Saturday, November 14, 2009

லேசானது முதல்...

ஊரெங்கும் மழையாக இருக்கிற ஐப்பசி இரவில் இதை எழுதுகிறேன்.இந்நேரம் மனதிற்கு மிக உகந்த ஒரு விருப்பத்தைச் சொல்லிவிட விழைகிறேன். காது வழி நிகழ்ச்சிகளிலேயே எனக்குப் பிடித்தது மத்தியானம் ஒன்றரை மணி வாக்கில் செய்தி முடிந்தவுடன் வானொலியில் கூறப்படுகிற வானிலை அறிக்கைதான். வங்கக்கடலும் அரபிக்கடலும் தவறாமல் இடம் பெறும் இதைக் கேட்கிற போது அனேகமாக இந்த அறிவிப்புகள் ஐந்து நிமிடம் நீடிக்குமாக இருக்கும்.ஆனால் இதைக் கேட்கும் போது நேர ஓர்மையற்று,கால நினைவற்றுத் திளைத்துவிடுகிறேன்(கால நினைவற்ற என்ற வாக்கியம் வண்ணநிலவனின் குளத்துப்புழை ஆறு கவிதையின் நினைவில்). கேட்பது ஐந்து நிமிடமே ஆனாலும் உடலை ஆகாய சஞ்சாரமாக்கிக் கொண்டு திராவிட நாடு முழுதும் சுற்றி வந்தது போல ஒரு உணர்ச்சி தோன்றும்.

உதாரணமாக அதில் உச்சரிக்கப் படும் ஊர்ப்பெயர்கள் இவ்விதம் இருக்கும்.

மார்த்தாண்டம்,ஒரத்தநாடு,தேன்கனிக்கோட்டை,திருத்தணி,நெல்லூர்,கடப்பா,ஸ்ரீகாகுளம்,ராயலசீமா(இங்கெல்லாம்..),கோவா,
சிக்மகளூர்,சிவமொக்க,மங்களூர்,பாலக்காடு,வடக்கு மலபாரின் உட்புறப்பகுதி,பெருந்தலமன்னா,இரிங்ஙாலக்குடா....

கெள்விப்பட்டும் படாததுமான அத்தனைவிதமான பேர்கள்.அதிலும் வெளியே மழை பெய்து கொண்டிருக்கிற சூழ்நிலையில் இப்படி வானொலியில் கேட்கும் போது எல்லா ஊரின் மழையும் மணக்கண்ணில் விரியும். இந்த ஊர்களிலெல்லாம் இப்போது நாம் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனை வேறு வரும்.

வானொலியைவிட தொலைக்காட்சி இப்படியான விவரங்கள் தருவதில் குறைவான சேவையே ஆற்றுகிறது. செய்திகளின் முடிவில் அதிகபட்சம் எட்டுப்பத்து நகரங்களின் வெப்ப தட்ப அளவு மற்றும் மழைப்பொழிவுகளைச் சொல்லுவார்கள்.

அப்படிச் சொல்லிக்கொண்டிருந்த தொலைக்காட்சிச் செய்திகளில் திடீரென அந்தச் செய்தியைச் சொல்ல அந்தத்துறையின் முகாமிப்பட்ட ஒருவரே தோன்றினார். பெயர் ரமணன்.ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அவர் என்று நினைக்கிறேன்.அவரது தோற்றம் அதாவது தொலைக்காட்சிப் பிரத்யக்ஷம் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு.

இதற்கு ஒப்புமைகள் சொல்லவேண்டுமெனில் ஜெயில்சிங்,டி.என்.சேஷன்,பி.ஹெச்.பாண்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.அதாவது அவர்கள் இருந்ததனாலேயே அந்தப் பதவி அதிகமும் வெளி உலகத்துக்கு தெரியவந்ததே அதுபோல இது. தொலைக்காட்சிகள் பாதிப்புச் செலுத்த வந்த காலத்தில் இப்படி சேதி சொல்ல வந்தது ரமணனின் திருச்சுழி என்று கருதுகிறேன். சுழி என்பது இங்கு தமிழ் வழக்கத்து பேறு எனம் பொருளில் தந்தேன்.

இப்போது புயற்காலங்களில் -காற்றழுத்தத் தாழிக் காலங்களில்- அனேகமாக அவர் தினமும் தோன்றுகிறார்.தொலைக் காட்சி செய்தி வாசிப்பவர்களைப் போலவே ஒருமுறை காச்சி அளித்த உடையில் மறுமுறை காச்சி அளிக்கக்கூடாது என்கிற தார்மீக நிர்ப்பந்தம் வேறு அவருக்கு இருக்கிறது. எப்படிச் சமாளிக்கிறாரோ அது அவர்பாடு.ஆனால் சமாளிக்கத்தான் செய்கிறார் என்பது கண்கூடு.

ஊடகங்கள் அல்லது பொது-புதுப் பொருள்களின் பயன்பாடு சிலருக்குத்தான் வாய்க்கும்.அதற்கு உதாரணங்கள் உள.பத்திரிக்கையை அப்படி பயன்படுத்தியது தமிழ்வாணன் & சன். இதில் சன்னுக்கு தொப்பி மிஸ்ஸிங்.

பிளெக்ஸ் பேனரின் அதிக பயனை அடைந்தவர்கள் சினிமாக்காரரில் இளையதளபதி.அரசியலில் தளபதி.தளபதிக்கு நிகராக அழகிரி.

இதெல்லாம் அந்தந்த காலச்சூழலில் தமது மானுட இருப்பும் நேர்வதால் உண்டாவதால் ஆன பலன்கள்.அது தொலைக்காட்சி வழியே ரமணனுக்கு வாய்த்திருக்கிறது.அவரது குரல் பற்றிச் சொல்வதென்றால் வலியவந்து காதில் ஏறும் குரலல்ல.அசிரத்தையாய் இருந்தீர்களானால் ஒன்றுமே புரியாது போய்விடும் என்பதான குரல்.ஆனால் கவனமெடுத்துக் கேட்கும் போது ஏமாற்றாமல் முழுச்செய்தியையும் தெரிவித்துவிடுகிற குரல். அதிலும் அவர் ’ஓரிரு இடங்களில்’ என்பதில் ‘ஓரிரு’ என்பதை உச்சரிக்கிற விதமே அலாதியானது. அதேமாதிரி யாராவது உச்சரித்துக்காட்டினால் ஓரிரு பொற்காசுகள் கூட வழங்கிவிடலாம்.ரமணன் தொலைக்காட்சியில் தோன்றும்பேதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. மத்தியான ரேடியோச் செய்தி அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிது மகிழ்ச்சி.எவ்வளவு மழை அளவோ அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. அவரது காட்டில்,
லேசானது முதல் மிதமானது வரை.

3 comments:

சங்கர் said...

இதை தற்செயல் நிகழ்வென்று கூறுவதா என தெரியவில்லை, ரமணன் குறித்து நான் இருதினம் முன்பு எழுதிய பதிவு இது (http://nee-kelen.blogspot.com/2009/11/blog-post_09.html) , நேரம் இருந்தால் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்

ஸ்ரீராம். said...

ரமண ரசனைகள்

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லதொரு உணர்வை கொடுத்தது இந்த இடுகை .நானும் ஊர்பக்கம் பயணித்தது போல