Saturday, December 19, 2009

வைப்பாற்று நதிக்கரை....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதற்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது.95 வாக்கில் நான் மதுரையில் இருந்தபோது அதில் நான் அங்கத்தினனாக இருந்தேன்.

எழுதுகிறதை விட அருப்புக்கோட்டை,ராஜபாளையம்,கோவில்பட்டி,விருதுநகர்,எட்டயபுரம் என பேருந்து ஏறிப்போய் ஏறிப்போய் கலை இரவு பார்ப்பதுதான் அப்போது விருப்பமாக இருந்தது.மதுரையில் இருந்து போவதற்குள் நன்மாறன் பேசி முடித்திருப்பார். நன்மாறன் நன்றாகப் பேசினார்- என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.நான் நன்மாறனைப் பார்த்ததில்லை. பார்த்ததும் அறிவாளியைப்போலத் தோற்றம் காட்டுகிற வனப்பும் அவருக்கு இல்லை. நான் பலநாட்கள் எஸ்.ஏ.பெருமாளைப் பார்த்துவிட்டு ‘இவர்தான் நன்மாறன்’ என நினைத்துக்கொண்டிருந்தேன். எஸ்.ஏ.பியின் தோற்றம் அப்படி.

எதோ ஒரு ஊரில் நன்மாறனின் பெயர் ஒலிக்கப்பட்டு அவர் வந்து பேசியதைக் கேட்டேன்.அனேகமாக அது இப்போதைய என் மாவட்டத் தலை நகரான் திருப்பூரிலாக இருக்கவேண்டும்.சிறுகதைகளில் புதுமைப்பித்தன் காட்டிய அவ்வளவையும் அவர் பேச்சில் காட்டினார். அவர் பேசுங்கால் பல ஊர்களில் சிரிப்புத்தாளாமல் எழுந்து பத்திருபது மீட்டர்கள் எழுந்து ஓடியிருக்கிறேன்.

இப்படி எவ்வளவோ நினைவுகளை உள்ளடக்கிய த.மு.எ.ச வில் மாதவராஜையும் சந்தித்தேன். சாத்தூர் கிளையில் அப்போது இருந்தார். இப்போது இருக்கிறாரா தெரியவில்லை. ’வீர சுதந்திரம் வேண்டி’ என்று வருடம் தவறாமல் மறுபதிப்புக்கோ அல்லது சின்னவயதுப் பாடப்புத்தகத்துக்கோ தகுதியான அந்த நூலை சாத்தூர் கிளை வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களை தூக்கிச் சுமந்த நினைவுகள் தனி.

சாத்தூர் வைப்பாற்றின் கரையில் இருக்கிறது.எஸ்.லட்சுமணப்பெருமாள் (இவர் ஒரு நாவாலும் பேனாவாலும் கதைஞர்),லட்சுமி காந்தன்(காட்சிக்கு இனியன் கவிஞன் என தன்னை நம்புபவன்),காமராஜ்,தியாகு,கார்த்திக்குகள் என சிறிய வட்டம் எனக்கு சாத்தூரில் உருவானது.

தொடர்ந்து கதைகள் எழுதுவார் எனப் பலராலும் நம்பப்பட்ட மாதவராஜ் 2000 வாக்கில் மும்மரமாக கணினியில் புகுந்து கற்றுக்கொள்ளப்போனார். நான், பாண்டியன் கிராம வங்கி வேலையை விட்டுவிட்டு கணினித் துறைக்குப் போகப்போகிறார் என நம்புமளவு அவரது தீவிரம் இருந்தது.அவரது இந்த வார கட்டுரைகளைப் படிக்கையில் அவர் அப்படிக்கூட செய்திருக்கலாம் என்றுபடுகிறது.

பிளாக் ஆரம்பித்தார். அவரது தூண்டுதலில் ச.தமிழ்ச்செல்வனின் ‘தமிழ் வீதி’ உருவாகி அந்த வீதியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்வளிக்கிறது.இதுகாறும் மனையில் வந்த பலவற்றை (சேவு செய்து) தொகுத்து மூன்று புத்தகங்களாகவும் அதுதவிர அவரே எழுதியவற்றின் தொகுப்பு ஒன்றையும் வெளியிட இருக்கிறார் மாதவராஜ்.கவிதைகள் மற்றும் கட்டுரைகளாக அவை ‘வம்சி வெளியீடு’

தொகுப்புகள் பற்றிய விவரத்தை அடுத்து எழுதுவதற்குமுன்... புத்தகங்கள் வரட்டும் வரட்டும் எனக் காத்திருக்கிறேன். இந்த மழைப்பருவத்துக்கு என் பிரியநதி வைப்பாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

2 comments:

Unknown said...

dear sir,
for me, only your name is familiar till now. that is, ka.see.sivakumar, i heard . but i am not familiar with your stories and so on. but now, after studying your composition in your blog, i felt that i was missed a lot.
miga naagarigamaana padhivu.

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல முயற்சி....புத்தகம் வெளி வரும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்
ஆரூரன்