Saturday, December 24, 2011

வியாபார உலகம்... உலக வியாபாரம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எல்லைகளில் மக்கள் குழுமுதலும் குமுறுதலும் ஒரு பக்கம் நடந்தவாறிருக்க தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கேரளீயர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இப்படித் தாக்கப் படுவதில் பிரச்சினை சார்ந்த உணர்ச்சி வசப்படுதல் தவிர்த்து பூர்வாங்க உளவியலும் இருக்கிறது.

எங்கிருந்தோ வந்து கண்ணாடி டெகரேட் பண்ணி கல்லாப் போட்டு உக்காந்துருக்காம் பாரு.... என்கிற தரத்திலானது அது. ( மதவெறி/ மொழி வெறி/இனவெறி/ உள்ளூர் வெறிகள் தனி - வல்லம் தாஜூபால்)

தொலைக்காட்சியில் முத்தூட் நிறுவனத்தாரின் கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதை சிலநேரம் பார்த்தேன். நல்லவேளையாக ஊழியர்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள்: மகிழ்ச்சி.

கலவரத்தைக் காரணம் காட்டி கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்களேயானால் பெட்டகத்துக்குள் இருக்கும் தங்கங்கள், அவற்றை அடகு வைத்தவர்கள் கதி என்ன? என ஒரு வினாடி திக்கென்று இருந்தது.

கடைகளில் அடகு வைத்தவர்கள் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்தோ பந்தனம் திட்டாவிலிருந்தோ வந்து வைக்கவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான ஆபரணங்கள்.

இத்தகைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பெரியபெரிய நகைக்கடைகளின் நிலவரம் பற்றி அறிவதற்கு ஆவல் மேலிட்டு நண்பர் ஒருவருக்கு போன்செய்தேன். என்ன இருந்தாலும் கிராமத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அவ்வளவு பேரையும் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிய மாபெரும் புரட்சியாளர்கள் அல்லவா அவர்கள்?

‘பெரிய கடைகள் எல்லாம் நல்லா பாதுகாப்போட நடக்குது’ - என்றார் நண்பர்.

 ‘’நிறைய போலீசா?”

‘’ஆமா நெறைய போலீஸ்’’

‘’ஆக கடை ஊழியர்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்தில்லை...’’

‘’ நீங்க வேற சலம்பல் பண்ணினா அங்க இருக்கற செக்யூரிட்டிக பொதுமக்களைப் போட்டெறிஞ்சிருவானுங்க... போலீஸ் பாதுகாப்பு பொதுமக்களுக்குத்தான்.’’

Saturday, December 3, 2011

ஹ்

பரணில் கட்டித் தொங்கவிடப்பட்ட
பலூன் புலியின் வயிற்றிலிருந்து
புலியின் கண்ணுக்குப் பாய்கிறது
டியூப்லைட் அம்பின் பிம்பம் இந்த
மின்சார விழிப்பிரவில்.
(மின் விசிறி ஓடுகிறது).

ஒருவேளை குழந்தைகளின் கண்ணுக்கு
மட்டுமே காணக் கிடைப்பதாயிருக்கலாம்
இக் காட்சி.

எப்போது என்ன செய்வார்கள் எனத்
தெரியாதென்பது
பெற்றோர்களைக் குழந்தைகளுக்கும்,
என்ன செய்தாலும்  முகமாறுதல்
இல்லையென்பது குழந்தைகளுக்குப்
பொம்மைகளையும்
அன்பாக்கி வைத்திருக்கிறது.