Friday, July 8, 2011

சமச்சீர் - சாமான்ய - மான்ய....

நேற்றைய தினத் தந்தியில் ஒரு விசித்திர செய்தி கண்ணில் பட்டது.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை அருகே வசவ நாயக்கன் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்துக்கொண்டிருப்பதாக.

போன ஆண்டு வரை எட்டாக இருந்த பள்ளியின் மாணவத்தொகை, அனைவரும் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய்விட்டதில் ஒன்றில் வந்து நிற்கிறது.

இப்போதைக்கு இந்த ஒருத்திக்காகத்தான் ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு சத்துணவுப் பணியாளர், சமையலாளர் எல்லோரும்.... ஆக அனேகமாக தமிழ் நாட்டின் மிகச் செலவு கூடிய தொடக்கப்பள்ளி மாணவி இவளாகவே இருக்கக்கூடும். செய்தியைப் படித்த உடனே இவளைப் பார்க்கவேண்டும் என்று தோன்றிவிட்டது.
இந்த ஒரு மாணவியும் இப்போது சான்றிதழைக் கேட்பதால் அனைவரும் திகைக்கிறார்களாம்.

இந்த குஜிலியம் பாறையைச் சுற்றி கடந்த 5 ஆண்டுகளுக்குள் போடி பட்டி, வாத்தியார் புதூர்,வீ.பாறைப் பட்டி,கருங் குளத்துப் பட்டி, முத்தக்கா பட்டி ஆகிய ஊர்களில் தொடக்கப் பள்ளிகளை மூடியிருக்கிறார்கள்.

எனக்கென்னவோ பள்ளிகள் மூடப் பட்டதற்கான காரணம்,  ‘குஜிலி’யம் பாறை வட்டார மக்கள் குழந்தை உற்பத்தியைக் குறைத்துக்கொண்டிருப்பார்கள் என்கிற காரணத்தினால் இருக்க முடியாது என்றே படுகிறது.

எல்லோரும்  நாலும் அஞ்சும் சம்பளம் வாங்குகிற மெட்ரிக்குலேசன் ஆயா மாரிடம் பிள்ளைகளைப் படிக்கப்போட்டுவிட்டார்கள். எந்தச் சீராக இருந்தாலும் அரசுப் பள்ளிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தை இது காட்டுகிறது.

அரசு பள்ளிகளை மொத்தமாக மூடிவிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கல்விக்கான மானியத் தொகை வழங்கிவிட்டால் ஒரு தொல்லையும் இல்லை பாருங்கள். மாமா மார் அப்பச்சி மார் நடத்துகிற பள்ளிகளில் படிச்சுக்க வேண்டியது அவரவர் பாடு. படிக்கிறவன் படிச்சுக்கோ பாழாப்போறவன் போய்க்கோ.

No comments: