Wednesday, July 7, 2010

வெளியெல்லாம் உள்ளே...

சுற்றிலுமுள்ள பலதிசை விரிந்த
கோளங்களின் வெளியை
வானம் பார்க்கிறது.

தன் கட்டுப்பாட்டிலும்
வேண்டியபொழுது
ஆட்டுவிக்கப் படுவதாகவும் வெளி
இருக்கவேண்டும் என விரும்புகிறது.

கதிகள் கட்டுக்குள்
இயைவதற்கான அறிகுறிகள்
எதுவும் தோன்றாதபோது

தன்னிடமிருந்து
-எப்போதுமிருக்கிற
நிறப்பிரிகையினை உற்பவிக்கும்
சாயத்தை நினைவு கூர்ந்தவாறு

தூரிகையைக் கையிலெடுக்கிறது.
பிறகு அறைக் கதவைத் தாழிட்டு
அண்டங்கள் கேட்குமாறு
விசும்பலுடன் கண்ணும் மூடி
லயித்து
தன்னைத்தானே வரைகிறது வானம்.

2 comments:

நேசமித்ரன் said...

நாயின் நாவு நக்கித் தணிக்க வேண்டியிருக்கிறது ஆக்டோபஸின் கரமெல்லாம் ஏந்தப் பெற்றிருக்கும் காயத்தின் ஒழுக்கை

நகக்கண்ணைப் போல் டார்ச் அடித்துப் பிதுக்கும் மருத்துவனின் விரல் பிடித்திருக்கும் கீழிமை பெருக்கியபடி இருக்கிறது நிலையறியா கருவிழியுருள திரவத்தை

பாலையின் கூடாரக் கால்கள் இறங்கும் ஆழம் நங்கூரத்தின் அலைவுடன்,இரவின் உதர விதானம்
நெடுவனத்தின் மயிர் கோதுமசைவில்

அடையலற்ற நீரடிப் பாறைகள்
சேர வாய்த்த மேகங்களின் ஒளி விரல் தீண்டி விலகவும் துகளவும்
தாயம் ஆறு விழுந்து உள் நுழையும் அற்புத நாளில் கூடவும்
வாய்த்திருக்கிறது

க. சீ. சிவக்குமார் said...

பதிலுக்கு எழுதிய கவிதை ஆறுதலாயிருக்கிறது நேசா!