Friday, July 30, 2010

ஆதியிலே கோழி இருந்தது....

இன்று ‘காலடி’ யில் என் கண்ணடி பட்டு ஜகநாதனின் ‘கிளஸ்டர் - நோவா ‘ அறிவியல் புனைகதை படித்தேன். அது ஒரு வேளை புனைகதையாக அன்றி நிஜம் கூட ஆகலாம் எனினும் காலத்தை 2018 க்குள் கொண்டே கதை சொல்வதால் அது புனைவு என ஊர்ஜிதமாகிறது. ஜகனின் அறிவு ஆவேசமும் கூட அதில் தெரிகிறது. இதே நாளில் தூரன் குணா வின் அகப்பாடலில் ‘திரிவேணி’ படித்துத் திக்குப்பிரமை அடித்திருந்தபோது ஜகனின் கதை படிக்க அது வேறுவித உணர்வைத் தந்தது.

ஜகனின் பிளாக்கிலிருந்து அவரது விருப்பப் பூக்களில் சரங்கட்டியிருந்த ‘வால் பையன்’ வலைப்பூவுக்குப் போனபோது அவர் கோழி முந்தியா- முட்டை முந்தியா என்பது பற்றி எழுதியிருந்தார். சமீப ஆராய்ச்சியில் கோழிதான் முதலில் என கண்டடைந்திருக்கிறார்களாம். அதை முட்டையோ முட்டை போடும் பெட்டைக் கோழியோ ஒப்புக்கொண்டதா தெரியவில்லை.

வால்பையனும்  -என்னைப் போ - சாரி நானும் அவரைப்போலவே சின்ன வயதுகளிலேயே கோழி முந்திக் கருத்தில் உறுதியாயிருந்தேன். கோழி முந்திக் கருத்துக்கு ஆஃப் பாயில்,பூஞ்சோலை போன்றவற்றை நினைவூட்டும் வண்ணப் படங்களுடன் அவர் விவரமளித்திருக்கிறார். தர்க்கபூர்வ விவாதங்களும் நிறுவுதல்களும் எனக்கு ஏலாது. நான் தீர்மானித்திருந்தது ஒன்றை முன்வைத்துத்தான்.

அடைகாக்க ஒரு கோழியின்றி முட்டையினம்தான் எப்படித் தொடர்ந்திருக்கும்? ...ஆக இதை ஒப்புக்கொள்கிற வாழியர் நம் மக்கள்.இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் நாமக்கல் கோழிப்பண்ணையொன்றில் இங்குபேட்டர்களுக்குள் இருபத்தியொரு நாட்கள் உழல்வார்களாக.