயோகம் வேறு கிடைக்கிற யோகம் வேறு.

‘ஐநூறு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒழியுங்கள்’ என்று அவர் சொன்னதாகவும் அதை அதிகாரத்தில் உள்ளவர்கள் மறுத்திருப்பதாகவும் செய்தி படித்தேன். ராம் தேவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் நான் இந்த நிமிடத்தைய (குடும்பக்) கையிருப்பான எண்ணாயிரத்து நானூறு ரூபாயில் எட்டாயிரத்தை இழந்து வெறும் நானூறு ரூபாய்க் காரன் ஆகிவிடுவேன்.

ஏ.டி.எம் மெஷின்களுக்கும் இப்போது ’புழங்கும்’(அ) புழுங்கும் சூழலுக்கும் ராம் தேவ்வின் கோரிக்கையைப் புரியவைக்க முடியாது. அவரது குழந்தைக் காலத்தைப் போல காலணா ஓட்டைக் காசும் நாலணா எட்டணாக்களுமாகப் புழங்கினால் ஊழல் ஒழிந்துவிடும் என அவர் நினைக்கிறாரா தெரியவில்லை. முப்பது வெள்ளிக் காசுகளுக்கு இறைத் தூதர்களைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்து ஆயிற்று ஆயிரங்களின் காலம்.

ஆனால், ராம் தேவின் இந்தக் கோரிக்கையில் உள்ள அறியாமையையே அவரது நேர்மையாகவும் லட்சிய வாதமாகவும் பார்க்கிறேன். லட்சிய வாதங்களுக்கான மரணச் சங்கொலி ஏற்கெனவே கேட்டாகிவிட்டது எனப் பேசப் படும் சூழலில் இப்படி ஒருவர் ஆரம்பித்து வைப்பதும் அதை அடுத்து நாடேகமும் சிலசில சலனங்கள் ஏற்படுவதும் மகிழ்ச்சியளிக்கிறது.

’உங்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது. அது பரிசீலிக்கத் தக்கதாய் இருக்கிறது.உண்ணா விரதத்தைக் கைவிடுங்கள் என அரசு கபில் சிபல் மூலமாகக் கேட்டுக்கொண்டாகிவிட்டது. அப்புறமும் பலபேர்.

வட இந்திய ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை குத்தகைக்கு எடுக்கப் போகின்றன என்பது லட்சக்கணக்கான பேர்கள் பங்கெடுப்பதற்கான திருவிழா ஏற்பாட்டிலிருந்து தெரியவருகிறது.

ஹிந்தித் திரைப்பட நட்சத்திரங்களின் ஆதரவு இதற்குக் கிடைக்காதென்பது பேட்டிகளால் தெரிகிறது. பெயர் கூட மாற்றப் படாத ஒரே படத்தில் எத்தனை தடவை நடிப்பது என்கிற எண்ணம் அவர்களுக்கு இருக்குமாயிருக்கும்.

ஊழல் ஒழிப்புப் போராட்டத்திற்கு தார்மீக அல்லது மானசீக ஆதரவை அளிப்பது நமது கடமை.

எவ்வளவெவ்வளவோ மாற்றங்களை சிறுகச் சிறுகக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. மனவலிமையும் மன நேர்மையும் பொதுப் புத்தியில் உறைய வேண்டிய கடப்பாட்டை அது கோரி நிற்கிறது.

சத்தியம் வெல்லும் என்பதற்காக சடங்குகளில் பங்கேற்காமல் நிர்விகல்பமாய் இருக்கமுடியாது. ராம் தேவ் தனது இந்தப் போராட்டத்தை பத்து நாட்களுக்கும் மேலாகக் கொண்டு செல்வார் என நம்புகிறேன். யோகங்களைப் பற்றி நான் கருதுகிற யூகங்களை ஒட்டி இதைச் சொல்லுகிறேன்.

Wednesday, June 1, 2011

ஒரு கவிதையும் சமச்சீர் கல்வியும்

பள்ளிக் குழந்தைகள் எல்லாம் பதினைந்து நாள் உபரி விடுமுறையில் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்தப் பதினைந்து நாளை அனுபவிக்க விடாமல் டியூசனுக்கோ அல்லது ‘தங்கள் நிலையில் உத்தரவாதமாகவும் உறுதியாகவும் இருக்கிற பள்ளிக்கோ போகும் பிள்ளைகள் தங்கள் வரலாற்றின் பலனை அனுபவிக்கிறார்கள்.

