Monday, August 30, 2010

பணம் இருக்கல்ல...

இன்று காலை கோடை வானொலிப் பண்பொலியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாடல்கள் சுவை என்றால் நேயர்களோடு உரையாடிப் பாட்டுப் போடுவதைக் கேட்கையில் அந்த உரையாடல்கள் சுவாரசியமானதாக இருக்கும்.

நேத்து அப்படித்தான் நெகமத்து நெசவாளி (தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது எவ்வளவு சுலபம் என்று இந்த வாக்கியத்தில் உங்களுக்குத் தெரியும், தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது சுலபம்.பாடலாசிரியராக இருப்பதற்கான தகவமைப்பு வேறு .அதற்கு வல்லமை வேண்டும்.) ஒருவர் பாட்டுக் கேட்டார். அவரது தொழில் பற்றி வினவுகையில் தொகுப்பாளர் இப்ப என்ன டிசைன் நெய்யறீங்க மானா மயிலா? என்று கேட்டார். (எனக்கு உயிர்ராசிகளுக்குப் பின்னே ‘டா’வன்னா சேர்ந்து ஒலித்தது.இயற்கையின் விளையாட்டு என் மன அமைப்பினையும் விஞ்சியது.

நெசவாளியின் பதில் :  “ இப்ப... இலை மாதிரி ஒரு டிசைன் தானுங்கய்யா ஓட்டிக்கிட்டு இருக்கறம்.”

தொகுப்பாளர் உடனடியாக உங்களுக்கு என்ன பாட்டுங்க வேணும்? என்று உரையாடலைத் துண்டித்தார்.

நெசவாளர்கள் மற்றும் டெயிலர்கள் தவிர மற்றவர்கள் பாட்டுக் கேட்டால் இன்னும் கூர்மையாகிவிடுவேன். இன்று ஒரு வங்கிக்காரர்.வங்கி கணினி மயமானதைப் பற்றி தொகுப்பாளர் கேட்க வங்கி ஊழியர் தங்கள் வங்கி கணினி வங்கியே என்றார்.

வேலை நேரம்?

10 டூ 2 , 2.30 டூ 4.

மத்தியான நேரத்தில் என்ன பண்ணுவீங்க?

வங்கிக் காரர் இப்போது வங்கியியல் வார்த்தைகளோடு ஆங்கிலமும் தமிழும் பாம்பும் சாரையுமாக ஒரு பதில் சொல்கிறார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. தொகுப்பாளருக்கும் புரிந்திருக்காது. ஆனால் ஒன்று நிஜம் எனது வங்கிக் கணக்கில் அடி வண்டல் அச்சாரத் தொகை நூறு போக அதிகம் ஒரு பைசா இருந்தாலும் யாராவது ஆள் உட்கார்ந்து ராப் பகல் எந்நேரம் ஆனாலும் பைசா எடுத்துக்கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அந்தத் தொகைக்கு மேல் இரு நாள் வைத்திருந்ததால் எனது பாஸ்புக்கின் பெயர் பாஸ்புக் அல்ல ஃபெயில் புக்.

பலருக்கு அப்படி இருக்கக் கூடும். குறைந்த பட்சம் அஞ்சு மணி வரைக்கும் காசு தந்தால் கூட நல்லா இருக்கும் என்பதாவது சிலருக்கு இருக்கும். அதன் பிரதிநிதித்துவமாக தொகுப்பாளர் கேட்டார்.

அதான் கணினி மயமாயிடுச்சு.. பட்டன் தட்டுனீங்கன்னா அப்பப்ப டேலி ஆகுது. மத்யானத்துக்கு மேல என்ன பண்றீங்க?

ஏங்க வாங்கின பணத்தை எண்ணி எடுத்து வச்சு ஒழுங்கு பண்ணவேணாமா?

- இதுதான் பதில். இதை என்னுடைய வார்த்தையில் எழுதியிருக்கிறேன். அந்த வங்கிக்காரர் ரொம்ப அல்வாவும் அமிர்தமும் கலந்த மொழியில் இதைச் சொன்னார். அந்த ரீதியில் எனக்கு மூன்றாவது வார்த்தையைக் கோக்க இயலாது. அப்படி முடிந்திருந்தால் நான் மண்டல மேலாளராக ஆகியிருப்பேன்.

தொகுப்பாளருக்கு பாட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

பணம் வேறு கணக்கு வேறுதானே? - எப்பவுமே....

4 comments:

ny said...

bright!

Nathanjagk said...
This comment has been removed by the author.
Nathanjagk said...

Fantastic..! Admiring u!!

Anonymous said...

Paste this HTML link in comment form message box in your blogger blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/paste-this-html-link-in-comment-form.html