Sunday, December 20, 2009

தலைமைக் கழகப் பேச்சாளர்கள்

நன்னிலம் நடராஜன், பொத்தனூர் மணிமாறன்,திருப்பூர் கூத்தரசன்,பொத்தனூர் மணி மாறன்,திருப்பூர் விஜயா,புதுக்கோட்டை விஜயா, வண்ணை ஸ்டெல்லா... ஊர்ப்பெயரை முன்னால் வைக்காத கட்சிப்பேச்சாளர்களைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்.

ஊர்ப்பெயரையே கொஞ்சம் மாற்றி, கலிங்கத்துப்பரணியினை நினைவூட்டும் விதமாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பை இழந்து தமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டவர் ஜெயங்கொண்டானைச் சேர்ந்த வெற்றிகொண்டான்.’நெல்லை’ கண்ணனை இதில் யோசனையுடன் சேர்த்துக்கொள்கிறேன்.’கடையிலே பொருளில்லை கஜானாவுக்கு அடித்துக்கொள்கிறார்கள்’ என சேர்ந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸையே கலங்கடித்தவர் அவர்.

ஊர்ப்பெயரை வைத்துக்கொள்ளாதவர்களும் வேறெதாவது ஒன்றை ஒட்டு வைத்துக்கொள்வார்கள். தீப்பொறி ஆறுமுகம், தமிழருவி மணியன் இப்படி. தமிழருவி அறிவுத்தளத்தில் இப்போது காங்கிரஸுக்கு ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார். சுரத்திடை பெய்த மழை.

எனது ஞாபகத்தில் இருந்து சிலவற்றைப் பதிவு செய்யுமுன் தமிழ்ப் பதிப்பகங்களுக்கு ஒரு ஆலோசனை. பேச்சாளர்களை கேள்விகளுடன் அணுகி (சுமாராக 50 கேள்விகள்) அவர்களது பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம். அது தமிழின் சமகால ஆவணங்களில் ஒன்றாகத் திகழும். கொஞ்சம் பொருட்செலவு பிடிக்கக்கூடிய இந்த வெட்டி வேலையை யார் செய்யக்கூடும் எனத்தெரியவில்லை.
(இப்படியான எனது கனாத் திட்டத்திற்கு மூன்று ஒலிநாடாக்கள் பேசிக்கொடுத்த புதுக்கோட்டை விஜயாவுக்கு பயனிலி நன்றியைப் பகிர்ந்துகொள்கிறேன்.) இந்த வெட்டிவேலைக்கு எனது அரசியல் அறிவை (முன்னால் பேச்சாளன் நான்:மற்றவை மந்தணம்) உபயோகிக்கத் தருவேன். கம்மியான செய்கூலியில்.

தீப்பொறி ஆறுமுகத்துக்கு உண்மையில் எரிமலை என்பது மாதிரிப் பெயர்தான் வைத்திருக்கவேண்டும்.தீப்பொறியும் வெற்றிகொண்டானும் தான் பதினைந்து இருபது மைல் சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் கேட்கிற பட்டாளத்தின் வியர்வையைச் சம்பாதித்தவர்கள்.

முன்பொரு சமயம் ஆற்காட்டில் ( அது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரம்) கூட்டம் பேச வந்திருந்த வெற்றிகொண்டான் (அப்போது அவர் வெ.கொ அல்ல) தீப்பொறியை ரசனையோடு சிலாகித்தார். ஆறுமுகம் ஒரு கஜல் பாடகன் என்பது போல இருந்தது வெற்றிகொண்டானின் விதந்துரை.

ஆனால் அன்றைக்கு வெற்றிகொண்டானின் பேச்சில் தெறித்த நிஜமான தீப்பொறி வேறு. அந்த உள்ளடக்கத்தை அவரது (சில மாறிப்போய்விட்ட )வார்த்தைகளில் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.

“இங்க பாருங்க... நான் வெற்றிகொண்டான். தி.மு.கவுல ஒரு ஒன்றியச் செயலாளர் கூடக் கிடையாது. ஒரு சாதாரணப் பேச்சாளன். இப்ப நான் கார்ல வந்து எறங்கினேன் பாத்தீங்கள்ல... தம்பி சுப்பிரமணி கிட்ட வந்து என்னயக் கூட்டிக்கிட்டு வந்தாப்டி. சுத்தி நாலஞ்சு உடன்பிறப்புகள் இருந்தாங்க. இப்ப எனக்கு குண்டு வச்சாங்கன்னு வைங்க... ஒரு நாலஞ்சு பேராவது தி.மு.க காரன் சாவமா இல்லியா?... எனக்கே இப்படின்னா, ஒரு வருங்காலப் பிரதமர்...நேரு பேரன்! அந்த ஆளு செத்துப்போறாரு..கூட பத்துப்பதினஞ்சு பேரு செத்துப்போறாங்க... ஏங்க...யோசிச்சுப்பாருங்க... ஒரு..ஒரு காங்கிரஸ்காரன்கூட சாகலைன்னா அது எப்படிங்க?”

யோசிக்கத்தீராத கேள்வியாகத்தான் இன்னிக்கும் இருக்கு இல்லீங்களா?

2 comments:

ஸ்ரீராம். said...

இந்தக் கேள்வி என்று இல்லை வராற்றிலும் அரசியலிலும் நிறையக் கேள்விகளுக்கு விடை தர ஆளில்லை. தொடர்ந்து கேட்க பொதுமக்களும் தயாரில்லை.

க. சீ. சிவக்குமார் said...

உண்மைதான் ஸ்ரீராம்!...பழசை நினைத்துக்கொண்டிருந்தால் அன்றன்றைய அப்பம் மற்றும் அறுவடைக்கு என்ன வழி?