Thursday, August 4, 2011

சதா இக்கட்டிலிருந்து சதானந்தத்துக்கு...

இன்று முதல் கர்நாடகத்தில் புதிய முதலமைச்சரின் கண்பார்வையில் வாழப்போகிறேன். சதானந்த கவுடா பி.ஜே.பிக்காரர்களால் ஏகமனதாக அல்லாமல் ஒரு வழியாகத் தேர்வு பெற்றிருக்கிறார்.

அரியணை ஏறிய நாள் முதலாக அல்லலுற்றும் இக்கட்டுகளின் பாற்பட்டும் ஆட்சி நடத்திவந்த எடியூரப்பாவுக்கு விடுதலை கிடைத்திருக்கிறது. அவர் விரும்பாத விடுதலை. அண்டை மாநிலமான தமிழ் நாட்டின் ஜெயலலிதா போல ஆறு மாதத்தில் மீண்டும் தானே முடி சூடும் கனவும் எடியூரப்பாவுக்கு இருக்கிறது. அது முச்சூடும் பலிக்குமா எனத் தெரியவில்லை.

தென்னகத்தில் முதன்முதலாக அமைந்த பி.ஜே.பி ஆட்சியை இப்படி அவர் ஆக்கிவைத்தது அந்தக் கட்சிக்கு பாதகம்தான். கர்நாடக முதலமைச்சர் பட்டியலில் ரெட்டி,ஜாட்டி, மொய்லி,பட்டீல்,ராவ்.சிங்.ஹெக்டே,கவுடா, அப்பா.அய்யா,சாமி.... என வினோதம் பலவுண்டு.இப்போது சதானந்த கவுடா. குமாரசாமி கவுடரின் சத்தத்தை இந்த ஏற்பாடு குறைக்குமா எனத் தெரியவில்லை.

மிகச் சிலர் எதிர்பார்த்தது போல சோபா முதலமைச்சர் ஆகவில்லை. அல்லது ஆகமுடியவில்லை. தென்னகத்தார் ஒரு பெண்ணின் தலைமைய அவ்வளவு எளிதில் ஏற்பார்களா தெரியவில்லை. விடுதலைக்குப் பின் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. அனேகமாக விடுதலைப் பாரதத் தென்னகத்தின் முதல் நூற்றாண்டின் ஏக பெண் முதல்வர் ஜெயலலிதா மட்டுமேயாக அமைந்துவிடுதல் கூடும்.

அனேக வருத்தங்களில் ஒன்றான இதை பிரத்யேக வருத்தம் எனக் கூறமுடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறேன்.