Friday, May 7, 2010

பொன் முட்டை....

மூன்று நாட்களுக்கு முன் அண்ணன் மாதவராஜ் ‘தீராத பக்கங்க’ளில் இட்ட இடுகையை இப்போதுதான் காலையில் ஆயிபோயிக் கழுவி வந்த கையோடு படித்தேன். ஜெ என்றால்... என்கிற மகத்தான பதிவை இட்டிருந்தார். ஒரு குழந்தை இசா(2) போவது பற்றியது அது.
பதிவில் வரும் பீயான ’ஜெ’யை குழந்தையோடு சேர்ந்து புரிந்துகொள்ளாமல் செல்வியோடு சேர்ந்து புரிந்துகொண்டால் அது அவர்கள் தவறு.

ஏனெனில், மாதவராஜுக்கு முன்னெழுத்தாகவும் முன்னெழுத்தாகவும் உடனெழுத்தாகவும் ஏற்கெனவே இரண்டு ‘ஜெ’கள் உண்டு. இது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.நிற்க.. உடல் சுகாதாரம் உடலியல் போக்குகள் குறித்து நாகரிகம் என்ற படுதாவில் ஒரு சங்கதியையும் பேசாமல் காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொடிருக்கிற சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று.

இரண்டு உதாரணங்கள்.2001 இல் ஒரு மாணவரின் மருத்துவ ஆய்வறிக்கை (ஸ்டடி) முடிவடைய நானும் உதவினேன்.(ஐம்பதுக் கணக்கான கேள்விகள் கொண்ட நூற்றுக்கணக்கான தாள்களை அவர் ஆட்கள் பிடித்து நிரப்பவேண்டும்)அப்போது ஒரு நபரிடம்
வயது;32.படிப்பு;எட்டாவது. தினமும் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள்? என்று கேட்டதற்கு அவர் ஐந்து முறை என்றார். நான் திகைத்தேன். நானே மூனுமுறைதானே இவன் என்னைவிடப் பெரிய ஆளா என்று. ‘’ஏங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க. அஞ்சு தடவையா?’’
‘’ஆமாங்க. தினம் போறவன் எனக்குத் தெரியாதா? ஒன்னுக்குப் போறதத்தான கேக்கறீங்க?’’
- ஆக மலம் என்றால் ஒன்னுக்குப் போறது என நினைத்துக்கொண்டிருக்கிற ஆட்கள் இருக்கிற மாநிலம் நம்முது.

ஒரு தடவை எங்க ஊர் ஐயன் ஒருவர் இருட்டில் முள்ளுக்காடு ஒன்றுக்கு வெளிக்கிருக்கப் போனார்.ஒரு சுற்று கழிந்து முடிந்து இரண்டாம் கழிப்புக்கு இடம் மாறி அமர்கையில் தொடையில் முள் கீறவும் பாம்பு ஒன்று நகர்ந்து போகவும் சரியாக இருந்தது. பாம்புதான் போட்டுவிட்டது என மருத்துவமனைக்குச் சென்றவரிடம் ‘’முதல்ல காலைக் கழுவிக்கிட்டு வாங்க அய்யா’’ என்றார் டாக்டர். கால் கழுவுதல் என்பது பீ கழுவுதலின் இடக்கரடக்கல்.
அய்யன் உயிர்ப்பதற்றத்தில் இருந்ததால் இடக்கரடக்கல் சாரமிழந்தது. காலை மட்டும் கழுவிக்கொண்டு போய் டாக்டருக்கு பீக்குண்டியைக் காட்டினார் அய்யன்.

டாக்டர் இரண்டாம் முறையும் கால் கழுவிவருமாரு பணித்தார்.மறுபடியும் பீக்குண்டி.டாக்டர் நாகரிகத்தைக் கைவிட்டார்.’’யோவ் போயி பொச்சக் கழுவிக்கிட்டு வா.’’

நாகரிகம் எல்லாம் ஒரு அளவுக்குத்தான். மதிப்பீடுகள் மாறுபடுகிற அன்றுதான் வார்த்தைகள் பொருள் பெறும். காட்டாக பாலியல் தொழிலாளி என்று பகர்ந்துகொண்டு ‘தெவ்விடியா’ என மதித்தீர்களேயானால் வார்த்தை மாறுவதில் பொருளில்லை.ஆயி போவதற்கு அழகியலின் உச்சமாக நான் வைத்த பெயர்தான் பொன்முட்டை இடுதல்.

