Monday, March 21, 2011

பம்பரத்தை நம்பி வெம்பரப்பாதல்...

தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும்  தனித்தனியாக தேர்தலில் நின்றால் எனது வாக்கு பம்பத்துக்கல்ல.  இரும்பு சம்பந்தப்பட்ட ஒரு சின்னத்துக்குத்தான். பம்பரத்துக்குக் குத்து ஆணியாக இரும்பு செயல்பட்டாலும் நான் அதைக் கணக்கிலெடுக்கவில்லை. குத்து ஆணியும் சாட்டையும் இல்லாமற்தான் போய்விட்டது பம்பரம்.

வை.கோ முதன் முதலில் பெற்றது குடை சின்னம். அது சார்ந்து இரண்டு ஞாபகங்கள் எனக்கு உண்டு. ஒன்று அவரது கட்சி குடை சின்னத்தில்  நின்ற காலத்தில் நான் ஒரு வானொலி நிலையத்தில் கவிதை வாசிக்கப்போனேன். ‘நீயும் நானும் ஒரு குடையின் கீழ் நடந்ததால் அன்றைக்கு நல்ல மழை’ என்று நான் காதல் கவிதை எழுதியிருந்தேன். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ‘தம்பி, தேர்தல் சின்னங்கள் வானொலியில் வருவது சரியல்ல’ என்றார். இதில் யாருடைய துரதிர்ஷ்டம் பெரிதென்று தெரியவில்லை. 

‘’நீயும் நானும் நனைந்து நடந்ததால் ‘ என்று கவிதையை மாற்றினேன். நண்பனிடம் இதைச் சொன்னபோது (இரண்டாம் ஞாபகம்)... வைகோவுக்குக் குடை என்ன பொருத்தமடா, ‘’நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது’ ன்னு குடையை கக்கத்துல வச்சிக்கிட்டு ஊரூராப் போவேண்டியதுதான். என்றான். அவன் இப்படிச் சொன்னதில் சாதிசார்ந்த குறிப்பு ஒன்று இருந்தது, போதாததற்கு அவர் கருப்புச் சால்வை வேறு அணிந்திருந்தார். கற்பனை செய்யவே மிக அலாதியாக இருந்தது. குடை விரிவதற்கு முன்னாக அவர் பம்பரத்திற்கு மாறினார். அவர் பட்ட சின்னங்கள் நாடறிந்தது. வெண்ணெய் திரள்கிற நேரத்தில் தாழிகள் உருண்டுருள்வது அவருக்குத்தான்.

அவர் அ.தி.மு.க அணியில் இருந்து நீக்கப்பட்ட விதம் ஏனோ மிகுந்த மனச்சோர்வை அளிக்கிறது. நான் அவருக்கு வாக்களிக்கும் எண்ணத்தில் இல்லாதபோதும். இதை மிகப்பெரிய தார்மீக வழுவான செயலாகக் கருதுகிறேன். அவரது வில(க்)கல் பின்னணியில் சோ, சுப்பிரமணிய சாமி முதல் விஜய் மல்லையா ஈறாக பல பெயர்களும் ஆணவம் அகந்தை உள்ளிட்ட குணங்களும் பேசப்படலாம்.

கடவுளின் விளையாட்டும் இதில் இருக்கிறது என்பதன் உதாரணம்தான் கி.வீரமணி ‘தி.மு.கவை ஆதரியுங்கள் ‘ எனக் கோபால்சாமிக்குக் கடிதம் எழுதப்பட்டிருப்பது. அப்புறம் ஜெயலலிதாவும் தன் தரப்புக்கு ஒரு கடிதம்.

ம.தி.மு.வின் கொள்கைப் பீரங்கியான நாஞ்சில் சம்பத் சொன்னது இப்போது மெய்ப்பாட்டை அடையும் தருணம் வந்துவிட்டது. நாங்கள் கட்சி அல்ல இயக்கம்.
 மிக நன்று. இப்போது இயக்கமாக வை.கோ செய்யவேண்டிய காரியங்கள் பல உள.
1. தமிழை ஆட்சி மற்றும் நீதி குறிப்பாக பயிற்றுமொழியாகவும் ஆக்க குரல்கொடுத்தல்.

2. அனைவருக்கும் சமச்சீர் மற்றும் இலவசக் கல்வி.

3. இலவச மருத்துவம்.

4. அணு மின் நிலைய எதிர்ப்பு.

5. கள்ளை அனுமதித்தல்

6.பன்னாட்டு ஆதிக்கத்தை ஒழித்து நாட்டின் தற்சார்பு

7.வேலை வாய்ப்பு

இந்த அரசியற் செயல்பாடுகள் தவிர்த்து கிரேக்க- இந்திய புராணங்களை ஒப்பிட்டு சில ஆயிரம் பக்கங்கள் வருவது போல ஓரிரு புத்தகங்களாவது அவர் எழுதவேண்டும் என்பது என் விருப்பம்.

அவர் அனுஷ்டிக்கப் போகிற அறுபது நாள் மௌனத்திற்கு வாழ்த்துச் சொல்வதுதவிர இப்போதைக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.

3 comments:

மதுரை சரவணன் said...

வழிமொழிகின்றேன்...வாழ்த்துக்கள்

adhiran said...

all the posts about politics are very immpressive. thanks siva.

Unknown said...

நல்ல பதிவு நண்பரே!!