Monday, January 31, 2011

மாம்பழமா மாம்பழம்...

 நேற்று தில்லி சென்றதும் முதல்வர் பா.ம.க எங்களுடன்தான் கூட்டணி என்று அறிவித்ததும் அசந்துவிட்டேன். ஏனெனில் இழுபறி நிலையில் தமிழ் நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இரண்டு கட்சிகள் பா.ம.க வும் தே.மு.தி.க வும்தான்.

ரகசியமாகப் பேச்சு வார்த்தைகள் முற்றடைந்து இறுதிக்கட்டம் வரை போனபின் தலைநகரில் முதல்வர் இப்படி அறிவித்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் ஓரிரவில் (ஓரிரவு என்பது அண்ணாவால் மறக்க முடியாத ஒரு பதமாக தமிழுக்கு வந்து சேர்ந்தது. அவருக்கும் முன்னால் ஆண்டாள் அதைப் பிரயோகித்திருக்கிறார் என நினைக்கிறேன். ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்ந்து...) கதை அதன் யதா ஸ்திதியை அடைந்து ராமதாஸ், ‘அப்படியெல்லாம் கிடையாதே’ எனத் தெரிவிக்க உடனே முதல்வரும் ‘ஆமா. அப்படியெல்லாம் கிடையாது’ என்று அடுத்த அறிவிப்பு கொடுத்துவிட்டார்.

முதல்வருக்கு தார்மீக அளவையில் ‘அவர்கள் எங்கள் கூட்டணி’ என்று கூற முன்னம்போட்ட ஒப்பந்தம் இருக்கிறது.மற்றபடி வேட்புமனு தாக்கல் செய்வது வரை ராமதாசை நம்பமுடியாது என்று அவருக்குத் தெரியாமல் இருக்காது.
மாம்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு அன்னையைச்( சோனியா) சுற்றினால் ஆதாயகரமாக இருக்கும் என்று முதல்வர் மு.க நினைத்தார்.
மாம்பழத்துக்கு இவ்வளவு டிமாண்ட் இருந்தால்தான் அம்மா (ஜெ) வைச் சுற்றச் சரியாக இருக்கும் என்று ராமதாசும் நினைத்தார்.
எப்படியோ பா.ம.க வுக்கு முப்பது சீட்டுகள் உறுதியாகிவிட்டது.

No comments: