Saturday, November 24, 2012

face

ஃபேஸ் புக்கை சாதிச் சான்றிதழ் மாதிரி நினைத்துவிட்டேன். இது வேறு மாதிரி... என்றாலும்                     ஃபேஸைத்தேடி, பேஸைத்தேடி, புத்தகத்தைத் தேடி....

என்ன வாழ்க்கை இது. இதில் ஒரு முகம் வேறு?

Tuesday, November 13, 2012

என்ன ஆச்சு?

நான் நாளிதழ் பார்த்து இரண்டு நாளோச்சோ மூணு நாளோச்சோ?

கடைசிக்கு முன்னதாகப் பாத்தப்போ நாஞ்சில் சம்பத் ம. தி.மு.கவை விட்டுப் போய்விடுவார் போலச் செய்திகளில் பார்த்தேன்.

கடைசியாகப் பார்த்த சன் டி.வி பேட்டியில் நாஞ்சில் சம்பத், நான் ம. தி.மு.கவை விட்டு விலகுவதுமில்லை அதைக் கைவிடுவதுமில்லை என்பது மாதிரி பேட்டி கொடுத்தார்.

அப்படின்னா மறுபடியும் ம.தி.மு. கவில் இரண்டு கோபால் சாமிகளா அல்லது இரண்டு சம்பத்துகளா?

Saturday, September 1, 2012

நிலா நாற்பது- 22

தேயும் ஓயும்
பாயும் ஆகாசக்
கற்பூரம்.
இரவு தோறும் மாறும்
மா(ய-யா-)த் திரை வீசம்.

Friday, August 24, 2012

நிலா நாற்பது -21

நிசித்திரை
ஒளித் துளை
               க(ள்)ளின்
தனித் துணை.

Tuesday, August 14, 2012

யப்பா... அம்மா!

தொழில் நுட்ப வேதனைகள், காற்றின் ஈரப் பதம், மூளையின் போதாக் குறை, மூளை(!) யின் அறிவு அல்லது உணர்வு செயல்படும் பகுதி - எத்தனை எத்தனை மனக் கோட்டை அதில் மண் சேர்க்க நாம் (ன்) படும் பாடு.....

என்னவோ மின் முதல் மண் வரை யாவையும் மனதில் சேர்த்தி நரம்பு மற்றும் இரும்புகளை மனதால் தியானித்து - எம்னது வலை மனையில்(வலித் தளம், வலை மனை, வலைப் பூ .... யாதொன்றும் சரியான பெயரில்லை பார்த்துக்கொள்ளுங்கள்)... இதைப் பதிவேற்ற  முயலுகிறேன்.

விற்பன்னர்கள் எப்போதும் எள்ளி நகையாடுவார்கள். இயற்கை அருளினால் இதை தொடரலாம்.

Friday, August 10, 2012

கல்வி நாம மாவட்டம்.

நாமக்கல் காரர்கள் முட்டையும் போடுவார்கள் , நூற்றுக்கு நூறும் போடுவார்கள் என்று அவர்களது தொழில் வளர்ச்சி(!) குறித்து முன்னம் நான் இளிவரலாகக் குறிப்பிடுவதுண்டு.
குழந்தைகளுக்கு வரவேண்டிய ஸ்காலர்ஷிப்பில் கை வைத்து எண்பதுக்குக் கிட்டே தலைமை ஆசிரியர்கள் மேற்படி மாவட்டத்தில்  இடை நீக்கத்தில் இருக்கிறார்கள் என்பதை தலைப்புச் செய்தியாகக் கேள்விப்படும்போது

பயமாக இருக்கிறது.

இந்த தவுதாயப்பட்ட லோகத்தில் குழந்தைகள் படிச்சா என்ன? படிக்காட்டி என்ன?

Saturday, December 24, 2011

வியாபார உலகம்... உலக வியாபாரம்.

முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எல்லைகளில் மக்கள் குழுமுதலும் குமுறுதலும் ஒரு பக்கம் நடந்தவாறிருக்க தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கேரளீயர்களின் நிறுவனங்கள் தாக்கப்பட்டு வருகின்றன. இப்படித் தாக்கப் படுவதில் பிரச்சினை சார்ந்த உணர்ச்சி வசப்படுதல் தவிர்த்து பூர்வாங்க உளவியலும் இருக்கிறது.

எங்கிருந்தோ வந்து கண்ணாடி டெகரேட் பண்ணி கல்லாப் போட்டு உக்காந்துருக்காம் பாரு.... என்கிற தரத்திலானது அது. ( மதவெறி/ மொழி வெறி/இனவெறி/ உள்ளூர் வெறிகள் தனி - வல்லம் தாஜூபால்)

தொலைக்காட்சியில் முத்தூட் நிறுவனத்தாரின் கடைகளில் கண்ணாடிகள் உடைக்கப்படுவதை சிலநேரம் பார்த்தேன். நல்லவேளையாக ஊழியர்கள் தாக்கப்படாமல் இருந்தார்கள்: மகிழ்ச்சி.

கலவரத்தைக் காரணம் காட்டி கடையை மூடிவிட்டுப் போய்விட்டார்களேயானால் பெட்டகத்துக்குள் இருக்கும் தங்கங்கள், அவற்றை அடகு வைத்தவர்கள் கதி என்ன? என ஒரு வினாடி திக்கென்று இருந்தது.

கடைகளில் அடகு வைத்தவர்கள் இரிஞ்ஞாலக்குடாவிலிருந்தோ பந்தனம் திட்டாவிலிருந்தோ வந்து வைக்கவில்லை. தமிழர்களுக்குச் சொந்தமான ஆபரணங்கள்.

இத்தகைய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பெரியபெரிய நகைக்கடைகளின் நிலவரம் பற்றி அறிவதற்கு ஆவல் மேலிட்டு நண்பர் ஒருவருக்கு போன்செய்தேன். என்ன இருந்தாலும் கிராமத்தில் இருந்த பொற்கொல்லர்கள் அவ்வளவு பேரையும் இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிய மாபெரும் புரட்சியாளர்கள் அல்லவா அவர்கள்?

‘பெரிய கடைகள் எல்லாம் நல்லா பாதுகாப்போட நடக்குது’ - என்றார் நண்பர்.

 ‘’நிறைய போலீசா?”

‘’ஆமா நெறைய போலீஸ்’’

‘’ஆக கடை ஊழியர்களுக்கும் நகைகளுக்கும் ஆபத்தில்லை...’’

‘’ நீங்க வேற சலம்பல் பண்ணினா அங்க இருக்கற செக்யூரிட்டிக பொதுமக்களைப் போட்டெறிஞ்சிருவானுங்க... போலீஸ் பாதுகாப்பு பொதுமக்களுக்குத்தான்.’’