Wednesday, December 29, 2010

பனிக்காலை

காலைப் பனியை
அறுவடை செய்ய
வந்திருக்கும்
கருக்கருவாள் போல
வந்திருக்குது கதிரவன்.

நுனித் திவலைகளை
ஆவியாக்கி
அனுப்பிவிட்டு
திளைத்தாடுது
தாவரங்கள்.

கடவு திறந்ததும்
குதூகலித்துச்
செல்கின்றன
மேய்ச்சலுக்குக்
கால்நடைகள்.

அப்புறமும்
காலை
முடிந்துபோகிறது.

Saturday, December 25, 2010

அதி

உங்களோடு நான் இப்போது
நினைவிற்கு வரவில்லையெனில்
கதவுகளைச் சாத்துங்கள்!
கதவுக்குப் பதிலாக கதவுகள்
இருக்கும்படி உங்களை நான்
ஆசீர்வதிக்கிறேன்.

நேற்று மெய் தவிர்த்த இருப்பில்
எல்லாமும் நடந்ததாகக் கனவு
கண்டதெங்ங்னம்?

போயே போயின போயினவே
..........
தவிர்த்தல் குறித்து
மனமோ இவ்விதமுரையாடினால்
போவது எவ்விடமோ?

உரைத்துத் தீராதது
யாரிடம் பகிரவென
தன்னில் விழித்த இமைக்கணப் பொழுது
நெட்டுயிர்த்துப்
பெரிது தவித்து
எல்லா இடமும் இடுமொரு
ஓலம்
யாவருக்கும் அழிக்க உரிமையுள்ள
ஒரு கோலம்.

Saturday, December 18, 2010

தலைப்பில்லாதது தன்னுயிரில்லாதது

 கடும் மௌனமோ ஒரு நாயின்
குரைப்பொலியைப் போன்றது.
ஓசைகளற்ற மனதின் நிர்க்கதியைப்
போல அது.

யாத்திருந்த சொற்கோவை என்பது
நம்மைக் கைவிடுவது எங்ஙனம்?
நம் சொற்கள் கேலிக்குள்ளாகின்றன
அல்லது நம் கற்பனை.

நம் சொற்களுக்கும் கற்பனைகளுக்கும்
எதிரி யார்?

இவ்விரண்டுக்கும் இரண்டே இருவர்
அதிபர் ஒன்று நாம் அல்லது நமக்குத் தேவையானவர்கள்.

இதில் யாதொன்று தவறிடினும்
நினைவில் வையுங்கள்
நாம் அடிமை.

நிலா நாற்பது -11

உடுக்கள் உதிக்காத மாலை
நிலா வீசுகிறது வாளை
நீல எழில் வானம்
கோலத் தனி மோனம்.

Thursday, December 16, 2010

தெரிவித்தல்

நள்ளென் யாமம் வலைப்பூவில் வந்த எனது ‘துக்க வலி’ கவிதையை அறிமுகத்தவம் - வாராந்திர வலைச் சஞ்சிகையில் பதிவேற்றியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி.pondicherryblog.com க்கு சென்றால் அதையும் வாசிக்கலாம். அதன் அனுபந்தமாக அறிமுகத்தவம் பகுதியில் எனது கவிதை உட்பட இதரர்களின் பயண, அரசியல்,கலை, இலக்கியம் சார்ந்த பல விஷயங்களையும் வாசிக்கலாம்.

இவ்வளவு நாட்கள் இந்தத் தளத்தை வாசிக்காமல் விட்டது இணைய வறுமையின் காரணமாகத்தான் என நினைக்கிறேன். நம்முடைய படைப்பு வந்தால்தான் ஒன்றை வாசிப்பது என்று ஆகிவிடுவது தேடலின் தேக்க நிலையையும் காட்டுகிறது. அறிமுகத் தவத்தின் கட்டுச் செட்டு எளிய நேர்த்தியுடன் மிளிர்கிறது. வாசித்துப் பாருங்கள்.

Tuesday, December 14, 2010

அரசியல் வானப்பிரஸ்தம்

கர்நாடகத்தில் பங்காரப்பா காங்கிரஸிலிருந்து மத சார்பற்ர்ற ஜனதாதளம் சென்றுள்ளார். ஞாபக ஆழத்தில் உள்ளே கிடந்த அவரது பெயர் கட்சி மாறியதன் மூலம் மீள் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு செய்தி வராமல் இருந்தால் அவரை நான் இறந்தவர்கள் கணக்கில் வைத்திருப்பேன். நிஜ லிங்கப்பா, தேவராஜ் அர்ஸ், குண்டு ராவ் கணக்கில் அவரையும் வைத்திருப்பேன். செய்தி வந்ததும்தான் ஓ ஆள் இன்னம் உயிரோடு இருக்கிறார் என முடிவு செய்துகொண்டேன்.

அவரது மகன் குமார் பங்காரப்பா, அவரது விலகலால் காங்கிரசுக்கு இழப்பில்லை என்கிறார். அதிக பட்சம் அவரது இரண்டு வாக்குகள் காங்கிரசுக்கு இழப்பாகலாமாயிருக்கும். குமார் பங்காரப்பா , பங்காரப்பா போலவே அரசியலில் இருந்து தற்போது ஓய்வு பெற்றுவிட்ட ஒரு பெரியவரை உதாரணம் காட்டி, ‘’அவரு மாதிரி பேரன் பேத்தியோட சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே இவரு’ என்று ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறார். சலங்கை கட்டி ஆடிய கால்கள் சும்மாயிருக்குமா.இனி இவரது இழப்பையும் மீறி கர்நாடக காங்கிரசை வலுப்பெறச் செய்யும் பொறுப்பு ராகுல்காந்திக்கு இருக்கிறது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைக் கொணராமல் தூக்கம் இல்லை எனக்கு என்று சொல்லியிருக்கிறார். இன்னும் கர்நாடகம் போன்ற சில மாநிலங்களையும் பீகாரையும் யோசிக்கும்போது அவரது தூக்கமற்ற நிலையை எண்ணி பயமாயிருக்கிறது.

மனிதன் தூங்காமல் இருந்தால் என்ன ஆகும் என்பது நாம் அறியாததல்ல.ஆனால் பாதகமில்லை. ராகுல் காந்தியை மயக்கங்கள் காப்பாற்றும்.

Monday, December 13, 2010

துக்க வலி

நெரிக்கும் வலிக்குப்
பிந்தைய காலை அயர்வில்
 வந்துற்ற கனவில்
பால்ய காலத் தோழி வந்தாள்.
ஒரே படுக்கையில் இருந்தாள்.
தீண்டல்களுக்குப் பிந்திய
என் நச்சரிப்பில் இசைந்து
வாகுதந்து படுத்தவளின்
பாலுறுப்புகள் இடம் மாறி
இருந்தன.

பிசைதலின் வெறியில் நான்
பிரக்ஞையுடன் செயல்பட்டபோது
ஆறெனப் பெருகி வழியும்
அவளது மூத்திரம் படுக்கைத்
திண்ணையை முற்றாக நனைக்கிறது.

இருவருக்கும் பொதுவான ஒரு
அக்கா வந்து சத்தம் போடுகிறாள்.
கனவு கலைந்தபின் கனவு
பற்றி எழுகிறது குற்றவுணர்வும்
அறவுணர்வும்.

நரகத்தின் சுவர்களுக்கு கற்கள்
சேகரமாகின்றன. உட்புறம்
வெளிப்புறம்
எங்கிருந்து கட்ட ஆரம்பித்தாலும்
அது அத்தனை ஒன்றும்
நல்லதுக்கல்ல...

Friday, December 10, 2010

நிலா நாற்பது- 10

நீலவிடம் படர்ந்த
தண் பொழிவு
நீர்க் கடல் மேலாகப்
பாற்குடம்.

Tuesday, November 30, 2010

பதினெட்டாம் நாளில் என்ன ஆகும்?

பங்குசேர் வாழ்க்கை பழிபாவமஞ்சிக் கள்ளம் செப்பாது
உள்ளது மொழியுமோ?  பழகியதே தழீஇய
செயலாற்று அரசு ;கூடுதலின்றி அவை
 நலிந்தே அழியினும் கிட்டுமோ தீர்வே? -

மானாடும் முன்றிலில் அவை நடவடிக்கைகளில் ஈடுபடாது அஞ்சாது துஞ்சிக் கிடந்த குடுமிப் பெரும் வழுதியை கால்க் காசும் பெறாத அரை ‘அணா’ர் பாடியது.

Saturday, November 20, 2010

மன மோகன....

குல்பி ஐஸ் காரர்கள் மாதிரி நடுராத்தியில் வந்து வீட்டுக்கு மெத்தை கொடுத்துவிட்டுப்போன சம்பவத்தைப் பற்றி எழுதுகையில் - மெத்தை வாங்கியது சர்தார்ஜி கடை ஆதலால் பல சிங்குகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். தலார் மெகந்தி மாதிரி சிலர் விடுபட்டுப் போய்விட்டார்கள். அந்தப் பட்டியலில் பிந்தரன் வாலே விடுபட்டுப்போனது என் மன ஆரோக்கியத்தைப் பறை சாற்றுகிறது.பலே பல்லே.

ஆனால், காகித ஓடம் பத்மா மன்மோகன் சிங் ஏன் நினைவுக்கு வரவில்லை? எனக் கேட்டது கொஞ்சம் யோசிக்கவைத்துவிட்டது. இத்தனைக்கும் மன்மோகனை நான் ரொம்பவும் அவரை நேசித்தேன். ஒரு ரூபாய் நோட்டில் அவரது கையெழுத்தைப் பார்த்தது இப்பவும் மனக் கண்ணில் இருக்கிறது. ஃபோர்ஜரித் திறன் மட்டும் எனக்கு இருந்தால் அவரது கையெழுத்தை இப்போது கூட நான் போட்டுவிடுவேன். அவரது ஆங்கில ஹெச்- சில் மேலே ஒரு முக்கோணம் உண்டு. பழைய கால மைக்- கினை அல்லது சட்டை மாட்டும் ஹேங்கரை நினைவூட்டக் கூடியது அது.

அவர் பிரதம அமைச்சர் ஆனதும் நாடு இன்னும் செழிக்கும் என்று நம்பிய பல அப்பாவியரில் நானும் ஒருவன். உண்மைக்கு நாடு செழித்துத்தான் விட்டதோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் நாட்டின் ஆன்ம வீழ்ச்சி பயமுறுத்துகிற அளவுக்கு இருக்கிறது. இத்தனை லஞ்ச அவலாவண்யங்கள் அற்ப சந்தர்ப்ப வாதங்களுக்கும் இடையில் அவரது பேரிட்டு ஆட்சி நடந்தாலும் அவரது பேரில் எனக்கு கோபமே வரமாட்டேன் என்கிறது. அமைப்பின் மொத்தத்தில் ஏதோ ஒரு இடறல்.

பாருங்கள் ஆறேழு நாளாக ஒரே அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும். அமளி நடப்பதால் செய்திகளில் அடிக்கடி மீரா குமார் பார்க்கக் கிடைக்கிறார். ரோஷ உணர்வு நரம்புகள் மன் மோகன் சிங்கிற்கு வேலை செய்யும் பட்சத்தில் அவர் தூக்கம் கெடுகிற பிரதமராகத்தான் இருப்பார்.

போயும் போயும் மெத்தை வாங்கும் போது அன்னாரது நினைவு வந்தால் நான் என்னதான் ஆவேன்?

Friday, November 19, 2010

மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கல...

புது இடத்துக்கு குடியேறிய முதல் நாள் இரவு வண்டி நிறுத்துமிடத்தில் பைக்கினை நிறுத்திவிட்டு இரண்டு கைகளில் இரண்டு சுமைகளை எடுத்துச்சென்றவன் ஹெல்மெட்டை கீழேயே விட்டுவிட்டு முதலாவது மாடியிலுள்ள வீட்டுக்குச் சென்றுவிட்டேன். ஞாபக மறதியை எனக்குத் தந்த இயற்கை மூன்று கைகளைத் தந்திருக்கவில்லை.

காலையில் தலைக் கவசம் நினைவுக்கு வந்து தலைபோகும் வேகத்தில் கீழே வந்து பார்த்தபோது பக்கத்துவண்டியின் இருக்கைமீது அது இருந்தது. வந்த வேகத்தில் நான் அதைக் காவியதும் வேறு ஒருத்தர் ஹெல்மெட் இருந்த வண்டியை எடுத்துச்சென்றார். ஹெல்மெட்டின் கேள்விக்கு விடை தெரியாமல் நிமிடக் கணக்கில் காத்திருந்தது போலிருந்தது அவர் தோற்றம். பச்சை குத்திக்கொள்வது அல்லது சுண்டுவிரலில் முடிச்சுப் போட்டுக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுத்தான் என்னைச்  சரிக்கட்டவேண்டும் என நினைத்தேன்.

இவ்விதமாக முதல் நாள் அமைந்து இன்றுகாலை மனைவி முதல் வசனமாக , ‘’ நான் இனி உன்னை திட்ட மாட்டேன் சிவா.” என்றாள். என்றால் ...நேற்றைய இரவின் தீவிரத்தையும் (வழக்கம் போல ) என் ஆன்மா நசுக்குண்டதையும் நீங்கள் உருவகிக்கவேண்டும்.

 முந்தா நாள் பிலே ஹள்ளியில் நானும் மனைவியும் ஒரு படுக்கை விற்கும் கடைக்குப் போனோம். விலை படியவில்லை. அதே நேரம் தம்பி ஒருவன், ‘’அண்ணா! நாளைக்கு நாம வேற ஒருபக்கம் போயி எடுத்துக்கலாம்.” என்றான்.

தம்பி உடையான் பகைக்கு அஞ்சான், படுக்கைக்கும் அஞ்சான் என்று மெத்தை வாங்கும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன்.

உண்மையில் பேனா பேப்பர்  வாங்குவது சிகரெட் தீப்பெட்டி வாங்குவது - இதைத் தவிர வேறு எதுவும் இயல்பாக வாங்கத் தெரியாது. அதனாலேயே தொட்டது தொன்னூறுக்கும் நண்பர்கள் துணையுடன்தான் வாங்கச் செல்வது.

நேற்று மெத்தை வாங்குவதற்காக தம்பி ரங்கசாமியுடன் ஜெய்நகர் 4 வது பிளாக் சென்றேன். கடை மூன்றாவது பிளாக்கின் விலாசத்தில் இருந்தது.அது ஒரு சர்தார்ஜி கடை என்பது  அமிர்தசரஸ் பொற்கோவில் படம் மாட்டப்பட்டிருப்பதிலும் மாலை போட்ட ஒரு புகைப்படத்திலிருந்தும் தெரிகிறது.அவர் ஸ்தாபகராகவோ ஸ்தாபகருக்கும் முந்தைய ஞாபகராகவோ இருக்கக்கூடும். கல்லாவில் இருக்கும் இருவர் உரிமையாளர் தோற்றத்தில் இருந்தாலும் வேடு கட்டிய தலை இல்லாமல் இளமைத் தோற்றத்தில் இருக்கிறார்கள். கோதுமைத் திடகாத்திரம்.

முதன் முதலாக ஒரு சர்தார்ஜிகளிடம் கொள்முதல் பண்ணப் போகிறோம் என்றதும் குஷ்வந்து சிங், ஜெயில் சிங், பிஷன் சிங் பேதி,ஹர்பஜன் சிங்  (அதுவும் சமீபத்திய இரண்டு செஞ்சுரிகள்)  எல்லாம் நினைவுக்கு வந்தார்கள். எனக்கு நிறைவான மனநிலை உண்டானது.

விலை பேசி கூடுதலாக இரண்டு தலையணைகளுக்கு உத்தரவாதம் பெற்று மொத்தப் பணமும் முதலிலேயே கட்டி,மாலைக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நானும் தம்பியும் விடைபெற்றோம்.டெலிவரி என்பது மாலைக்கு மேல பல பெட்டுகளை எடுத்துப்போட்டுக் கொண்டு சப்ளை செய்வார்கள் என்கிற புரிதல் இருந்ததால் இரவு 7 மணி வாக்கில் அனுப்பிவைக்கும் படி கடைக்காரரிடம் சொல்லிக்கொண்டு வந்தேன். ( எப்போதும் பிறரை முன்னிட்டு நாம் சிந்திக்கிற வேலையை நிறுத்திக்கொள்ளவேண்டும்)

மாலை ஆறு மணிக்கு முதலாவது நினைவூட்டும் போனை கடைக்குச் செய்தபோது எட்டு எட்டரைக்கு மெத்தை வரும் என்றார்கள். போன் போடும் பொறுப்பை என் மனைவிடம் விட்டுவிட்டேன். எனக்கு லைன் கிடைப்பதில்லை என்பது ஒரு புறம் இருக்க பேச்சு மொழியில் எனது அறுமொழி அறிவும் எதிர்ப்பலன்களை விளைவிக்க வல்லன.

எட்டரை என்பது ஏற்புடையதே என்றேன் நான். நகரின் அகலம் மக்கட் தொகைப் பெருக்கம் வாகன ஏற்பாடுகள் நெரிசல் இவை பற்றிய புரிதல் நமக்கு உண்டுதானே.

மணி எட்டே முக்காலுக்குள் எனக்கு முதலாம் ‘துயில் நீக்கி’ முடிந்துவிட்டது. ( துயில் நீக்கி என்றால் பள்ளி எழுச்சியின் எதிர்.) உருப்படியாக ஒரு பொருள் வாங்கியதுண்டா, எதுக்குப் பாத்தாலும் எவனையாவது துணைக்குக் கூட்டிப் போவேண்டியது.... சொந்தமா ஒரு காரியமுமே பண்ணத் தெரியாதா.... என்று கடிதலின் நீட்சி ‘இனியும் நாம் வாழ வேண்டுமா? - என்கிற (அடிக்கடி தோன்றுகிற) உணர்வு நிலைக்குக் கொண்டு தள்ளியது. நாலில் விளையாதது நாற்பதில் விளையாதல்லவா.

ஒன்பது மணிக்கு மனைவி கடைக்குப் போன் செய்தார். ஆங்கில விசாரிப்புக்கு ஹிந்தியில் பதில். நாளைக்குத் தருகிறோம் என்பதான பதில்.(கல்... கல்... என்கிறார்கள் போல. நல்லாப் போட்டீங்கப்பா கல்லை. ஒருத்தன் படுக்கைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வந்து உயிர் நிலையாமை பத்தி யோசித்துக்கொண்டிருக்கிறான்.)

‘’ஒன்லி இங்க்லீஷ் ஆர் கன்னடா... டோண்ட் ஹிந்தி...” என்றார் மனைவி கோபமாக. அறிஞர் அமரர் அண்ணாவின் அமைவிடத்தில் அணையாவிளக்கு அல்பநேரம் சுடர்கூடிப் பிரகாசித்திருக்கக் கூடும் அந்நேரம். பிறகு மனைவி பேசிய பேச்சில் அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டுக்கு மெத்தை வந்துவிடும் என்றார்கள். மனைவி தாளித்தது நர்சிங் ஸ்டேஷன் ஆங்கிலத்தில்.சம்ஹார கடவுள்களின் கடுமை தெரியும் மொழிஅது . எனக்கு பயம் மேலிட்டு இப்போது நவ்ஜோத் சிங் சித்து நினைவுக்கு வந்தார். லாஃப்ட் சாட்டுகளில் அழகு சிக்சர் அடிக்கிற சித்துவோ ஸ்டுடியோவில் வர்ணனை புரிகிற சித்துவோ அல்ல கார்ச் சண்டையில் நடுரோட்டில் நள்ளிரவில் ஒருத்தனைப் போட்டெறிந்த சித்து.

போன் செய்துவிட்டு அடுத்த பாட்டம் துயில் நீக்கப் பாட்டு. உடனே தூங்கிவிட்டார். இருநூறு டிகிரி செல்சியசில்  கொதித்துவிட்டு உடனே உறங்க பெண்களால் முடியும். நான் தூங்காமல் படிக்க ஆரம்பித்தேன். இரவு பதினொன்றே முக்காலுக்கு ஒரு போன் வந்து பலவழியாக வழி சொல்லி ஒருவழியாக மெத்தை வந்து சேர்ந்தது.

வண்டியில் வந்த இருவர் நான் மாடி என்று சைகை காட்ட மெத்தையை எடுத்துக் கீழே வைத்தனர். நான் வண்டியில் இருந்த இரண்டு தலையணைகளை எடுத்தேன். டிரைவர், ‘’ இது வேற பார்ட்டிக்கு போறது’’ என்றார்.

இரவு பன்னிரெண்டு மணிக்கு இரண்டு தலையணைகளுக்கு ஆட்கள் இருக்கிறார்களா?  என வியந்தேன். பில்லில் வேறு மெத்தை ஒரு பீசஸ் என்றுதான் இருந்தது. கிரில் கேட்டில் சாய்ந்திருந்த மெத்தை உள்ளில் பாதி தெருவில் பாதியாக திரிசங்கு போலவும் சிவகுமார் போலவும் பாவப்பட்டு நின்றிருந்தது.

‘’உங்களுக்கான இரண்டு தலையணைகளை நாளை கொண்டுதருகிறேன் ‘’ என்றார் டிரைவர்.இது ஆவறதில்லை. ‘’ இந்த மெத்தையை இப்ப திருப்பி எடுத்துக்கிட்டுப் போங்க. நாங்க கட்டின காசை இப்பக் குடுங்க...” என்றார் மனைவி சாந்தி.

அடுத்த தேர்டு அம்பயராக செல்ஃபோன் வந்தது.  கடையில் இருந்தவர்கள், வந்தவர்கள் மற்றும் மனைவிக்கு இடையிலான போன் ஆங்கிலம், ஹிந்தி,கன்னடம், தமிழ் என நவ சாரமாக இருந்தது.உலக மயமாக்கம் வேகத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகளில் பொதுமொழி அமலாகிவிடும் போலிருக்கிறது.

 தலையணையை அவர்களிடம் ஒப்படைத்து விடு என்று கடையில் சொன்னார்கள்.

டிரைவர், ‘’இந்தத் தலையணைகள் விலை கூடியவை.” என்றார்.  ‘’இது தெரியுதல்ல  இதுக்கான தலையணைகளை ஏன் எடுத்து வரலை? ‘’ என்றார் மனைவி. அப்போது அவரது கையில் சுருட்டப்பட்ட வெண் தாள் கற்றை கையில் இருந்தால் பொருத்தமாயிருக்கும். எங்கள் தரப்புக்கு செக்யூரிட்டி துணைக்கு வந்தார். அப்புறம் மெத்தையும் தலையணைகளும்  மேலே வந்தன. உறங்கினோம். மெத்தை வாங்கினேன் தூக்கத்த வாங்கல... என்கிற வரி ஞாபகத்துக்கு வந்தது.


இன்று மெத்தைக் கடையில் இருந்து ஃபோன் வந்தால் விலை உயர்ந்த தலையணைகளைப் பற்றி என்ன செய்வது,சொல்வது, முடிவெடுப்பது.. மற்றும் நேற்றிரவில் கைப்பற்றிய தலையணைகளின் மெய்- யான சொந்தக்காரர்களின் தார்மீகம் ஆகியன பற்றி யோசிக்கும் போது...

பகல் தூக்கம் போச்சே!

ஹெலிகாப்டர் தவிர அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கிடைக்குமொரு மையம் அது. தம்பி

Thursday, November 18, 2010

ஜரகண்டி... ஜரகண்டி.

நேற்று முன் தினம் திருப்பதியில் 85 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். உண்டியல் வருமானம் ஒரு கோடியே ஐம்பத்தியைந்து லட்சம். (தகவலுக்கு நன்றி : தினத் தந்தி).

நான் இன்னும் திருப்பதி போனதில்லை என்கிற உண்மையிலிருந்து இதை எழுதப் போகிறேன். (மன் மோஹனையும் ராசாவையும் நேரில் பார்த்துவிட்டா மேடைகளில் திட்டுகிறார்கள் அதுபோலத்தான் இதுவும்.)

300 - ரூபாய் கொடுத்து வைகுண்டம் கியூ காம்ப்லெக்சில் காத்திருந்த பக்தர்கள் ( இவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும் நேரடியாக அந்த மாயா வைகுண்டத்தில் போய் இறங்கிவிட்டால் எப்படித்தான் இருக்கும்.)

நின்று கொல்லும் அல்லது நின்று பாலிக்கும் தெய்வத்தைப் பார்ப்பதற்காக காத்திருந்த ப(க்)தர்களில் சிலர் அறை ஒன்றில் இருந்த டி.வி... அறைக் கதவு ஆகியனவற்றை உடைத்திருக்கிறார்கள் என்பது செய்தி. ஒரு நாளில் உண்டியலில் இத்தனை பணம் விழுவதெல்லாம் இயல்பு வாழ்வின் குற்றச் செயல்பாட்டு விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதன் எடுத்துக்காட்டுகள்.

முடி உள்ளவன் காணிக்கை கொடுக்கிறான். பக்தர்கள் எண்ணிக்கை இவ்வளவு அதிகப்பட்டுவிட்டதால் ஏன் ஆந்திர அரசு இன்னும் கன்வெயர் பெல்ட் சிஸ்டத்தை கொண்டுவரவில்லை ?

பின்னாலிருந்து எவராவது முகம் அறிமுகமில்லாத முண்டங்கள் விலாவில் நெட்டித் தள்ளினால்தான் தரிசனம் பூர்த்தி அடையுமோ என்னவோ.

ஆனால் ஒன்று புரிந்துவிட்டது ஆழ்மனதின் மதமும் குறியீட்டு வடிவங்களும் இப்போது நாம் காண்பவை அல்ல. கற்கால ஆயுதங்களும் வேட்டை வேட்கையுமே நம் மதம். நல்ல விழா நாளில் முப்பத்தியிரண்டு அறைகளை பதினாறாகக் குறைத்துக் கூட்டத்தைச் சேர்த்துப் பார்த்தால் பாலாஜியே இதை ஒப்புக்கொள்வார்.

Monday, November 15, 2010

இன்றைய ஆச்சரியம்...

நண்பனுடன் கார் டியூப் வாங்குவதற்காக டயர்க் கடைக்குச் சென்றிருந்தேன். 360 ரூபாய் பில்லுக்காக நான்கு நூறு ரூபாய்கள் கொடுத்ததும் கல்லாப் பெண் நாற்பது ரூபாய் மீதி தந்தார்.அது நான்கு செம்பு டோக்கன்களைப் போலிருக்க நண்பனைப் பார்த்து , ‘’என்னப்பா இது?’’ என்றேன்.

பத்து ரூபாய் என்றான் அவன். சரி சில்லறைத் தட்டுப்பாட்டுக்காக அவர்களாகத் தயார் செய்தது போலிருக்கிறது எனக்கருதி, ‘’இதுக்கு இவங்க கிட்டவே சாமான் வாங்கணுமா?’’ என்று கேட்டேன்.

‘’ஐயோ இது பத்து ரூபா காயின். தெரியாதா? ’’ என்று கையில் கொடுத்துவிட்டான். அதை வியந்து போற்றி பர்சில் வைத்துக்கொண்டேன். (இதன் மூலம் பாவப் பட்டவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால்.... நாட்டுல பத்து ரூபா நாணயம் பொழங்குதுங்கோவ்...)

அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு கடையில் ஐம்பது ரூபாய் செலவுக்கு நூறு ரூபாய் எடுத்துக்கொடுத்தேன் . சில்லறை இல்லை என்றார் கடைக்காரர். பாக்கெட்டைத் தேடியதில் சரியாக ஐந்து பத்து ரூபாய்த் தாள்கள் இருந்தன. ஒன்று குறைவாய் இருந்திருந்தாலும் அந்தக் காசு பறிபோயிருக்கும்.

விரும்ம்பின பொருள் அல்லது கிடைத்ததும் விருப்பத்தைப் பெறுகிற பொருள் மகிழ்ச்சிதரத் தக்கது. கைகூடிய பொருள் தக்கவைப்புக்கு உள்ளாவதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.

(ஒரு பய, பத்து ருவா கெடச்சுட்டா என்னென்ன பேச்செல்லாம் பேசறான் பாருங்க)

கதவு ஜன்னல் மற்றும் நிலைகள்...

வத்தலக்குண்டு, கோட்டைப் பட்டி அருகேயுள்ள காமாட்சிபுரத்தில் மனைவியுன் பொருள் உழைப்பினாலும் கொத்தனார் சித்தாள் மின்னர் கம்பியர் உள்ளிட்ட பலரின் கூட்டுழைப்பால் என் மாமனாரின் நேர்ப்பார்வையில் வீடு புத்துருவாக்கம் செய்யும் பணி நேற்றைக்கு முதல்நாள் முடிவுற்றதாகக் கேள்விப்பட்டேன். முடிவுற்ற அந்த வீட்டை நான் இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இந்த வீடு பணியப்படுவதற்கு முன் பழைய வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளையே பக்கவாட்டிலும் மேற்புறமும் வேய்ந்து நான்கு மாதகாலம் வாழ்ந்துவந்தோம். இருபத்தஞ்சடி நீளத்துக்கு முப்பதடி அகலமுள்ள கூடாரம் அது.மூன்று புறம் ஆஸ்பெஸ்டாஸ் அட்டைகள் அண்டியிருக்க ஒரு முழுமுதற்பக்கம் அதன் முகப்பாயும் திறப்பாயும் இருந்தது.

அதில் பாதியை படுதாக்கள் கொண்டு மறைத்து மீதிப்பாதிக்கு சுருட்டுச் சாக்கே கதவாக இருந்தோம். பெரிதாக ஒன்றும் தொலைந்ததாகத் தெரியவில்லை. முந்தாநாள் கடைசிக் கட்டப் பணியாக ஜன்னல்களுக்குக் கண்ணாடி பொருத்துதல் கதவு பொருத்துதல் ஆகியன் நடந்து முடிந்தன.

புதியதாக மாமனார் பூட்டும் சாவியும் கூட வாங்கி வந்திருப்பார் என்றுதான் நினைக்கிறே. ஆனால் இரவில் அவருக்கு சாந்தி போன் செய்தபோது சொன்னார்.

‘’ உங்க அம்மாவோட செல்போன் தொலைஞ்சு போச்சு.”

எனது அலைபேசி தொலைந்த போது என்னென்ன மாதிரி விமரிசித்தார்கள் என எண்ணி குரூரமான சந்தோஷத்தை அடைந்தேன். அடுத்த பயம் கதவு மற்றும் ஜன்னல்களைப் பற்றியது. மரக் கதவு மற்றும் மனக் கதவு.

Tuesday, November 9, 2010

ஐராவதம்....

பெங்களூரிலிருந்து வத்தலக்குண்டு வந்துவிட்டு திரும்பவும் பெங்களூரு போகும்போது மனைவி நல்லாளையும் அழைத்துச் செல்லவேண்டிய கடப்பாட்டுக்கு ஆளாகிவிட்டேன். இப்போது கடப்பாடு என்கிற சொல்லே இக்கட்டு என்பதான தொனியை உள்ளடக்கிவிடும்.

தீபாவளி விடுமுறை முடிந்ததும் தமிழ்மக்களின் சஞ்சார விதிகள், வீதிகள் பற்றி உத்தேச அறிவு இருப்பினும் ஒரு மடப்போக்கில் முன்பதிவுக்கு முயற்சிக்காமல் விடுவிட்டேன். வதிலையிலிருந்து திண்டுக்கல் வரும்போது பேருந்து நெரிசலில் மனந்தளர்வுற்ற மனைவி வேறு ஏற்பாடு எதாவது பண்ணு! என்றாள். நண்பர் உடையார் நலிவுக்கு அஞ்சார்.

நண்பனுக்குத் தொலைபேச அவர் திண்டுக்கல்லில் பிறிதொரு நண்பரிடம் சொல்லிவைத்தார்.திண்டுக்கல் நண்பரின் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே டிராவல் ஏஜெண்டுகளின் ஊடலும் ஊடாடலும் மிகுந்த கூடாரம் இருக்கிறது.திண்டுக்கல்லிலிருந்து பெங்களூருக்கு ரயில்கள் உண்டு என்கிற வரலாற்ர்று உண்மையை முதன்முதலாக அறிந்தேன்.ஆனால் அந்த உண்மையால் தற்கணத்தில் உபயோகமில்லை.

ஏஜெண்டுகளிடம் நட்பின் செல்வாக்கைச் செலுத்துமாறு ஜெயக்குமாரைப் பணித்தேன். கேப்பி(எ)ன்னா பரவாயில்லையா ? என்றார்.

கே.பி,என்னா தாராளமா....

கே.பி.என் அல்ல கேபின்.

தேவை நிமித்த மிசை அளபெடையில் எனக்கு கேபின் கே.பி.என்னாக கேட்டிருக்கிறது.

அதற்கு ஒப்புக்கொண்டு பதினொரு மணிக்குப் பேருந்து ஏறுகிற வரை பெண்களை முன்னால் அனுமதிப்பார்களா எனக்கிலியாக இருந்தது. டிரைவருக்குப் பின்னிருக்கையில் மட்டும் ஐந்து பயணிகள். இடது ஓரம் என் துணைவிக்கு அடுத்து நான். அதையடுத்து மூன்று தூங்குகிறவர்கள். அதிலும் வெள்ளைவேட்டி சட்டைப் பெரியவரின் முழங்கால் மூட்டும் கியர் ராடின் வெள்ளிக் குமிழும் இரண்டு அங்குல இடைவெளியிலேயே கடைசி வரை இருந்தது. எதாவது ஒரு தடவையேனும் கிளட்சை மிதித்துவிட்டு டிரைவர் பெரியவரின் முட்டியை நெம்புவார் என்றே எதிர்பார்த்தேன்.

அப்படி நடக்கவில்லை. டிரைவர் ஏழாவது சிகரெட்டைப் பிடித்து முடித்ததும் சேலத்து முகப்பு வந்திருந்தது. அங்கே தேநீர் குடிக்க எத்தனித்தார்.  கிளீனர் அடுத்து நான் சொல்ற கடையில நிறுத்து என்று விரட்டினார்.  அடுத்த கடை சேலத்தை அடுத்து வந்தது. அங்கே ஒரு காவல் வண்டி நின்று போக்குவரத்தை ஒழுங்கு செய்ய அங்கேயும் தேநீருக்கு நிற்காமல் வண்டி தர்மபுரியை நோக்கி ஓடியது. தொப்பூரில் தேநீர் நேரத்துக்குப் பின் ஓட்டுனர் மாறும் நேரத்தில் ஒரு பட்ரோல் வாகனம் வண்டியைச் சமீபித்து ஓட்டுனர  அழைத்தது. அவர் காக்கிகளிடம் உரையாடிவிட்டு வந்து டீக்குக் காசு கேக்கறாங்க என்றார்.

கிளீனர் ஒரு பத்து ரூபாயைக் குடுங்க என்றார்.

பத்து இருபது நாற்பது என்று போய் விடை கூறுதல் ஐம்பது ரூபாயில் முடிந்தது. ஐந்து அல்லது ஆறு காவலர்கள் வந்த அந்த வண்டிக்கு பத்து ரூபாய் தரச்சொன்ன கிளியை நினைத்து வியந்தேன்.

உலகம் இன்னும் தைரியத்தை முழுக்கவும் இழந்துவிடவில்லை. கேபினில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண்வேறு டைட்டானிக் கப்பல் நுனியில் நிற்கிற வின்ஸ்லெட்  போலக் காட்சியளிக்கிறாள். வீர உலகு வாழ்க!

Wednesday, November 3, 2010

திறன்....எந்திரன்

ரஜினி தெறம காட்டிய எந்திரன் படத்தினை நான்கு நாட்கள் முன்னால் பார்த்தேன்.அறிவியல் சாத்தியங்களைப் பற்றிப் பேசுவதற்கு முயன்றிருக்கிறது, அறவியல் சாத்தியங்களைக் கொன்றிருக்கிறது படம்.சுஜாதா இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருக்கமாட்டார் படம் பார்த்திவிட்டு.

நிகர் நிலை மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி வசீகரனாக ரஜினி.(படத்தின் மூல முடிச்சு இது.மூலை மற்றும் மூளை முடிச்சுக்கள் வேறுவேறு.அதைப் பற்றி இங்கு நான் பதியப்ப்போவதில்லை.) அந்த ரோபோட்டை தேசப் பாதுகாப்புக்காக அனுப்புவது வசீகரனின் எண்ணம்.அதுபோன்ற ஆயிரக் கணக்கான வீர உருக்களை உருவாக்கி நாட்டைக் காக்கலாமாம். உயிர்ப் பலிகள் தவிர்க்கப்படுமாம்.

இதில் என்ன ஒரு பிரச்னையென்றால் ஐந்து மணிநேரம் மின்சாரம் தடைபட்டால் நாடு அம்பேல். என்னடா இவ்வளவு அபத்தமா இருக்கே என யோசித்தவாறே படம் பார்த்த என் எண்ணத்தில் சிலிகான் விழுந்தது. நான் படம் பார்த்து முடிகிற வரை கரண்டு போகவேயில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

Friday, October 29, 2010

ஒரு குறுஞ்செய்தி....

இது வய்லாம் பூக்கள்
பிஞ்சுகளாய் மாறும் காலம்.
காகத்தின் முட்டை
குஞ்சுகளாய் மாறும்காலம்.


நண்பரும் கவிஞரும் நெசவருமான சு.வெங்குட்டுவன் அனுப்பிய குறுந்தகவல். இந்த வய்லாம் பூக்கள் என்றால் என்னவென்று புரியவில்லை.

Wednesday, October 27, 2010

நானே என்னுள் இல்லை....

முந்தாநாள் ராத்திரி ஒரு கனவு.

சுவரில் உள்ள போட்டோவிற்கு மாலை சூட்டப்பட்டிருக்கிறது. முன்னே உள்ள மேஜைக்குக் கீழ் நானும் கவுண்டமணியும் பேசிக்கொண்டிருக்கிறோம். அது ஏதோ சினிமாக் காட்சி எடுப்பதற்கான முஸ்தீபு போலத் தெரிகிறது. கவுண்டமணி இயக்குனராக இல்லாத பட்சத்தில் நான் இயக்குனரா கதாசிரியனா இயக்கமா ஆஃபீஸ் பாயா தெரியவில்லை.

சற்று நேரத்தில் வடிவேலு வந்து போட்டோவைப் பார்த்து அழுகிறார்.திருமணத் தரகரான அவர் அப்படி அழுது கொண்டிருக்கும் போதே கவுண்டமணி மறைந்து விடுகிறார். இப்போது போட்டோவில் கவுண்டமணி. பெண் பார்த்து வடிவேலு கட்டிவைப்பார் என எண்ணி எண்ணி ஏமாந்து போன - ஏமாந்து இறந்து போன கவுண்டமணி.

நான் கதவுக்கு வெளியே வர உள் காட்சிகள் மறைந்து போகின்றன. தெருவில் ஒரு குண்டுப் பெண்மணியும் ஒரு பையனும் நடந்து போகிறார்கள்.

கனவு கலைந்து எழுந்துவிட்டேன். என்ன மாதிரியான கனவெல்லாம் வந்து தொலைகிறது என சுய இரக்கம் கவிகிறது. அந்தப் பெண்ணும் பையனும் யார் யார் என யோசித்து இன்று விடை கண்டுவிட்டேன்.

பேசாமல் ஜெயசித்ராவின் மைந்தர் அம்ரேஷ் கணேஷ் நடித்த (படத்தலைப்பே பகிர்வின் தலைப்பும்) படம் பார்த்து இயல்பு வாழ்கைக்குத் திரும்பவேண்டியதுதான்.

நிலா நாற்பது -9

நள்ளிரவில் நிலா.
நந்தவனத்தில்  உலா.
தனிமையெனில் சாரம்.
துணையுமெனில்
சராசரம்.

Saturday, October 16, 2010

தமிழ் மலை...

நண்பர் நல்லசிவனின் அறையில் ஒரு திருமண வரவேற்பு அழைப்பிதழ் கண்டு அகமகிழ்ந்தேன். தமிழ் தருகிற பல சாத்தியங்களில் ஒன்றை அது வெளிப்படுத்தியது. அதன் மொத்த வடிவத்தையும் இங்கு தருவது மெத்தச் சரியாக இருக்கும்.

                                    வரவேற்பு விழா அழைப்பிதழ்

பூமலை பொழியும் சேமலை வலசில்
பயிரங் குலத்தின் பாரம் பரியம்
பருவதம் மணந்த பாலசுப்பிர மணியன்
திருவளர் செல்வன் பார்த்திபன் யானே!
ப்ரியா உடனே தங்களை அழைக்கும்
இருமன ஏற்பு திருமண வரவேற்பு!

பொள்ளாச்சிப் பக்கம் பில்சின்னாம் பாளையம்;
அதில் வாழும் ஆந்தை குலத்து
மயில்சாமி ராதாமணி; மகிழ்வுடன் பெற்ற
திருமகளே; மணமகளாம் மோகனப் ப்ரியா
பொற்கரம் பற்றும் நற்திரு மணவிழா
முகூர்த்தம் முடித்து முறையான வரவேற்பு !

இனித்திடும் இரண்டு ஆயிரத்துப் பத்தில்
அக்டோபர் மாதம் இருபத்து நான்கு
ஞாயிறு மதியம்; நலமிகு வேளை
மணியோ பதின் ஒன்றுக்கும் மூன்றுக்கும்
இடைபட்ட நேரம், இனியவரே வருக

ஈரோடு நடுவில் சம்பத் நகரில்
சீரோடு , கொங்குக் கலை அரங்கில்
நடைபெறும் விழாவிற்கு நட்பே வருக !
நாங்கள் கைகோர்த்துக் காத்தி ருப்போம்
தங்களை வரவேற்க ! வருகை தருக !                                 
                                                                                            பாசமிகு . பார்த்திபன்
                                                                                            நேசமிகு . ப்ரியா

இஃதே  அழைப்பிதழ்.

மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

இதுவரை நான் சந்தித்திராத இனிய நண்பர் பார்த்திபன் சேமலை வலசில் பிறந்ததற்காக ‘பூமலை ...’ எப்படித்தான் பொழியும் என மனக்கண்ணில் சிந்தித்துச் சிந்தித்துப் பார்க்கிறேன். ம்... அழகாத்தான் இருக்கு.

Thursday, October 14, 2010

பழம் பூரி அல்லது பழம் பொரி

பழம் பொரி என்றோ பழம் பூரி என்றோ கூவப்படுகிற இந்த பட்சணம் உண்மையில் பழம் பஜ்ஜி என்றே அழைக்கப்படவேண்டியது. நேந்திரம் பழத்தின் கீற்றை கரைத்த கடலை மாவில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுப்பார்கள். கடலை மாவில் சர்க்கரை போடுவார்கள் என்கிறார் என் மனைவி சாந்தி ராணி. இல்லை என்கிறேன் நான். இப்படி வாதாடும் இருவருக்கும் முதன் முதலாக மின்ஞ்சலில் டிக்கெட் பதிவு செய்து ரயிலில் பயணிக்கிற அனுபவம் நேற்றுக் கிடைத்தது.கோயமுத்தூரில் ஒரு நண்பனிடம் சொல்லிவைத்து டிக்கெட்டை வத்தலக்குண்டு பிரவுசிங் செண்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்குள் நிகழ்ந்த சம்பவங்கள் தனியாக ஆயிரம் வார்த்தைகளை அடையும்.

பேருந்துப் பயணச் சீட்டைத் தவிர வேறொன்றையும் அங்கீகரிக்காதது என் வாழ்க்கை முறையும் நிலையும். அங்கீகரிக்காதது மட்டுமல்ல மன அனுக்கமும் கொள்ள முடியாது. இதனால் ரயில் டிக்கட்டுகள் எனது பாக்கெட்டிலிருந்து  விடுபடுவதற்கும் நாட்களை எடுத்துக்கொள்கின்றன.

கோயமுத்தூரில் இருந்து இண்டர் சிட்டியில் பெங்களூரு என்பது பயணத்திட்டம். இப்போது இண்டர் சிட்டி என்பது பெங்களூரு - எர்ணா குளம் இடைப்பட்டதாக ஓடி வருகிறது.கோய முத்தூரில் ‘எத்தனை மணிக்கு பெங்களூருக்கு ரயில்?’ என விசாரித்த போது நண்பர் பாலாஜி வேறெங்கோ விசாரித்து விட்டு ‘’ 12. 45 ‘’ என்றார். ’நன்றி பாலாஜி’ என்று அலைபேசியை அணைக்கப் போகையில் ‘’ஒரு நிமிஷம் ‘’ என்றார். அடுத்து அவர் சொன்ன தகவல் முக்கியமானது. 

பெங்களூருக்கான வண்டி நின்று கொண்டிருக்கிற நேரத்தை அடுத்து பத்துப் பதினைந்து நிமிட இடைவெளிக்குள்ளாக பெங்களூரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் வண்டியும் வரும். அது எதிர் பிளாட்ஃபாரத்தில் நிற்கும்.ஆகவே.....

பாலாஜி சொன்னது எனக்குப் புரிந்துவிட்டது.நண்பெண்டா என மனதுக்குள் கூவினேன்.பயணங்களில் என்ன விதமான ஆபத்துகளை நானும் நண்பர்களும் எதிர்கொள்வோம் என்பதை பாலாஜி அறிந்துவைத்திருக்கிறார். மாநிலம் மாறிப்போய் “திருமங்கலத்தில் மலயாளிகளா?’ என வியந்தவாறு கொல்லத்தில் ரயிலிறங்கிய நண்பர்களும் நமக்கு உண்டு.

ரயில் ஏறியபோது நான் காட்டாத அவசரத்தை என் மனைவி காட்டினார். ஆகவே இரண்டு அன் ரிசர்வ்டு பெட்டிகளில் எங்களது உணவுப்பொட்டலம் உள்ளிட்ட ஆறு பைகளை சுமந்து ஏறி இறங்கி கடைசியில் ஜெனரல் கம்பார்ட் மெண்ட்டை அடைந்து கிடைத்த இருக்கையில் அமர்ந்ததும் மனைவியிடம் சொன்னேன். ஐந்து நிமிடம் என்பது ஓரளவு நல்ல கால அளவு . பேருந்து ஏறுகிற மாதிரி ரயில் ஏற வேண்டியதில்லை என்று.


இப்போது எங்கள் இருக்கைகளின் எண்கள் தெரியவில்லை. இதில் ரயில் நிலையத்தில் காத்திருந்த முப்பது நிமிடங்களில் அதற்கான இடத்தில் விசாரித்து இருக்கை எண்ணை அறிந்திருக்க முடியும். முட்டாள்களுக்கு முப்பது நிமிடமும் போதாத காலம்தான் என்பதை ஏற்கெனவே மெய்ப்பித்திருந்தேன் நான். ஈ மெயில் டிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட தாள்கள் பிரிண்டில் கிடைக்குமா? அதில் இருக்கை எண்களும் குறிக்கப் பட்டிருக்குமா என்பது அனுபவஸ்தர்கள் பின்னூட்ட வேண்டியது.

நண்பன் செல்வனும் ரம்யாவும் கட்டிக் கொடுத்த  சாப்பாட்டில் தயிர்ச் சோற்றுக்குப் போகுமுன்னரே சேலமும் வந்து எங்கள் எண்களுக்க்ப் பயணிகளும் வந்துவிட்டார்கள்.சாப்பாடைப் பாதியில் நிறுத்திவிட்டு எதிர் இருக்கைக்கு மாறியதில் என் மனைவிக்கு அமர இடம் கிடைத்து நான் ஸ்டாண்டிங் ஆகிவிட்டேன். டி,டி.ஆரைத் தேடி சமையற் கூடம் வரை ஒருதடவை போய் வந்தேன். சாந்தியிடம் வந்து காணவில்லை அறிவிப்புக் கொடுத்தேன்.கொஞ்ச நேரத்தில் இரண்டு பெட்டிகள் தாண்டி டிடிஆர்  தட்டுப்பட்டார்.

அடுத்து எங்கள் திசை நோக்கி வருவதற்கான முஸ்தீபும் திசையும் கொண்டிருந்தார். எப்படியும் அரை மணி நேரம் பிடிக்கும் என்கிற நிலையில்தான் பழம் பொரிக்காரர் ( சந்திரன்) என்னைக் கடக்க மூன்று கொண்ட செட்டை வாங்கினேன். 24 ரூபாய். இரண்டைப் பதினைந்து ரூபாய்க்கு விற்பதுதான் இப்போதைய இந்திய (வாடிக்கையாளர் ) நிலைக்குச் சரி என்பது கருத்து. ஆனால் சந்தைகள் வாடிக்கையாளரின் நலன்களையும் நிலைகளையும் கருத்தில் கொண்டதல்ல. சாந்தியும் நானும் தலா ஒன்று தின்ற பின் சாந்தி சங்க காலத்துக் காதல் மானாக மாறி மூன்றாவதை என்னைத் தின்னப் பணித்தார். இன்று ஃபோர்டிஸ் மருத்துவமனையில் செவிலியாகப் பணியேற்கப் போகும் பதற்றம் பசி நுண் விருப்பு ஆகியனவற்றை மங்கச்செய்திருந்தது அவளிடம். ( எவ்வளவு நேரம்தான் மரியாதைப் பன்மையில் எழுதுவது)

மூன்றாம் பஜ்ஜியைத் தின்று கொண்டே திரும்பிப் பார்த்தால் டிடிஆர் எதிர்த்திசையில் சென்று கொண்டிருந்தார்.சரி பெங்களூரு வரை நின்று கொண்டே போக முடியாது என்ற எண்ணத்தில் கையில் பஜ்ஜியுடன் அவரை நோக்கி எனது தடை ஓட்டத்தை ஆரம்பித்தேன். சார் என்று நான் அவரை அழைத்த தருணத்தில் அவர் என்னைப் பார்த்தபோது வாயில் குதம்பிய மீதத்தின் பஜ்ஜியும் வலது கையில் பஜ்ஜியின் மீதமும் இருந்தன.இடது கையால் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எட்டாக மடிக்கப்பட்ட பிரிண்ட் அவுட்டை எடுத்து நீட்டினேன்.

‘’எங்க சீட்டு நம்பரைப் பாத்து சொல்லுங்க சார்?

இந்த நிலையிலும் மனிதரை ஆய்ந்தேன். அவர் கோட்டு அணிந்திருந்தாரே தவிர நேம் பேட்ஜ் அணிந்திருக்கவில்லை.(பழம் பொரி சந்திரன்னு லபிச்ச அதிர்ஷ்டம் ஆயாள்க்குக் கிட்டில்ல) நேம் பேட்ஜ் படிக்கிற பழக்கம் சிகப்பு ரோஜாக்களில் கமல் நடித்த ஒரு சீனிலிருந்து எனக்குள் பெறப்பட்டதாகும்.இதே விதமாக பெண்களின் பெயரைப் படிக்கையில் எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பு எனக்குள் உத்வேகம் பெறும். ஆயினும் பெண்ணியம் கண்ணியம் உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு அதைப் பிரயோகிப்பதில்லை.

இந்த லட்சணத்துல இருந்தா எங்கேய்யா தேடறது?... என்று அவர் ஒருமையில் தொடங்கினார். எனது தோற்றம் பிரிண்ட் அவுட்டின் தோற்றம் இரண்டையும் சமகாலத்தில் குறிப்பதாய் இருந்தது அது.

‘’ ஈ மெயில்ல புக் பண்றது வெரி ஃபர்ஸ்ட் டயம் சார்? “

எனக்கு பிரிண்ட் அவுட்டின் எழுத்தளவும் அவரது நாற்பதுக்கும் மேற்பட்ட வயதளவும் பற்றிக் குழப்பம் வந்து....’’பாயிண்ட் சைஸ் அதிகம் வச்சு எடுத்துருக்கணுமோ?’’ என்று யோசனை வந்தது.

‘’உங்க பிரச்னைதான் சார் எனக்கும் பிஎன்னார் நம்பர் தெரியமாட்டேங்குதா?”

அவர் சார்ட்டைத் தேடி டி 4 - 61,62 என்று குறிப்பதற்கும் மோதலின் சிகரத்துக்கு நானும் அவரும் பறப்பதற்கும் சரியாக இருந்தது. தோட்டங்காடுகளில் பணிபுரிவோரும் கல் உடைப்போரும் என்னை நீ என்று விளித்தால் எனது இளமையின் சாட்சியாக எடுத்துக்கொள்ளும் நான் அரசூதியக் காரர்கள் ’ நீ ‘ எனும்போது கோபம் கொள்கிறேன். அதி சத்தியமாகவும்  வாழ்க்கை நிலை சார்ந்ததே இது.

‘’ஐ டெண்டிக் கார்டைக் காட்டு! “

நான் எனது இரண்டு சக்கர ஓட்டுரிமை அட்டையை எடுத்துக் காட்டினேன். நகல் அது . ஒரிஜனலை கோயமுத்தூரில் ஒரு லாட்ஜில் அறை போடும்போது கல்லாவில் தந்தது மட்டுமே எனக்கு ஞாபகம்.

‘’இது ஜெராக்ஸ் . ஒரிஜனலைக் குடு...’’

‘’அது ஊர்ல இருக்கு?’’

‘’ எங்களுக்கு என்ன இங்க ஊ... வேற வேல இல்லியா? உங்க ஊருக்கு வர்றதுதான் வேலையா. எழு நூறு ரூபா ஃபைன் கட்டு!’’

‘’ எறக்கி விடுங்க நான் யாருன்னு நிரூபிக்கிற மாதிரி நிரூபிச்சுக்கறேன்.’’

எனக்கு மனக்காட்சியில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் கம்பிக் கொட்டடிக்குள் கிடக்கும் காட்சி நினைவுக்கு வந்துவிட்டது. எப்படித்தான் நிரூபிப்பதாம் ஒருத்தான். ஜெராக்ஸ் கூட இந்த அளவுக்கு செல்லாதா? நமக்குச் சுமக்கற சோலி கஷ்டமய்யா... பேசாம நெத்தியில ஒரு சூட்டைப் போட்டுற வேண்டியதுதான். அல்லது மன்மோகனிடம் நான் இந்தியன் இல்லை என்று அறிவித்துவிடவேண்டியதுதான். எத்தனை மந்திரிகள் ராஜினாமாக் கொடுக்கிறார்கள் அவர் ஏற்றுக்கொள்கிறாரா என்ன?

தாளை டிட்டிஆர் வாங்கிவைத்துக்கொண்டதும் சரி ஜெயிலுக்குப் போகுமுன் சாந்தியிடம் ஒரு பேச்சு சொல்லிக்கொள்ளலாமே என்று வந்து அவளிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள் வாக்காளர் அட்டை சகிதம் எழுந்து கிளம்பி டிடிஆரிடம் வந்தாள்.

ஓ... வாக்காளர் அட்டை செல்லுபடி ஆகாதது என்ற முடிவுக்கு நாம் உடனடியாக வரவேண்டியதில்லைதான் போலிருக்கிறது. சாந்தி அவரிடம் ஏதோ பேசியதும் ‘’அவரு பேசினது சரியில்லீங்க ‘’ என்று சொல்லித் தாளைக் கொடுத்து டி 4 எங்கே இருக்கிறது என்றும் சொல்லிவிட்டார்.

பெங்களூரில் சிட்டியில் இறங்கினால் வானத்தில் முழு நிலவு தெரிந்தது. இன்னிக்கு பஞ்சமியோ சஷ்டியோதானே வானில் எப்படி நிலவு என வியந்தால் அது விளக்குப் போட்ட ஒரு காத்துப் பலூன். மேலே 400 என எண் தெரிகிறது. ஆட்டோவில் போகும் போது ஒரு பேருந்தின் பின்பக்கம் அதே 400. எதோ ஒரு சரித்திரச் சின்னத்தின் நானூறாம் ஆண்டு. (ஹம்பியாக இருக்கலாமோ). அல்லது ஆட்சியேற்ற நாள் முதலாக எடியூரப்பா அனுபவித்த தலைவலிகளின் எண்ணிக்கையாகவும் அது இருக்கலாம் . எடியூரப்பா சமாளிக்கிற பெங்களூரில் நானும் சமாளிக்கலாமென்றுதான்... நானும் இப்போது பெங்களூரு வாசியாகிவிட்டேன்.

Monday, August 30, 2010

பணம் இருக்கல்ல...

இன்று காலை கோடை வானொலிப் பண்பொலியில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். பாடல்கள் சுவை என்றால் நேயர்களோடு உரையாடிப் பாட்டுப் போடுவதைக் கேட்கையில் அந்த உரையாடல்கள் சுவாரசியமானதாக இருக்கும்.

நேத்து அப்படித்தான் நெகமத்து நெசவாளி (தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது எவ்வளவு சுலபம் என்று இந்த வாக்கியத்தில் உங்களுக்குத் தெரியும், தமிழில் சினிமாப் பாட்டு எழுதுவது சுலபம்.பாடலாசிரியராக இருப்பதற்கான தகவமைப்பு வேறு .அதற்கு வல்லமை வேண்டும்.) ஒருவர் பாட்டுக் கேட்டார். அவரது தொழில் பற்றி வினவுகையில் தொகுப்பாளர் இப்ப என்ன டிசைன் நெய்யறீங்க மானா மயிலா? என்று கேட்டார். (எனக்கு உயிர்ராசிகளுக்குப் பின்னே ‘டா’வன்னா சேர்ந்து ஒலித்தது.இயற்கையின் விளையாட்டு என் மன அமைப்பினையும் விஞ்சியது.

நெசவாளியின் பதில் :  “ இப்ப... இலை மாதிரி ஒரு டிசைன் தானுங்கய்யா ஓட்டிக்கிட்டு இருக்கறம்.”

தொகுப்பாளர் உடனடியாக உங்களுக்கு என்ன பாட்டுங்க வேணும்? என்று உரையாடலைத் துண்டித்தார்.

நெசவாளர்கள் மற்றும் டெயிலர்கள் தவிர மற்றவர்கள் பாட்டுக் கேட்டால் இன்னும் கூர்மையாகிவிடுவேன். இன்று ஒரு வங்கிக்காரர்.வங்கி கணினி மயமானதைப் பற்றி தொகுப்பாளர் கேட்க வங்கி ஊழியர் தங்கள் வங்கி கணினி வங்கியே என்றார்.

வேலை நேரம்?

10 டூ 2 , 2.30 டூ 4.

மத்தியான நேரத்தில் என்ன பண்ணுவீங்க?

வங்கிக் காரர் இப்போது வங்கியியல் வார்த்தைகளோடு ஆங்கிலமும் தமிழும் பாம்பும் சாரையுமாக ஒரு பதில் சொல்கிறார். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. தொகுப்பாளருக்கும் புரிந்திருக்காது. ஆனால் ஒன்று நிஜம் எனது வங்கிக் கணக்கில் அடி வண்டல் அச்சாரத் தொகை நூறு போக அதிகம் ஒரு பைசா இருந்தாலும் யாராவது ஆள் உட்கார்ந்து ராப் பகல் எந்நேரம் ஆனாலும் பைசா எடுத்துக்கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன். அந்தத் தொகைக்கு மேல் இரு நாள் வைத்திருந்ததால் எனது பாஸ்புக்கின் பெயர் பாஸ்புக் அல்ல ஃபெயில் புக்.

பலருக்கு அப்படி இருக்கக் கூடும். குறைந்த பட்சம் அஞ்சு மணி வரைக்கும் காசு தந்தால் கூட நல்லா இருக்கும் என்பதாவது சிலருக்கு இருக்கும். அதன் பிரதிநிதித்துவமாக தொகுப்பாளர் கேட்டார்.

அதான் கணினி மயமாயிடுச்சு.. பட்டன் தட்டுனீங்கன்னா அப்பப்ப டேலி ஆகுது. மத்யானத்துக்கு மேல என்ன பண்றீங்க?

ஏங்க வாங்கின பணத்தை எண்ணி எடுத்து வச்சு ஒழுங்கு பண்ணவேணாமா?

- இதுதான் பதில். இதை என்னுடைய வார்த்தையில் எழுதியிருக்கிறேன். அந்த வங்கிக்காரர் ரொம்ப அல்வாவும் அமிர்தமும் கலந்த மொழியில் இதைச் சொன்னார். அந்த ரீதியில் எனக்கு மூன்றாவது வார்த்தையைக் கோக்க இயலாது. அப்படி முடிந்திருந்தால் நான் மண்டல மேலாளராக ஆகியிருப்பேன்.

தொகுப்பாளருக்கு பாட்டுப் போடுவதைத் தவிர வேறு வழியில்லை.

பணம் வேறு கணக்கு வேறுதானே? - எப்பவுமே....

தளிர் மூவர்...கொலை மூவர்.

இன்று தொலைக் காட்சியில் (பொதிகை)கேட்ட தலைப்புச்செய்தியின் அடிப்படையில் இதை எழுதுகிறேன்.சன், ஜெயா தொலைக் காட்சிகளில் இது என்ன இடத்தில் வந்ததெனத் தெரியவில்லை.

வருடம் நினைவில்லை. தி.மு.க ஆட்சியின் போதுதான் என நினைக்கிறேன்.ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றினால் வன்ம வசப்பட்டு கோவை வேளாண் கல்லூரி மாணவியர் மூவரை பேருந்துடன் சேர்த்து சிலர் கொளுத்தினர்.அ.தி.மு.க தொண்டர் என செய்திகளில் சொல்லப் படுகிறார்கள். அ.தி.மு.க மூடர் என்று சொல்வதற்கு செய்தி தர்மம் இடம் தராது. சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஊரின் பெயர் “தர்மபுரி’. கொளுத்தப்பட்ட இடம் ‘இலக்கியம் பட்டி.” எனக்கு இப்படியாக கொளுத்தினார்கள் என்றதும் அந்த ஊரின்பெயர் தீவட்டிப் பட்டி என்பதாகவே ஒரு மனத்தோணல் ஓடியது.

 கொளுத்திய சிலரில் மூவருக்கு உயர் நீதி மன்றம் மரணதண்டனை விதித்திருக்கிறது. அதை இப்போது உச்ச நீதி மன்றமும் உறுதி செய்திருக்கிறது என்பதே தலைப்புச்செய்தி.

எனது இப்போதைய நினைவில்... ‘அட... உலகம் இன்னுங் கூட இப்படி இருக்குதா?’ எனப் பதறவைத்த செய்திகளில் முதலாவது தாமிரபரணியில் 17 பேர் இறந்தது. அரசாங்கமே லத்தி எடுத்துவிட்டால் அங்கே குற்றவாளிகள் இல்லை. செய்தி கேட்ட நாளில் ஒரு தண்ணீர்த் தொட்டிக்குள் இயன்ற அளவு மூச்சுத் திணற இரண்டோ மூன்றோ முறைகள் மூச்சுத் திணற மண்டியிட்டேன். இது தற் செய்தி. நிற்க, தாமிர பரணிச்சாவுகளை விபத்தென்று முடித்துவிட்டதென நினைக்கிறேன் அரசு. அதில் யாரும் தண்டனை பெறவில்லை.

அப்புறம் மாணவிகள் எரிப்பு. பிறகு மதுரையில் ஒரு பத்திரிக்கை அலுவலகத்தில் மூவர்.அந்த வழக்கு நடக்கிறதா தெரியவில்லை.

மாணவிகள் வழக்கில் இனி கொல்லப்படப் போகும் மூவரின் குடும்பங்களிலும் இளம் மாணவ மாணவியர் இருக்கக்கூடும். அவர்கள் சுமக்கப் போகும் அவமான வேதனையை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

தீக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பந்தம் நெடியது. எரி தழல் கொண்டு மதுரை எரித்த சிலம்பின் நாடே இஃது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது காவலர் வாயில் சுடருந் திரவம் ஊற்றித் தீவைத்த பண்பாடெல்லாம் நமக்கு உண்டு (திருப்பூரிலா அது?).

கயவாளிகள் தொண்டர் ஆகிய மண்டர்களுக்கு நல்லது சொல்லித் தரவில்லை. அவர்களை அடி நிலையில் வைத்திருக்கவும் தலைமையர் கொழிக்கவும் சூத்திரங்கள் கண்ணியமாகக் கட்டமைக்கப் பட்டுள்ளன.

ஒன்று உறுதி... பேருந்து கொளுத்த மொத்தமாகப் போனவர்கள் மூவர் மட்டுமே அல்ல.பத்துக்கும் குறைவில்லாது போயிருந்தால்தான் அப்படியான சேதாரம் சாத்தியம். மூன்று பேர் சாவுக்கு மூன்று பேருக்கு மரணதண்டனை என்கிற நுட்பக் கணக்கு...

எளியவற்றின் நுட்பம் அளவிட முடியாததாக இருக்கிறது. அது மனச்சோர்வில் தள்ளுகிறது. நெருஞ்சி பூத்த உடைமுள்க் காட்டில் வெற்றுடம்பும் வெற்றுக் காலுமாக குளிர்க் கடும் இரவை உணர்கிறேன்.

நேற்று... இன்று... நாளை(விடுமுறை விண்ணப்பம்)

எல்.ஆர். ஈஸ்வரி பாடும் பாடல்களில் ஒன்றில் , ‘நேற்றாகி இன்றாகி நாளாகினாள்..’ என்று ஒரு வரி வரும். இந்த நாள் என்பதில் நாளை என்கிற பதமும் ஒளிந்து கிடப்பது கண்டு நாளும் வியக்கிறேன். இந்தப் பகிர்வை எழுதுமுன் அம் மணி நினைவுக்கு வந்ததும் உயர்வுச் சிலிர்ப்பூட்டுகிறது. அனேகமாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பகிர்வுகள் எழுத இயலாதென நினைக்கிறேன்.

 கல்நார்க் கூரை வீட்டு விதானத்தை காங்கிரீட் மெத்துவதான ஏற்பாட்டில் கூரை பிரித்துக் காரை மேயும் ஏற்பாடு. மெத்தை வீடு மெத்த் அவசியமல்லதான் என்றாலும் அப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்கிற சுற்றத்தின் எண்ணமும் செயல்பாடும். இதில் என் பங்கு சித்தாள் வேலை செய்வது தவிர்த்து ஒரு சுக்கு ஒரு காசு எதுவும் கிடையாது.

எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் சமயங்களில் இன்னுமொரு அறை இருந்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும் என்பார் டால்ஸ்டாய்.(புத்துயிர்ப்பு நாவலின் முதல் வாக்கியம் இது.)எனது கனவு வீடு வேறு மாதிரியானது. ஆனால் அது கட்டட அமைப்பு சம்பந்தப் பட்டது அல்ல. கட்டமைப்பு சம்பந்தப்பட்டது. அது நிறைவேற நான் மறுபிறவிகள் கொள்கையை நம்பவேண்டும்.

மாமனாரின் சொல்படி ‘தேவையில்லாத புத்தகங்களை ‘ மேற்சாலையில் ஏற்கெனவே போட்டாயிற்று. இந்த தேவையில்லாத என்பது புத்தகங்களுக்கு அவர் தருகிற உரிச்சொல். இதை எதிர்த்து வாதாட எனக்குத் தெம்பில்லை.கணினியும் நாளையோ மறுநாளோ பொதியப்பட்டுவிடும். நெட்டும் செட்டுமாயிருக்கிற இந்தக் கணினியை ஒரு இருமாதத்துக்கு அயலில் ஐநூறு ஐநூறு மீட்டர்களில் சூழ்ந்து நிற்கிற இரண்ட்ல் ஒரு கிராமத்தில் போட்டுவைத்து எளிய அளவில் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ளலாம் என்கிற ஆசைகூட இருக்கிறது. இதெல்லாம் ஆசைதான்.

மாமனாரும் மனைவியும் மாமியுமே பலசமயங்களில் இவனை ஏண்டா சேத்துக்கிட்டோம் என விதியை நோகும்போது கிராமத்தில் புதிதாக தேவதைகள் சாத்தான்கள் எதுவும் வேண்டாம்.கிராமம் தனது வழக்கமான கதியில் தரிக்கட்டும். கரையானும் அரிக்காது என்கிற நம்பிக்கையோடு புதிய கூடாரத்தில் கணினியைப் போட்டுவைக்கப் போகிறேன். புத்தகம் உள்ள தனிக் கூடாரத்தை வாதைகள் மற்றும் கரையானும் அரிக்காத சுவிசேஷம் கிடைக்க இயற்கை அருளட்டும்.

ஆக, இந்த இரண்டு மாதங்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்சில நாட்களுக்கு) கணினியில் எழுதிப் பகிரும் வாய்ப்பில்லை. இடையில் எப்படியாவது எழுதவும் பகிரவும் வாய்க்கும் எனில் அது வள்ளுவத்தை எடுத்துக்காட்டும்.

‘ஊழிற் பெரு வலி யாவுள...’

அச்சம் மடம் நாணம்...

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு... என்கிற அடுக்குச் சொற்களை தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் பதின் வயதுகளுக்குள் கேட்டுவிடமுடியும். நானும் அப்படிக் கேட்டு அது மனனம் கூட ஆகியும் நான்காவது வார்த்தையான பயிர்ப்புக்கு வெகு காலம் அர்த்தம் தெரியாமல் இருந்தது.

 இப்பவும் ஒரு குழப்பம் உண்டு. ஆணின் அங்கம் வயது வந்த பெண்ணின் மீது படுகையில்ப் படர்கையில் ஏற்படுகிற உணர்வுதான் பயிர்ப்பு என்பதா அல்லது, “ பயிர்மை’ என்கிற உயிர் நீட்டுத் தன்மை கொண்டு உயிர்த்தொடர்ச்சி நடத்தும் தகைமை பெண்களுக்கு இருப்பதால் ‘பயிர்ப்பு ‘ என்கிற சொல் தொடர்கிறதா என்பதும் மொழி ஆய்வாக இருக்கிறது எனக்கு. தமிழ்ச் சங்கம் தீர்க்காததை தனியாக யாரும் தீர்த்துவைத்தாலும் மகிழ்வே.

இதனிடையே பயிர்ப்பு என்றால் என்னவென்று மக்களிடம் நான் விவாதம் தொடங்கும் முன்னே ஊர்க்காட்டு நாடகத்தில் அதைப் பற்றிக் கேட்டது முதாலாவது சிரிப்பைத் தந்தது.

நாடகம், கரகாட்டம் முதலியவற்றில் பின் சொல்வதை நிகர்த்த பத்துக்கும் மேற்பட்ட கொச்சைகள் என்னிடம் உண்டு. எளிய மனதோர் ,இருதய பலவீனமுள்ளோர்,ரொம்ப நல்லவங்க ஆகியோர் இதைப் படிக்கவேண்டாம். (குறிப்பாக தேனிக்காரன்.ஹைதராபாத் ஆறுமுகம்).

கூத்தில் காமிக் பெண்ணிடம் பபூன் வினவுவது இப்படி, “ ஏம்மா! பொம்பளைகளுக்கு இருக்கவேண்டிய அச்சம் மடம் நாணம் பயிப்பு எதாவது உங்கிட்ட இருக்கா?” - பைப்பு என்கிற சொல் சில அளவுகளில் பொருத்தப் பாடுகளுடன் இயைந்து சுவை கூட்டியது. அதிலும் பைப் என்பது முப்பாலருக்கும்பொருந்துவது அல்லவா?

ஒரு விதமாக தவறாகவேனும் பயிர்ப்பு என்றால் என்னவென விளக்கும் நிலைக்கு நான் வந்திருக்கிற நிலையில் நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. சென்று வந்த ஒரு திருமணம் , திருநெறிய தமிழ் முறைப்படி நடந்தேறியது.தமிழில் தான் பாடல்கள் ஓதுதல் எல்லாம். பெண்ணின் நல்லாலொடும் பெருந்தகை இருந்ததே... உட்பட ஏராளம் நல்ல சைவப்பண்கள் கேட்டேன்.

தமிழ் முறைப்படி இப்படி நடக்கும் திருமணங்கள் வைணவத்தில் நடக்கிறதா தெரியவில்லை. பவளச் செவ்வாய் ,கமலச் செங்கண் ,புடைபரந்து விரிந்து கரியவாய பேதமை செய்யும் பெரியவாய.... மொழியையும் விழியையும் வைத்துக்கொண்டு வைணவத்தில் இவ்விதம் தமிழ்கூறி மணங்கள் நடக்கவில்லையெனில் அது அரங்கனின் அரங்கத்துக்கு ஓர் அபவாதமே.
நிற்க.

நேற்று நன்விதம் மங்கலம் செய்வித்த ஓதுவாராகப் பட்டவர் முக்கியமான ஒரு இடத்தில் வழுவினார். சுவையான வழு அது. பெண் வாக்குறுதியில் அச்சம் மடம் நாணம் பெயர்ப்பு ஆகியன கொண்டு ஒழுகுவதாக பெண்ணை சொல்லச் சொன்னார். என் மாமா மகளும் அப்படியே சொன்னாள். விபரீதமான இடங்களில் சிரித்துவைக்கிற வியாதி பீடித்திருப்பதால் இப்போதெல்லாம் மேடைகளுக்கு அருகில் அமர்வது இல்லை. பலரின் பகை தவிர்க்க அரங்கக் கடைசிகளிலோ அல்லது வெளியிலோ நின்றுவிடுகிறேன்.

பெயர்ப்பு என்றதும் சிரிப்பு வந்துவிட்டது. பயிர்ப்பின் காலம் போய்விட்டது. பெயர்ப்பு என்று சரியாகத்தான் சொல்கிறாரோ. புக்ககம் போனதும் முதல் ஜோலியாக பயலை தனிக்குடுத்தனத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

Friday, August 27, 2010

வெண்ணிலாவின் குறும்பு...

ஒரு ஊர்ல ஒரு வெண்ணிலான்னு ஒரு பாப்பா இருக்குமா... அப்ப ஒரு அழகான பட்டர்ஃபிளை இருக்குமா வண்ணத்துப்பூச்சி. அதுக்கு ஒரு குட்டி பிறந்துச்சாம். அப்ப அது அதுக்கு நெறயா தேன் குடுக்குமா. அந்த வெண்ணிலா பாப்பா அவங்க அப்பாகிட்டக் கேட்டுச்சாம், “ அப்பா... அப்பா... இந்த பட்டர்ஃபிளை நம்ம கூட  வராதான்னு கேட்டுச்சாம். அவங்கப்பா சொன்னாரா , “பட்டர் ஃபிளையை நம்ம கூப்புட்டா வரும்”னு சொன்னாராம். அதுக்கு அந்த வெண்ணிலா சொல்லுச்சாம்.

“ இப்ப கூப்டா வருமான்னு “ கேட்டுச்சாம். அதுக்கு அவங்க அம்மா உள்ளருந்து வந்து அவங்க சொன்னாங்களாம் , “ பட்டர் ஃபிளை இன்னேரம் தூங்கீருக்கும்’’ னு சொன்னாங்களாம். வெண்ணிலாப் பாப்பா சொல்லுச்சாம்.

“ நா மட்டும் முழிச்சிருக்கேனேன்னு”  கேட்டுச்சாம்.

“நீ பெரிய புள்ள. ஆனா ,பட்டர் ஃபிளைலாம் ... சின்ன மிருகந்தான் ம்ஹூம் சின்ன பறவைதான்.அதுனால அது சீக்கிரமாவே தூங்கிரும்.”

(அப்பா கதையோட மாரல் எழுதலாமா? - கதையோட மாரல் தான் இப்போ... என்னப்பா இதெல்லாம் போயி அடிச்சுக்கிட்டு இருக்கீங்க)

நீங்களும் சீக்கிரமா தூங்கினீங்கன்னா காலைல ஸ்கூலுக்கு வேகமா போயி மேம்ட்ட அடிவாங்காம இருக்கலாம். அவ்வளவுதான்....

* குட்டி ரேவதியின் குறுங்கதை, ‘ நிலவில் குடியேறிய மரத்து அணில் ’படித்துவிட்டு ஸ்வேதா குட்டி சொன்ன கதை.தலைப்பும் ஸ்வேதாவே...தட்டச்சாக்கம் - சிவகுமார்

கொய்த தலையில் காணும் புன்னகை...

உடலிலிருந்து தலை பிரிக்கப்பட்ட
சடலத்துக்கு இரட்டை மரணம்.
உடலுக்கு ஒன்று
தலைக்கு ஒன்றென.

அறுத்துச் சிரம் துணிக்கும்
பொருட்கள் யாவும் விளிம்பில்
வெள்ளிப் பளபளப்பைக் கொண்டே
இருக்கின்றன.

நெடுக்கேகும் பாதையில்
திடீரென நேர்வந்து கீறிய -
கூர்மை நடுக்குறச் செய்யும்
கணத்திற்குச் சற்றே முந்தைய
சடுதியில்
உடல் உணர்ந்ததென்ன?
தலை நினைத்ததென்ன?

வெட்டுண்ட உடல்
உள்ளிருந்த உயிர்ப்பால்
துடிக்கும்போது தலை
வீச்சின் திராணியை
அச்சாய்க்கொண்டே
திரண்டுருள்கிறது.

தவறிய அதிசயமாய்த் தலைமேல்
தேங்கிவிட்டது  ஒரு புன்னகை....
அது எதன் அபத்தத்தை உணர்த்தக் கூடும்?
வாழ்வின் அபத்தம்
அல்லது
மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .

மூளைச் செய்திகள் ஸ்தம்பித்துவிட
இமை மூட மறந்த தலை
விழிமணியில் காணும் பிம்பம்
ஒவ்வொன்றையும் கனவாகவே
காணுகிறது.

பகிராக் கனவு... பதியாக் கனவு.

* ஊடிழை - kakithaoodam.blogspot டில் வந்த ‘கனவுகள் தடை செய்யப்பட்ட உலகு’ கவிதை உள்ளிருந்து  தலைப்பும் உத்வேகமும் பெறப்பட்டது.

Wednesday, August 25, 2010

சாமீ! நேத்துதான் உண்மை தெரிஞ்சது...

ஏ.கே. வீராசாமி. ஐநூறு படங்களுக்கு மேல் நடித்த திரைக் கலைஞர். குறிப்பாக முதல் மரியாதை படத்தில் , ‘சாமீ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’ என்கிற வசனத்தின் வாயிலாக மனங்களில் மங்காத இடம்பிடித்து முதல் மரியாதை வீராச்சாமி என்றே அறியப்பட்ட குணசித்திர நடிகர். எண்பதுக்கும் அதிகமான அகவையில் ஆகஸ்ட் 22, 2010 இல் காலமாகிவிட்டார்.

அவர் சா. கந்தசாமியின் கதையான ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ குறும்படத்தில் நடித்திருக்கிறார். அதை பொதிகை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவர் அமரர் ஆன செய்தியை 100.5 கோடை பண்பலையில் கேட்டுத் தெரிந்துகொண்டேன். பிரசார் பாரதி பிரசார் பாரதிதான். அதன் மீதான பராதிகள் தனி.

வீராச்சாமிக்கு பெரிய வருத்தங்கள் ஏதுமற்ற அஞ்சலி.

Saturday, August 21, 2010

பாராளுமன்றத்தின் சம்பளம் அம்பதாயிரம்

தலைப்பு,சேர்க்கை மற்றும் ஓசை அடிப்படையில் வேறு ஏதேனும் வாசகத்தை நினைவு படுத்தினால் நான் பொறுப்பேற்க முடியாது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான சம்பளம் ஐம்பதாயிரமாக உயர்வதை வரவேற்றே இது எழுதப்படுகிறது.

பழைய ஒரு ரூபாய் நோட்டுகளில் மன்மோஹன் சிங்கின் கையெழுத்து ( h களில் இடைவெளி விட்டு ) காணக்கிடைக்கும். அவரது அறிவு தோன்றும் அதில். இன்னும் அவரது கையெழுத்து மாறியிருக்காது என்றே கருதுகிறேன். சம்பளத்தை விட ஓய்வூதியம், பயணப் படி,உபசரிப்பு அலவன்ஸ் ஆகியவை நாளது தேதிக்கும் ஸ்திதிக்கும் தக்க உயர்த்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை விடலைப் பையன்கள் ‘ எங்க  சம்பளம் எம்.பியை விட அதிகம் எனக் கெக்கலித்திருப்பார்கள். ஒரு சட்ட மன்றத் தொகுதி தமது மையப் பிரதிநிதிக்கு மாதாந்திரம் பத்துப் பதினைந்து செலவிடுவதால் க்ஷீணித்துப்போகாது. வீழ்ச்சியின் விவர நிலைகள் வேறு ரூபங்களில் வருகின்றன. உறுப்பினர்களுக்கான சம்பளத்தை முன்னமே கூட்டியிருக்கவேண்டும்.

பரிந்துரைத்த குழு எண்பதாயிரம் வரை தரலாம் என்று சொன்னதால் ‘எண்பதைத் தா’ எனச் சிலர் கோஷமிட்டு அவையை முடக்கினார்கள்.விண்ணவப் புன்னகையுடன் சபையை அமைதி காக்க ஹஸ்த முத்திரை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல சபையை ஒத்திவைத்தார் மீரா குமார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாபு ஜகஜீவன் ராமின் மீது எனக்குப் பிரியம் மிகுகிறது. அவரும் ஜெமினி கணேசனும் வாரிசுகளுக்கு கன்னக் கதுப்பை மரபுவழியாகக் கொடுத்ததில் இன்றும் நினைவில் வாழ்கிறார்கள்.நிற்க.

எண்பதாயிரம் கோருகிறவர்கள் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் சில மடங்கு எம்.பிக்கு உயர்த்துவதால் அரசு சம்பளம் பெறும் அனைவரும் உடனடியாக ஒப்புமைக் கணக்குப் போட்டு போராட்டத்துக்கு மனத்தை ஆயத்தம் செய்வார்கள் என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள். இல்லத்தில் இல்லி தூர்ந்த வறுமார்புகளுடன் மனைவிகள் காத்திருக்கிறார்கள். இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.

இவர்களைப் பார்த்தால் சிங்க முத்து அண்ணன் (வடிவேலு புகழ்) போலத்தான் கேட்கவேண்டும்.

‘என்ன தாய்யா வேணும்?’

Friday, August 20, 2010

கொட்டும் மழையில்...

இந்த சுதந்திர தினத்தில் சென்னையில் கொட்டும் மழையினூடாக கோட்டையில் கொடி ஏற்றி வைத்து அதற்கு முன்னமோ பின்னரோ ஒரு அறிவிப்பை முதலமைச்சர் மு. கருணாநிதி வெளியிட்டதாக அறிகிறேன்.

சில அறிவிப்புகள் கேட்ட உடனே மகிழ்வுதரும். சில எரிச்சல் தரும். இவ்வறிவிப்பு முதல் வகையைச் சேர்ந்தது என்னளவில். விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்பதே அது. பம்ப் செட்டுகள் அதில் அடக்கமா என்பது தெரியவில்லை. இலவசமாகப் பெற்றுக்கொள்வதன் மனச் சங்கடத்தை பல பிரிவினரைப் போலவே உழவர்களும் இழந்தாயிற்று என்பதால் வினியோகச் சிக்கல் இல்லை. இதில் என்ன சங்கடம். நம்ம அரசு நாம் அதன் மக்கள். இதன் சலுகைகளை நாம் நன்கு அனுபவிக்க வேண்டியதுதான். மருத்துவர் ராமதாஸ் சொல்கிறபடி விவசாயிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் பத்தாயிரம் மானியம் கிடைத்தால் இன்னும் உவப்பானது.

இந்த மின் மோட்டார் உண்மையிலேயே பயனுள்ளது.பாட்டன் காலத்து மோட்டார்கள் பலபக்கம் உள்ளன. இந்த புது மின் மோட்டார் வழங்கும் அதே நேரத்து மின் இணைப்புகளை பெயர் மாற்றித் தந்துவிடலாம். பல மோட்டார்கள் 60 களில் வாங்கி இன்னும் அமரராகிப் போனவர்களின் பெயரில் இருக்கின்றன. மோட்டார்களில் விலை கூடிய பகுதி காயில் என அறியப்பெறும் செம்புக் கம்பிச் சுற்று மட்டுமே. மற்றவை இரும்பாலானது. மொத்தமாகத் தயாரிப்பதில் அரசுக்கு செலவு அதிகம் வந்துவிடாது.

பழைய மோட்டார்கள் இழுக்கும் மின்சாரத்தை விட குறைவான மின்சாரத்தையே புதுத் தொழில் நுட்ப மோட்டர்கள் உறிஞ்சும் என்றால் இயந்திரத்துக்கான காசு இரண்டே வருடத்தில் மின்சேமிப்பு மூலமாகவே தமிழ்நாட்டுக்கான பொதுப் பயனில் வந்துவிடும்.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. அதைப் பற்றி நூலே எழுதலாம். நூற்கள் தமிழ் நாட்டில் என்னென்ன பயனை விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. அது அங்கேயே நிற்க.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டிய முதலாவது வேலைகள். ஒரு ஒன்றியத்துக்குள்ளேயே இருக்கிற விவசாய ஆஃபீசர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இடைவெளியை ஆயிரம் கிலோமீட்டர்களில் இருந்து குறைப்பது. அடுத்தது... விவசாயம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களை விவசாய ஆஃபீஸ் வேலைக்கு எடுத்துக்கொள்வது.

அடக் கடவுளே.... நல்லது பண்றதுல இவ்வளவு கஷ்டம் இருக்குதா?!

Monday, August 16, 2010

மண் வாசனை

இன்று நெடு நாட்களுக்குப் பிறகு தொலைக் காட்சியில் கிரிகெட் ஆட்டம் பார்த்தேன். கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி.சமீபத்தில் 99- இல் சதத்தைத் தவறவிட்ட வீரேந்திர சேவக் இம்முறையும் 99. அடித்த சிகசர் அப்படியே இருக்க ஒரு ‘இல்லாத பந்தில்’ (நோ பால்) இந்தியா ஜெயித்துவிட்டது.வெற்றியைக் கடந்த ஏமாற்றம் சேவக்கின் முகத்தில் ஒளிர்ந்தது.

ஆடு மகன் தோனி தனது தெரிவிப்பில் அவரை வீரேந்திர சேவக் என்றே  குறிப்பிட்டார். வீரு, சேவக், வீரேந்திர சேவக் எனப் பலபெயர்களில் அவர் அறியப்படுவதுண்டு.

இழந்த அணியின் கேப்டன் அவரை , ‘வீரேந்த்ரா’ என்றே குறிப்பிட்டார். கதுப்புகளில் இளமையும் செழிப்பும் பொங்கும் அந்த விக்கட் சேவகர் மற்றும் அணி வேந்தர் வேறு யாருமில்லை.

 ‘குமார சங்ககாரா’

Sunday, August 15, 2010

பிராது..

ஒரு விமானத்துக்கு இரண்டு இயக்குனர்கள் இருந்தார்கள். இவர்களை ஓட்டுநர் என்று சொல்வதா பறக்குனர் என்று சொல்வதா என்பது புரியாததாலேயே இப்படி சொல்கிறேன். சரி... பைலட்டுகள்.

இந்த பைலட்டுகள் தங்கள் குறைகளை எழுதி மேலிடத்துக்கு தெரிவிக்க ஒரு நோட்டு இருந்தது. அது வெகு நாட்கள் இவர்களின் உபயோகிப்பு இன்றியே இருந்தது. இருவரில் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதாவது தினமும் குடித்துவிட்டுத்தான் விமானத்துக்கே வருவார். மற்றவருக்கு அந்த ஜோலி
கிடையாது.

குடிக்காதவர் ஒருநாள் அந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டார்.’ சக விமானி இன்று குடித்துவிட்டு விமானம் இயக்கினார் ’என்று. இது மேலிடத்துக்குப் போகுமுன் அதைப் பார்த்துவிட்ட சக விமானி உடனடியாக தன் தரப்புக்கு ஒரு குறிப்பு எழுதிவைத்தார்.

‘இன்று என் சக விமானி குடிக்காமல் விமானம் ஓட்டினார்.’

(எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் வாயிலாக ஒலி பெருக்கியில் கேட்டது இது)

Saturday, August 14, 2010

விடுதலை...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இதைச் சொல்லுவதற்கு சாக்லெட் செலவு அல்லது பிறைவடிவ (பழைய) ஆரஞ்சு முட்டாய் செலவு கூட இல்லை என்பதாலேயே இதைத் தெரிவித்தலும் ஆகிறது. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பது ‘விடுதலை விரும்பி’களுக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருக்கும்.

அவர்களுக்கு விடுதலை தினமும் மற்றுமொரு நாளே. இது திங்கள் செவ்வாய் என இதர நாளில் வந்து ‘தொலைந்தால்’ என்ன என்று அவர்கள் நினைக்கக்கூடும்.காலண்டர்களை மாற்ற முடியாது. விடுதலை நாளை முன்னிட்டு காலத்தை மாற்ற பாரத மணித்திரு நாட்டு மணிகள் (ஆண்மணி/பெண்மணிகள் ) என்ன செய்தோம் என்பதை கடுமையாக யோசிக்கவேண்டி இருக்கிறது.

வெள்ளையரே ஆண்டிருந்தாலும் இன்றைய நிலையிலிருந்து பெரிய மாற்றம் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் இந்தியப் பெயர்களைச் சொல்லி தாய்மொழிகளில் ரத்தம், தம்பி, அண்ணன் என்றெல்லாம் வாக்குச் சேகரிக்க முடிவதும் முயல்வதும் விடுதலையின் ஒரு பகுதிதானே?

பின்னே சுதந்திரம் என்பது சுக்கா?மிளகா?

Sunday, August 1, 2010

அய்ய.... மின்சாரமுங்க மின்சாரம்...

உலக நட்பு தினம் ஒரு புறத்தில் இருந்தாலும் உலக நடப்பு தினம் என ஒன்று இருக்கிறதல்லவா?அதன் படிக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. புள்ளிவிவரங்கள் நமக்கு ஆகாது எப்பவுமே. இந்த உயர்வு எனப்படுவது சர்வமட்டதிலும் அல்லாமல் வரையறுக்கப்பட்ட அளவுகளில் இருக்கிறது. வீடுகளுக்கு அறுநூறு யூனிட்டுக்குமேல் ஓடும் போது யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கூடுகிறது. இந்த எண்ணிக்கை முதலாவது யூனிட்டிலிருந்தே கணக்காகும் என்றே நினைக்கிறேன். மின்சாரக் கண்ணன்கள் பின்னூட்டமிட்டு ஐயந் தீர்க்கலாம்.

செய்தி வெளியாகிவிட்டது.பொதுவாக செய்தி தரப்படும் (தரப்    படும்!) போது இரு மாதத்துக்கு என்பதாக அல்லாமல் மாதாந்தரம் என்கிற தொனியிலேயே தெரிவிக்கப்படுகின்றன.இது நம் செய்தியியல் பற்றாக்குறை. கோளாறு. பள்ளிக்கூடங்கள்,தொழில் நிறுவனங்களுக்கும் தொகை கூடுகிறது. தொழில்கள் பற்றிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கல்விக் கூடங்களுக்கு ஏற்றியது பற்றி எனக்குக் கேள்வியில்லை. நிர்வாகம் அதனால் தளர்வுறப் போவதில்லை. இதையுங் காரணங்காட்டி குழந்தைகளுக்கு மாதம் பத்தோ இருபதோ ஃபீசு கூட்டப்போகிறார்கள் அவ்வளவே.

ஒரே செய்தியை சன்னிலும் கலைஞரிலும் ஜெயாவிலும் மக்களிலும் பொதிகையிலும் கேட்கும்போது விஷயத்தின் பன்முகத் தன்மையை உணரலாம். சித்தரிப்பில் ஜெயா டி.வி க்கு தனித்தன்மை உண்டு. தனித் தன்மையை மெருகேற்ற  ஃபாத்திமா பாபு.நடுத்தர வர்க்கத்தை இந்த மின் கட்டணம் கடுமையாகப் பாதிக்கிறது என்றவுடன் பொதுஜனப் பெண்மணி ஒருவர் தோன்றி பிளந்து கட்டினார். அவரது ஆவேசத்தை அடுத்து எனக்குத் தோன்றிய ஆச்சரியம். ’தமிழகத்தில் நடுத்தரக் குடும்பங்கள் அறுநூறு யூனிட்டைத் தாண்டி உபயோகிக்கிறார்களா... வாரே வாவ்’ என்பதுதான்.

வாயுருளி, உருளித் திரவம் இப்படி எவ்வளவோ பாத்தாச்சு இந்தக் கட்டண ஏற்றத்தை ...ப்பூ....துவரம் பருப்பூ... என்று ஊதித்தள்ளிவிட மாட்டோமா? விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் இலவச மின்சாரம்? அவர்களுக்கும் விரைவில் கட்டணம் அமலாக்கவேண்டும்.

வெள்ளைக் குதிரையேறி கல்கி வருகிற கோலம் பார்க்க ஆசையிருக்காத என்ன இந்த இருண்ட மனதுக்கு?

iஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...

தூக்கத்திலிருந்து கண்கள் விழித்து மூளை முழுதும்  விழிக்காத (இது ஒரு பாவனை) காலையில் அதிகாலையில் வெளிநாட்டிலிருந்து தோழி தன் பேச்சின் பலதினூடே சொன்னாள். இன்றைக்கு ’நண்பர்கள் தினம்’ என்று. ஓகோ எனக் கேட்டுக்கொண்டேன்.

புன்னகை ,கண்ணில் ஒரு மின்னல், உளக் கிளர்ச்சி  எதுவும் தோன்றவில்லை எனக்கு.எப்படி இருந்த நான் இப்படி ஆயிப்போயிட்டேனே... என்று தோன்றினாலும் அரசியல் காரணங்களுக்காக தினங்கள் ஏனோ உவப்பளிப்பதில்லை.

தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்? - என அப்துல் ரகுமான் கேள்விகேட்ட நாளிலிருந்து இந்த தீர்க்கமுடியா வியாதி தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் பாருங்கள் தமிழ் அரசியல் சூழலில் வானம் பாடிகள் ஒரு ஃபீனிக்ஸ் தான். இன்னும் எவ்வெவற்றுக்காக அவர்களை
அவர்களது சொற்களை நினைவுகூரப்போகிறேன் என நினைக்கும்போது தீப ஆவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் ஆகியனவற்றுக்கும் மகிழ்வைத் தொலைத்துவிடுவேன் என பயமாக இருக்கிறது.

பெயர்ச்சொல் பிளாக்கில் ஒரு வாழ்த்து அட்டையையும் படத்தையும் பார்த்தபோது நமக்கு ஒரு படம் போட்டு பிளாக் எழுதத் தெரியலியே என வருத்தமாக வந்தது.

முதல் மரியாதை வீராச்சாமிக்கு உள்ள ஏக்கத்தை நிகர்த்தது இது. சிவாஜியிடம் வீராசாமி முறையிடுவதுஅது .( படத்தில் பெருசின் பாத்திரப் பெயர் நினைவில்லை.வீராசாமி வந்து செங்கோடன்)

‘’சாமி உங்க காலுக்கு ஒரு செருப்பு தெச்சுப் போடணும்னு இந்த செங்கோடனுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க!”

கட்டிய பெண்டாட்டியை ஃபிட்டிங்ஸ் போடாமல், மாமனார் காலில் விழுந்தார் என்பதற்காக செருப்பும் போடாமல்  செங்கோடனின் செருப்புத் தைக்கும் தொழிலுக்கு குந்தகம் விளைவித்து செங்க்ஸை முள் எடுக்க விட்டு ... எசப் பாட்டுப் படித்ததைத் தவிரவும் பாசி கோர்க்க முடி பிடுங்கித் தந்ததைத் தவிரவும் ( எதுக்கு எதை செய்யணுமோ அதை செய்யவே மாட்டியா பெருசு?)
பெருசு அந்தப் படத்தில் எதுவும் செய்யவில்லை. நிற்க...

நான் செய்து கொண்டிருந்த காரியம் நட்புக்கு மரியாதை பற்றி எழுதிக்கொண்டிருந்ததல்லவா? ’நட்டல்’(அய்யன் சொல்) பற்றி ‘நட்பதிகாரம்’ என சொல் நீக்கி வள்ளுவன் எவ்வளவோ சொல்லியிருக்கக் கூடும். நட்பு இருவகைப் படும் ஒன்று கொண்டாடப் படவேண்டிய நட்பு மற்றது பந்தாடப் படவேண்டிய நட்பு. பந்தாடுதல் என்றால் அது அரங்கத்துக்கும் வெளியே போய் நம் ஜீவிய காலத்துக்கும் கண்ணிலேயே படக்கூடாது- அந்தப் பந்து அந்த பந்தம்..

இப்படியெல்லாம் அன்பும் வன்மமும் ஒருங்கே பூண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ ஆசையாய் இருக்கிறது. செய்திகள் வந்த அளவில் ’நட்டல் தினம்’ பற்றிய தகவலுக்கு அனிச்சையான நன்றிகள்.

இன்னும் இருபத்தி நாலு மணித்தியாலத்துக்கு ஒரு ஆம்பளைக்கோ ஒரு பொம்பளைக்கோ ஒரு மூணாம் பாலுக்கோ நானாகப் போன் பேசுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

நட்புக்கொள்கை-தற்காலிகக் கோட்பாடு- குடும்பத்துக்கு ஒவ்வாது என நினைக்கையில் பயமாக இருக்கிறது. any way...மானிலம் எல்லாவும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே....

Saturday, July 31, 2010

நிலா நாற்பது- 8

ஓய்வாய் உணரும்
நாளின் இரவில் நிலா
கொள்ளும் பிணை
கொடுப்பினை.

Friday, July 30, 2010

ஆதியிலே கோழி இருந்தது....

இன்று ‘காலடி’ யில் என் கண்ணடி பட்டு ஜகநாதனின் ‘கிளஸ்டர் - நோவா ‘ அறிவியல் புனைகதை படித்தேன். அது ஒரு வேளை புனைகதையாக அன்றி நிஜம் கூட ஆகலாம் எனினும் காலத்தை 2018 க்குள் கொண்டே கதை சொல்வதால் அது புனைவு என ஊர்ஜிதமாகிறது. ஜகனின் அறிவு ஆவேசமும் கூட அதில் தெரிகிறது. இதே நாளில் தூரன் குணா வின் அகப்பாடலில் ‘திரிவேணி’ படித்துத் திக்குப்பிரமை அடித்திருந்தபோது ஜகனின் கதை படிக்க அது வேறுவித உணர்வைத் தந்தது.

