Monday, February 7, 2011

மறுபடியும் முதல்ல இருந்தா?

நேற்றிரவு கணினியில் ஆர்வமாக செய்தி ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்த சாந்தியிடம் கேட்டேன், ‘என்ன செய்தி இவ்வளவு ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று.

மூன்றடிக்கும் அப்பாலிருந்து சாய்குத்துக் கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இஸ்ரோ என்கிற வார்த்தை மட்டுமே புதியதாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது.

கணினியை மௌனமாக்கி விட்டு சாந்தி ‘எதோ இரண்டு லட்சம் கோடி ஊழலாம்?’ என்றார்.

‘’எதோ இஸ்ரோன்னு போட்டிருந்துச்சு?’

‘இஸ்ரோதான் பட் டூஜி சம்பந்தப்பட்டது.’

‘அப்படின்னா அவ்வளவு இருக்காது. டூஜியே ஒன்னு எழுபத்தாறுதானம்மா?’’

‘’அப்படின்னா இரண்டாயிரம் கோடின்னு வச்சுக்க!’’ என்றார் எனக்கு எதோ காசோலை தருவது போல. அப்புறம் அந்த உரையாடல் துண்டாடப்பட்ட பின்னர் காலையில்தான் நாளிதழ் பார்க்கிறேன்.

இந்த ஆயிரம் லட்சம் கோடி வகைகளுக்கு எத்தனை சுழிகள் எனத் தெரியாததால் உண்மையில் இத்தகு செய்திகள் ஆர்வம் தராமல் போய்விட்டன. ஆனாலும் பொதுக்குழு மாநாட்டில் ராசாவைப் பாராட்டித் தீர்மானம் என்பது போல் கருணாநிதி டகாலிட்டிகள் விடும்போது மட்டும் சுவாரசியம் கூடிவிடும். பிறகு இன்னும் ஏன் நான் மூர்ச்சையடையாமல் இருக்கும் அளவு தரங்கெட்டுப் போய்விட்டேன் என என்னை நானே நினைத்துப் பரிதாபமாக இருக்கும்.

காலையில் நாளிதழ் பார்த்தால் தணிக்கைக் (உண்மையிலேயே இது ஒரு தனிக் கை போலத்தான் தெரிகிறது) குழு இரண்டு லட்சம் கோடி முறை கேடு என அறிக்கையிட்டிருக்கிறது.

இத்தனை ஊழல்களுக்குப் பிறகும் எனக்கெல்லாம் சோறு கிடைக்கிறதே
என எண்ணும்போது மலைப்பாகவும் தித்திப்பாகவும் இருந்து பாரத மணித்திரு நாட்டின் செல்வவளத்ததனை நெஞ்சில் போற்றினேன்.

இறுதியில் இந்தப் பகிர்வை   வகைமைத் தரவில் அரசியலில் சேர்ப்பதா ஊழலில் சேர்ப்பதா என மனங்குழம்பி இஸ்ரோ வகையிலும் ஊழல் நடந்திருக்கவேணாமே என மனம் விரும்பி பகிர்வு என்றே பதிவிடுகிறேன்.

No comments: