Wednesday, January 26, 2011

தாமரை பூணுதல்

இந்த ஆண்டு தாமரை விருதுகள் பட்டியலைப் பார்த்ததும் - தமிழ் சாகித்ய அகாடமி விருது நாஞ்சில் நாடனுக்குக் கிட்டிய மகிழ்வைப் போன்றே - பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்திற்குக் கிட்டியதைக் கண்டதும் மகிழ்ச்சி தலைவாரிக்கொண்டு ஆடியது. தங்கத் தாமரை மகனே... லா லலல்லா... என்று பாடத்தோன்றியது.
சிற்பம் ஓவியம் நாட்டியம் முதலாய கலைகளில் எனக்கு அவ்வளவு தேர்ச்சியும் தொடரலும் கிடையாது என்பதால் அத்தகையவற்றை விட்டுவிட்டு எழுத்தாளர்கள் யாரேனும் தாமரையாளர்களாகத் தமிழில் அறிவிக்கப்பட்டிருப்பார்களா எனத் தேடினேன். வழக்கம்போல ஏமாற்றம்தான்.

கன்னடத்தில் தேவனூரு மகாதேவ- வுக்குக் கிட்டியிருக்கிறது. (அவரது சிறுகதைத் தொகுப்பு தமிழில் வந்திருக்கிறது. பசித்தவர்கள் என்பது தலைப்பென நினைவு.) ஏதோ ஒரு கதையில் , ‘நட்சத்திரங்கள் வானில். பைத்தியமடிக்குமளவு அத்தனை நட்சத்திரங்கள்’ என்றொரு வாக்கியம் வரும்.

உண்மையில் விருதுகள் தரும்போது அத்தனை அத்தனை நட்சத்திரங்கள் தேர்வுக்கு முன்னர் மிளிர்வார்கள் என்பது உண்மைதான்.தமிழில் கவிதைக்கு சாகிதய அகாடமி எப்போது கிடைக்கும்? ஆராதனை-க்குப் பரிசு பெற்ற அப்துல் ரகுமானை நான் மறந்துவிடவில்லை.தேவதேவன், தேவ தச்சன் (எனது இந்தப் பனிக்காலக் குறிப்பில் நான் விரும்பிய சில பேர்களை இதில் நான் குறிப்பிடவில்லை) இப்படிப் பல கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். கவிதை என்பது மொழி நதியின் அதி திரவம். ஆண்டுக்கு ஒரு சாகித்ய அகாடமிதான் எனும்போது அனைவருக்கும் அது சாத்யமில்லை எனும்போது தாமரை போன்ற விருதுகளால் கவிஞர்களும் எழுத்தாளர்களும் கவுரவிக்கப்பட வேண்டியவர்கள் இல்லையா?

இந்தப் பட்டியல் தயாரித்தல் மனுச்செய்தல் எல்லாம் எந்த ரூபங்களிலும் முகாந்திரங்களிலும் நடைபெறுகிறது என்பது எனக்குப் பிடிகிட்டவில்லை.மொழியைக் கணிக்கிற வேலையிலும் புறக்கணிக்கிற வேளையிலும் இங்கு பெருந்தவறு நடந்துகொண்டிருக்கிறது என்பதுமட்டும் புரிகிறது. ஒப்பீடுகள் மனதை மேலும் சிதிலமாக்கி ஆறுதலைத் தரும்.

மலயாளத்தில் ஓ.என்.வி குருப்புக்கு விருது கிட்டியிருப்பதாக நண்பர் சொன்னார். உறுதிப்படாத தகவல். செல்வேந்திரன் விசாரித்துச் சொல்லலாம். ஆனால் குருப்பின் ஒரு திரைப்பாடல் வரி மனதில் வந்துவந்து மின்னியும்பின்னியும் செல்கிறது.

‘மௌனம் தேடி மொழிகள் யாத்ரயாய்....’

No comments: