Sunday, August 21, 2011

உண்ணா ஹசாரே

அன்னா மீண்டும் உண்ணா விரதத்தைத் தொடங்கிவிட்டார். ராம் லீலா மைதானத்தில். ஆர்வ வழிப்பட்ட ஆதுரங்கள் அவர் மீது மலரெனத் தூவப்பட்டுவிட்டன.

தியாகியை அடைப்பதற்கென்று தனி ஜெயில்கள் உருவாக்க முடியாது என்கிற எளிய உண்மையைக் கூட மனம் ஏற்றுக்கொள்ளாமல் ‘இவரைப் போய் திகாரில் அடைப்பதா?’ என்கிற கேள்விகள் எல்லாம் எழுந்தாயிற்று. சிறையில் புனிதர்களும் குற்றவாளிகளும் மனிதர்களும் (சமயங்களில் குற்றமற்றவர்களும்) அடைபடுவதால்தான் சிறை இந்த அமைப்பின் தவிர்க்க இயலாத அம்சம் ஆகிறது.

ஆட்சியில் இருந்த காலத்தில் லோக்பாலை அமல் படுத்தாதவர்கள் எல்லாம் இன்று அன்னாவுக்குக் குரல் கொடுக்கிறார்கள். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் சட்டம் போலவே இதிலும் வெகுபேர் விரும்பாத நுண் அமைவுகள் பலது இருக்கக் கூடுமெனக் கருதுகிறேன். வெகுபேர் என்பதை அரசியலாளர்கள் மற்றும் மக்கள் என இருதரப்பிலுமாகக் குறிப்பிடுகிறேன்.

அன்னா கேட்டது போலவே கொடுத்துவிட்டு அதை எண்ணி எண்பத்தியிரெண்டு மணித்தியாலத்துள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள அரசியலாளருக்கு இயலாததல்ல.

ஆகவே அதனினும் கடந்து அன்னாவின் கோரிக்கைகளில் எதேனும் வலிமை இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

மன் மோகன் மவுன மோகனாக இருந்தாலும் அவ்வப்போது பெரும் கருத்துகளைச் சொல்கிறார். அறப்போர்களின் காலம் முடிவுற்றுவிட்டது என்பது போன்ற செய்திதான் சமீபத்தில் அவர் தந்தது.கொரிக்கை நிமித்தமான  பட்டினி இறப்புகள் என்னமாதிரியான ஆவேசம் அல்லது விளைச்சலைத் தோற்றுவிக்கும் என கற்பனை செய்யுமளவு எனக்கு மனத் திராணி இல்லை.

நாடெங்கிலும் பந்தலிட்டுப் பட்டினியில் அமர்ந்திருக்கிற அன்னாரின் சக போராளிகள் யாரேனும் இறந்துவிடக்கூடாது என்பதே விருப்பமாயிருக்கிறது.