சிகரெட் குடிப்பவர்கள் ஆயி போகும்போது கடைசிக் கங்கு முடிவதற்கும் அவர்கள் ஆயி போகும் நேரம் முடிவதற்கும் சரியாக இருப்பது எப்படி என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். மனைவியிடம் தம் அடிப்பதில்லை என்று வாக்குத்தத்தம் செய்த நண்பனின் கழிவறையில் மனைவி தீப்பெட்டியைக் கண்டு பிடித்துவிட்டாள். அவன் சொன்னான்.’’ இல்லம்மா... பாத்ரூம் போகையில சிகரெட்டெல்லாம் குடிக்கிறதில்ல. ஆனாப் பாரு இந்த தீக்குச்சி கொளுத்தறத விடமுடியலே.’’

இப்படிப் பாவ்லோவின் நாய்ப் பழக்கம் எவ்வளவோ உள்ளன். இற்றை நாளிலும் மலத்தில் புது டிசைன் கண்டுவிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தம் கழிவைத் தாம் பாராதவர் யாரும் உளரா?

மாதவராஜ் பதிந்த குழந்தை கழிந்த ஜே, சின்ன வயதுகளில் நான் ஒன்னுக்கில் வரைந்த இரட்டை இலைகளையெல்லாம் ஞாபகப் படுத்துகின்றன. ஒன்னுக்குப் பட்ட கையோடு சிறுவர்கள் தீண்டவந்தால் பதிலுக்கு நாம் நம் தலை முடியைப் பிடித்துக்கொண்டு தீட்டிலிருந்து தப்பவேண்டும்.

குழந்தைகளின் பீயினால் உலகம் நாறிவிடும் என்று பத்து மணி நேரத்திற்கு குழந்தைகளுக்கு உறிஞ்சு கோமணம் (ங்கொய்யால அதுக்குப் பேரன்னங்க) கட்டுகிற மானுடர் வாழும் மாட்சிமை தங்கிய நாட்டில் இன்னும் பலதைப் பேசவே வேண்டியுளது.அவர்கள் தான் என்ன பண்ணுவார்கள் பயண வழியில் நீங்கள் குண்டி கழுவத் தண்ணீர் தர எவருமில்லை. பதினாறு ரூபாய் பாட்டில்காரர்கள் தவிர.அப்புறம் மோட்டலில் போட்டோ மாட்டியிருந்தால் லிட்டர் தண்ணி இருபது ரூபாயாயிருந்தால் ஆச்சரியமும் படாதீர்கள் சண்டையும் போடாதீர்கள்.

குழந்தையின் குண்டிகளை கல்லெடுத்துத் துடைத்துவிடுங்கள்.’மலந் துடைத்த கற்களை மழைக்காலம் கழுவிப்போகும்.’

5 comments:

மாதவராஜ் said...

க.சீ!
ரசித்து, சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.

அப்புறம் எப்படியிருக்கீங்க...

க. சீ. சிவக்குமார் said...

அன்பின் மாதவராஜ்!
நன்றாக இருக்கிறேன்.40ஐத் தாண்டுவதற்கான வினோத மன நிலைகளும் பழகிய பழக்கத்தைக் கைவிட முடியாத மனக்குழப்பத்தின் தனி இணைவரிசையும் கலந்து ஓடுகிறது. பாதகமில்லை.

Nathanjagk said...

ஏற்கன​வே ஐய​னை குப்புறப்​போட்டு ஒரு இடு​கை எழுதியதாக நி​னைவும் உண்டு?

சுப. முத்துக்குமார் said...

ஐயன் பாடு கரிசல் காட்டில் பீ பட்ட பாடு போங்க.... குழந்தைகளின் பீயினால் உலகம் நாறிவிடும் என்று பத்து மணி நேரத்திற்கு குழந்தைகளுக்கு உறிஞ்சு கோமணம் கட்டுகிற மனுசப்பயக கிட்ட நெறயப் பேசணும்க.



மேலும்....நிறையச் சிரித்தேன். நன்றி.

சென்ஷி said...

அருமை :)