Monday, November 15, 2010

கதவு ஜன்னல் மற்றும் நிலைகள்...

வத்தலக்குண்டு, கோட்டைப் பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் மனைவியுன் பொருள் உழைப்பினாலும் கொத்தனார் சித்தாள் மின்னர் கம்பியர் உள்ளிட்ட பலரின் கூட்டுழைப்பால் என் மாமனாரின் நேர்ப்பார்வையில் வீடு புத்துருவாக்கம் செய்யும் பணி நேற்றைக்கு முதல்நாள் முடிவுற்றதாகக் கேள்விப்பட்டேன். முடிவுற்ற அந்த வீட்டை நான் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இந்த வீடு பணியப்படுவதற்கு முன் பழைய வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளையே பக்கவாட்டிலும் மேற்புறமும் வேய்ந்து நான்கு மாதகாலம் வாழ்ந்துவந்தோம். இருபத்தஞ்சடி நீளத்துக்கு முப்பதடி அகலமுள்ள கூடாரம் அது.மூன்று புறம் ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் அண்டியிருக்க ஒரு முழுமுதற்பக்கம் அதன் முகப்பாயும் திறப்பாயும் இருந்தது.

அதில் பாதியை படுதாக்கள் கொண்டு மறைத்து மீதிப்பாதிக்கு சுருட்டுச் சாக்கே கதவாக இருந்தோம். பெரிதாக ஒன்றும் தொலைந்ததாகத் தெரியவில்லை. முந்தாநாள் கடைசிக் கட்டப் பணியாக ஜன்னல்களுக்குக் கண்ணாடி பொருத்துதல் கதவு பொருத்துதல் ஆகியன் நடந்து முடிந்தன.

புதியதாக மாமனார் பூட்டும் சாவியும் கூட வாங்கி வந்திருப்பார் என்றுதான் நினைக்கிறே. ஆனால் இரவில் அவருக்கு சாந்தி போன் செய்தபோது சொன்னார்.

‘’ உங்க அம்மாவோட செல்போன் தொலைஞ்சு போச்சு.”

எனது அலைபேசி தொலைந்த போது என்னென்ன மாதிரி விமரிசித்தார்கள் என எண்ணி குரூரமான சந்தோஷத்தை அடைந்தேன். அடுத்த பயம் கதவு மற்றும் ஜன்னல்களைப் பற்றியது. மரக் கதவு மற்றும் மனக் கதவு.