Friday, January 8, 2010

உயிர் எழுத்து சமீபத்திய நூல்கள்

இந்த - கடந்த - புத்தகக் கண்காட்சியை ஒட்டி ‘படைப்பிலக்கியத்தின் குரலான’ உயிர் எழுத்து பதிப்பகத்திலிருந்து எட்டு நூல்கள் வெளியாகியுள்ளன.

1. ‘இலக்கிய ஆளுமைகளின் படைப்புத் திறன்’- ந.முருகேச பாண்டியன் ஆய்வு மற்றும் அலசல் நோக்கில் பல படைப்பாளிகள் பற்றி எழுதியவற்றின் தொகுப்பு.

2. ‘கூப்பிடுவது எமனாக இருக்கலாம்’- வா.மு.கோமுவின் படைப்பு.   நாவலல்ல கொண்டாட்டம் என அவரே அறுதியிடுகிறார். கண்களின் மீது வழுக்கிக்கொண்டு செல்லும் எழுத்து நடை அவருடையது. உள்ளடக்கம் இறைச்சிப்பொருள் பற்றி இந்த ராசமைந்தன் பற்றி தமிழில் விமர்சனங்கள் உண்டென்றாலும் இவரது எழுத்தை ஒருமுறை படித்தவர்கள் ‘கோடிகள் கொடுத்தாலும் கோமகனை (கோமு)மறவீர்கள்’.

3.உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் - தாணு பிச்சையாவின் கவிதைகள் தொகுப்பு. பத்தரை மாற்றுத் தங்கம். பத்தரின் வாழ்வைச் சொல்லும் அங்கம். பிரத்யேகமான புத்தகம். சமகால வாழ்வு வெளியில் புராதன புராண விஷயங்களுடன் பொற்கொல்லர் வாழ்வு, தங்கம் எனப் பல நிலைகளைப் பேசுகிறது.

4.நீலவானம் இல்லாத ஊரே இல்லை - க.சீ. சிவகுமாரின்  பத்தி எழுத்து. பல்வேறு தன் நினைவுகள் சம்பவங்களுடன் கிரிகெட்,டென்னிஸ்,அரசியல்,சுரா,பெண் எழுத்து ,பழங்காதல் ரயில் பயணம் எனப் பலவற்றை அங்கதம் மங்காமல் பேசிக்களிக்கிறது. அவ்வப்போது தத்துவத் தெறிப்புகள்.

5.உயிர் எழுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - தொகுப்பு க.மோகன ரங்கன். கடந்த வருடத்தில் சிறுகதை மற்றும் கவிதைகளில் உயிர் எழுத்து அளவுக்கு புதிய எழுத்தாளர்களுக்கு இடம் தந்த பத்திரிக்கை ஏதுமில்லை. அதி நிச்சயமாகவும் இது சமகால எழுத்துப்போக்கினை பிரதிநிதிப் படுத்துவதாக இருக்கும்.

6.கடலோடு இசைத்தல் - கவிதைகள். சக்தி ஜோதி.
இவரது கவிதைகளில் கடந்த நூற்றாண்டுகளின் நேசிப்புத்தளம் இப்போது புழங்கும் சொற்களில் சரளமும் உவப்புமாக ஓடுகிறது.(பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி - தாயுமானவர். உன்னை என்னுடையதென்று நொடியில் கண்டுகொண்டேன் - தாகூர் ... இது போன்ற இடையறாக் காதலின் கண்ணித் தொடர்ச்சி) இதுவே, சக்தி ஜோதியின் கவிதைத் திடத்தில் பங்காற்றுவதால் சுலபமாக நம்மைக் கவர்ந்துவிடுகின்றன.

7.காட்டின் பெருங்கனவு - சிறுகதைகள். சந்திரா.

8. நீங்கிச் செல்லும் பேரன்பு - கவிதைகள். சந்திரா.

எனக்கு தனியளவில் சந்திராவின் சிறுகதைகள் மேல் மலைப்பும் திளைப்பும் உண்டு. கவிதைகள் பாசவட்டச் சுற்றத்தைப் பேசிக்கொண்டு இருக்கும்போதே அகிலமளாவிய வன்முறைக் கவிச்சியை நோக்கிப் பாய்கிறவை.

மிக நேர்த்தியான முறையில் அயராத உழைப்புடன் என் கெழுதகை நண்பர் , உயிர் எழுத்து ஆசிரியர் , கவிஞர். சுதீர் செந்தில் இவற்றை பதிப்பித்துள்ளார்.அவருக்கு எழுத்திலும் நேரிலும் கன்னத்தில் முத்தங்கள்.

நூல்கள் கிடைக்கும் தமிழக விலாசம்.

உயிர் எழுத்து
9 முதல் தளம்,
தீபம் வணிக வளாகம்,கருமண்டபம்.
திருச்சி - 1.
அலைபேசி; 99427 64229.

4 comments:

Nathanjagk said...

யாக சாலையில் பெருகும் புத்தகங்கள் படைப்பிலக்கியத்தின் மேல் நம்பிக்கையும் படிப்பாளிகள் மேல் எதிர்பார்ப்பையும் ஒரு​சேர குவிக்கின்றன.

சிலாகித்த சந்திராவின் ஒரு கவிதை சாம்பிள் கொடுத்திருக்கலாமே?

வாங்கிப்படித்துவிடலாம் என்று முடிவு ​செய்திருக்கிறேனாக்கும். உங்களிடம் புத்தகங்கள் இருந்தால் (..பூனை, நீல ... இல்லை) நான் வாங்கிக் ​கொள்கிறேன் (அல்லது பதிப்பகத்திலேயே, ஆன்லைன் ஆர்டர் உண்டா?)
1000 இருந்தாலும் இதை ​செய்வது வாசகக் கடமை.

க. சீ. சிவக்குமார் said...

a... pongal vaazththukaL jag!

க. சீ. சிவக்குமார் said...

a... pongal vaazththukaL jag!

தமிழன்-கறுப்பி... said...

பகிர்வுக்கு நன்றி.