சிலபல கோடிகளை செலவு செய்து புதிய (அல்லது பழைய ) புத்தகங்கள் அச்சிடப் பட்டுக்கொண்டிருக்கின்றன. ’எனது கவிதயை வேண்டுமானால் நீக்கிவிட்டு பாடத்திட்டத்தை அமலாக்குங்கள் ‘ எனக் கருணாநிதி கேட்டுக்கொண்டார். அப்படியாயிருப்பினும் புதிதாக அச்சிட்டுத்தான் ஆகவேண்டும். தாளைக் கிழித்துவிட்டு பாடப் புத்தகத்தை அப்படியே தொடரும் கல்வி முறை இன்னும் அமலுக்கு வரவில்லை.

ஒன்று விளங்குகிறது.(நீண்ட காலப் பார்வையற்று) தேவையற்ற செலவுகளுக்கு வழி வைப்பதாகவும், தேவையான செலவுகளைச் செய்யாமல் விடுவதாகவும்தான் நமது அரசியல் மற்றும் கல்விக்கான பிணைப்புகள் இருக்கின்றன.
.
;இன்றைய செய்தி நாளைய வரலாறு ’ என்பதைப் புரிந்துகொண்ட தி.மு.க அவர்கலுக்கு ஏற்ற பாடத்திட்டத்தை முயன்றிருக்கக் கூடும் என்பதும் அச்சங்களில் ஒன்றுதான். ஆனால் ஜெயலலிதா நேற்றுத் தெரிவித்துவிட்டார்... கவிதை காரணமல்ல. ஒட்டு மொத்த கல்வியியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் பாடத்திட்டம் மாறுகிறது என.

தனியார் கல்விப் புலத்தில் ஃபீஸ்கள் மற்றும் பீசுகளில் அவர் தலையிடப் போவதில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார். பெற்றோர்கள் அரசுப் பள்ளிக் கல்வியைப் புறக்கணிக்கிற நிலைப் பாட்டை எடுத்தபின் . தாங்கள் போய்ச்சேர்ந்த நிறுவங்களிடம் ‘காசைக் குறை’ என்று சண்டை போடுவது என்ன வித நியாயம் எனத் தெரியவில்லை.( சும்மா சொல்லிக் கொடுக்க அவன் என்ன மாமனா மச்சானா....)

யோசித்துப் பாருங்கள் அதிகமாகப் பத்தும் இருபதும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்களிடம் பிள்ளைகளைப் படிக்கப் போடாமல் நான்கும் ஐந்தும் ஆயிரங்களாக சம்பளம் வாங்கும் பள்ளிகளில் ‘நீங்கள் காசும் கொடுத்து’ப் படிக்கப் போடுகிறீர்கள் என்றால்.... இடையில் நடப்பதுதான் என்ன.

அரசுப் பள்ளியில் படிப்போருக்கு அறுபது சதம் ஒதுக்கீடு என்பது மாதிரி சட்டம் வந்தால் கூட ஒப்புக்கொள்ளலாம் என்பது மாதிரி தோன்றுகிறது.
அனைவருக்கும் கல்வி இலவசம், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி இல்லை,மந்திரி மகனும் கூலித் தொழிலாளி மகனும் கலெக்டர் மகளும் ஒரே பள்ளிக்கூடம் (உடைகள் உட்பட அப்போது அரசின் பொறுப்புக்கு வந்துவிடக்கூடும்).

இந்த நிலைமை வராமல் சமச்சீர் கல்வி என்பது சாத்தியமல்ல என்றுதான் நினைக்கிறேன். சமச் சீர் என்பது நமது பெயரிடும் ஆர்வத்தால் உச்சரிக்கப்படுகிறது.

‘சமன் செய்து சீர் தூக்கி அங்கே ஒருபால் கோடாமை கோடி பெறும்.’

ஆரோக்கியமான கல்வி மறுக்கப்படுகிற கோட்டுவிளிம்பில்தான் எத்தனை கோடிப்பேர்.