ஜகனின் பிளாக்கிலிருந்து அவரது விருப்பப் பூக்களில் சரங்கட்டியிருந்த ‘வால் பையன்’ வலைப்பூவுக்குப் போனபோது அவர் கோழி முந்தியா- முட்டை முந்தியா என்பது பற்றி எழுதியிருந்தார். சமீப ஆராய்ச்சியில் கோழிதான் முதலில் என கண்டடைந்திருக்கிறார்களாம். அதை முட்டையோ முட்டை போடும் பெட்டைக் கோழியோ ஒப்புக்கொண்டதா தெரியவில்லை.

வால்பையனும்  -என்னைப் போ - சாரி நானும் அவரைப்போலவே சின்ன வயதுகளிலேயே கோழி முந்திக் கருத்தில் உறுதியாயிருந்தேன். கோழி முந்திக் கருத்துக்கு ஆஃப் பாயில்,பூஞ்சோலை போன்றவற்றை நினைவூட்டும் வண்ணப் படங்களுடன் அவர் விவரமளித்திருக்கிறார். தர்க்கபூர்வ விவாதங்களும் நிறுவுதல்களும் எனக்கு ஏலாது. நான் தீர்மானித்திருந்தது ஒன்றை முன்வைத்துத்தான்.

அடைகாக்க ஒரு கோழியின்றி முட்டையினம்தான் எப்படித் தொடர்ந்திருக்கும்? ...ஆக இதை ஒப்புக்கொள்கிற வாழியர் நம் மக்கள்.இதை ஒப்புக்கொள்ளாதவர்கள் நாமக்கல் கோழிப்பண்ணையொன்றில் இங்குபேட்டர்களுக்குள் இருபத்தியொரு நாட்கள் உழல்வார்களாக.

Saturday, July 24, 2010

சுத்தாத சக்கரம்

ஐந்து ரூபாய் நோட்டு என்றால் டிராக்டர். பத்து ரூபாய் நோட்டு என்றால் கப்பல். இருபது ரூபாய் நோட்டு என்றால் சக்கரம் இவையே அடையாளங்கள் என்னளவில். பொதுவாகவும் அப்படித்தான். ஆனால் சமயங்களில் ரிசர்வ் வங்கியோ யாரோ டிசைன் செய்து  அடையாளங்கள் மாறுவதுண்டு.இப்போது இருபது ரூபாய்க்கு அப்படி மாறிவிட்டது.

சமீபகாலமாக செல்லாத இருபது ரூபாய் நோட்டுகள் என்னை அடைந்து, விட்டுப்போகாமல் கூடவே  வந்து தொல்லை செய்கின்றன.இரண்டு சமீபத்திய உதாரணங்கள் திண்டுக்கல்லில் கிடைத்த நோட்டு ஒன்று. நூறு ரூபாய் நோட்டுக்கு தேநீர் தர சங்கடப்படுவார்கள் என அரை பாக்கெட் சிகரெட்டும் உடன் வாங்கியபோது பாக்கியில் வந்தது அது.

நூறு ரூபாய்க்கு மேல் காசும் வைத்துக்கொண்டு நம்மால் தேநீர் அருந்தால் போய்விடக்கூடாதில்லையா. ஆகவே கலிதீர்த்த முடிவாய் சிகரெட்டும் வாங்கிவிட்டுப் பேருந்து ஏறிப் பார்த்தால் துளையுள்ள ஒரு இருபது.

சிகரெட்டை எண்ணிப்பார்க்கத் தெரிகிறது. சில்லறையை எண்ணிப்பார்க்கத் தெரியவில்லை.அப்புறம் இரண்டு மூன்று நாள் தங்கிவிட்டு ஒருவழியாக விடைபெற்றது.இதில் வியப்பில்லை உலகத்தில் நம்மிலும் மேலான நல்லோர் தீயோர் முட்டாள் அனைவரும் இருப்பர்தானே.

மூன்று நாட்களுக்கு முன் ஒரு நோட்டுவந்து மாட்டிக்கொண்டது சென்னையில். ஒரு பெட்டிக்கடையில் நோட்டை உருவுகையில் அதன் வெள்ளிக்கம்பி குமிழ் போட்டுக்கொண்டு அகட்டு வளைவெடுத்தது. வேறு காசுகளும் இருந்ததால் பெட்டிக்கடையில் கண்ணியத்தைக் காப்பாற்றிக்கொண்டேன். இருப்பினும் இனிமேல் நோட்டு வாங்கும்போது கட்டுப்பாடாக இருக்கவேண்டுமென்றும் இப்போதைக்கு இந்த இருபதை செலாவணி ஆக்கவேண்டியது கடமை என்றும் எண்ணினேன்.

அருகிலிருந்த நண்பன் ஸ்ரீதர் இருபது ரூபாய் நோட்டை வாஞ்சையுடன் நீவி வெள்ளிக் கம்பியை ஒடுக்கெடுத்து அதன் இருப்புப் பரப்புக்குள்ளேயே செமித்துக் கொடுத்தார்.

இருபது ரூபாயை பேருந்தில் கண்டக்டரிடம் நீட்டினேன். அவர் வாங்கி விரலிடைப் பொதிகிற நேரம் வெள்ளிக் கம்பி வெளி நீட்டியது. விட்டலாச்சார்யா படங்களில் ஒரு ஜோடிக் கண்களுக்கு பேரழகியும் மற்ற கண்களுக்கு பிசாசும் தெரியுமே அப்படி ஆகிவிட்டது.கண்டக்டர் ‘’பாவம் வெள்ளிய எடுக்க டிரை பண்ணீருக்காரு.முடியல. இப்ப நம்ம கிட்டச்செலுத்த வந்திருக்காரு.’’ என்றவாறு திருப்பித் தந்தார்.

எனக்கு  ‘ச்சை ’ என்று வந்தது. இந்த வெள்ளியை எடுத்து கொலுசா செய்யப்போகிறேன். கண்டக்டரிடம் மனதுக்குள் சொன்னேன். ‘ஹலோ மிஸ்டர் கண்டக்டர்! சிவகுமார் செய்கிற முட்டாள் தனங்கள் கணக்கற்றவை. ஆனால் அதற்காக இப்படியெல்லாம் முட்டாள் தனம் பண்ணமாட்டான். அவனது  முட்டாள் தனங்கள் அவனுக்கென்ற தனித்த முத்திரைகளை உடையவை.

அப்புறம் இரவான பின் ’மதுக்கடையில் செல்லாத நோட்டு ஒன்று உண்டா’ என்ற நம்பிக்கையில் ஒரு முயற்சி மேற்கொண்டேன்.அமைதியாக வாங்கிப்போட்டு பாட்டிலைக் கொடுத்தவர். அதை நான் எடுப்பதற்குள் ‘’ஹலோ வேற நோட்டுக் குடுங்க’’ என்றார்.

‘’ஏங்க இங்க எப்படியும் இங்கே செல்லும்னுதான் கொடுத்தேன்.’’

’’அப்படியெல்லாம் செல்லாது.’’
’சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்குது’ என்கிற பழமொழி ஞாபகத்துக்கு வந்ததால் வேறு இரு பத்துக்களைக் கொடுத்துவிட்டு வந்தேன்.இருபது ரூபாயை அறையில் ஒரு டைரிக்குள் வைத்தேன்.

இப்படியாக எனக்குள் இருபது அச்சத் திட்டம் வேரூன்றிவிட்டது. இப்போதும் அந்த இருபது ரூபாயை செலுத்திவிடலாம்.

என்ன ஒன்று அதற்கு என்னிடமே உள்ள ஒன்றை வாங்கிவிட்டால் போதுமானது. ஆனால் அதைவிட அந்த இருபது ரூபாய் அப்படியே இருந்துவிடுவது இன்னும் லாபகரமானது.

நிலா நாற்பது -7

சேயுறிஞ்சும் ஒற்றைக்
கொங்கையே அஷ்டமி.
பூரிக்குதென்றால் வளர்சேகரம்.
வற்றுகிறதென்றால் பசியில்
பற்றுகிறது சிசுக்கரம்.

Friday, July 23, 2010

மதித்தலால் வருதலென் கொல்...

அனேமாய் அனுதினமும்
இரண்டாம் ஆட்டம் சினிமா.
நான்,ஜகன்,ம்னோகரன்
மூவரும் பைக்கில்.

அறைக்கு அருகிலேயே
இருக்குமொரு
சோதனைச் சாவடிக்
காவலர் கருதி
ஒருவர் இறங்கி நடந்து
இருவர் பைக் ஏறி
சாவடி கடந்து மூவரும் போவோம்.

மதியம் மாலைகளில்
மனந்துளிருங் காலைகளில்
இருவராய் எங்களைக் காணுகையில்
புன்னகைப்பார்.
கண்களில் கேள்வியிருக்கும்...
’எங்கேடா இன்னொருத்தன்?’

தொழில் நுட்பச் செவ்வகம்- வட்டம்

என்னென்ன மாதிரியான சூழலில் எழுதுவீர்கள்? - என்று முன்னெல்லாம் யாராகிலும் கேட்கும் போது முதலாவது எழும் உணர்வு கோபம்தான். அப்படி சுலபமாக பதில் சொல்ல முடியாத கேள்வி அது. தவிர வினவும் நபர் எழுத்தை பிற துறைகள் போலவே தொழில் நுட்ப முறையில் அணுகுகிறார் என்பதால் வருகிற எரிச்சல் ‘படைப்புக் கச்சையை’ கழட்ட ஆரம்பிக்கிறது.

எரிச்சல் கொள்ளாமல் பதில் சொல்லவேண்டுமெனில் ஆகாததல்ல. மன சாவதானமும் மறுபக்கத்தின் ஆவல் திறனும்  ஒன்றிணைய வேண்டும். அவ்வளவே. இந்த அவ்வளவு அவ்வளவு எளிதில் கைகூடுவதல்ல.

கன்னிவாடி வீட்டில் பக்கத்திலிருந்து பெரியம்மா திட்டிக்கொண்டிருக்கும் போதெல்லாம் நான் எழுதியிருக்கிறேன் தெரியுமா....என்று எப்போதாகிலும் பழைய காலங்கள் நினைவில் நிரடுவது உண்டு.(ஆனால்... செத்துப்போன செவலை மாடு இருந்திருந்தால் உடைந்து போன கலயத்தில் ஒரு கலயம் பால் கறக்கும் என்கிற கதைதான் இப்போது...)

நட்பு அல்லது குடும்பம் ஆகியவற்றில் இருந்து வரும் சிறு சீறலும் இரண்டு தினத்துக்கேனும் எதையும் எழுதுதற்கு இல்லாமல் ஆக்குகிறது இப்போது. எழுதுவது இப்படி என்றால் வாசித்தல அதனினும் கஷ்டமாக இருக்கிறது. பயனற்ற வேலையை - பொருள் ஈட்டி உன்னை நிறுவாத இந்த மடத்தனத்தை -இன்னும் ஏன் கண்கொண்டிருக்கிறாய் என்கிற குரல்கள் பக்கவாட்டில் டீட்டிஹெச்சில் ஒலிக்கின்றன. இவை அகம் சார்ந்தவை.

புறத்தின் காரணிகள் காற்றின் ஈரப்பதத்திலிருந்து தொடங்கிகின்றன. கணினிக்கு வந்த பின் முதல் தடை , மின் தடையில் இருந்தே தொடங்குகிறது. முன்பு பெங்களூரில் வசித்து எழுதிவந்தபோது ‘அழகி’(தமிழ் எழுத்துருங்க)யைப் பயன் படுத்தி எழுதிவந்தேன். ஒலியியல் முறையில் எழுத்தடிக்கும் முறை நமக்குக் கிடைத்தது ஒருங்கே வரப்பிரசாதமும் சாபப் பிரசாதமுமே ஆகும்.கிராமத்துக்கு வந்து ஒரு அரைக்கால் வேக வில்நெட் இணைப்புடன் கணினிப்பெட்டி வந்ததும் என்.எச்.எம் மின் பதிவிறக்கம் அழகி இல்லாத குறையைக் களைந்தது.

அது தந்த உத்வேகத்தாலும் ஏற்கனவே நன்றியுரைக்கப்பட்டவர்களின் துணையாலும் என் வலைப்பூப் பயணம் களைப்பின்றித் தொடர்கிறது. தமிழ் மணத்தில் நட்சத்திரப் பதிவராக தெரிய நேர்ந்த போது அந்நாட்களில் பதிவு ஏதும் போடாத போது சிலர் என்னை ,‘கம்பராமாயணத்து இலங்கை வேந்தனாக’ கதிகலங்க வைத்தார்கள். காரும் மடிக்கணினியும் இருந்தால் தொடர் பதிவு ஒரு சோப்புப் போடும் ஸ்டைலில் சகஜம்தான். வீடு வாசலற்று அலையும் போது blog என்ன பிளாக். ஒரே black தான்.

இப்போதும் ‘புதுத் தொடுவான ஊடக’த்தின் செயலி கருவிகளில் இல்லாது போய்விட்டால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறேன். மதராசப் பட்டனம் படத்திற்கு அவ்வளவு சிறிய பதிவு போட்டதெல்லாம் அதுமாதிரிக் காரணத்தினால்தான். அப்புறம்... ஆட்டோமாட்டிக்காக இதுக்கு இவ்வளவு போதும் என்கிற மனப்பான்மை வந்துவிடும்.( என் கிருபை உனக்குப் போதும்..)

சமீபத்தில் எனது அபிமானத்திற்கினிய இந்த என்.எச்.எம் மை தமிழ் கூறுகெட்ட நல் உலகிற்கு முறையாக வழங்குகிறேன் என்று எங்கள் கொங்கு மண்ணுக்குப் போய் புறங்கண்ட மதிப்பிற்குரிய பத்ரி என்.எச்.எம் பறந்தோடிய வேகம் கண்டு மலைப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இது முறையாகப் பயன்பட்டால் எவ்வளவோ மகிழ்வேன் என்று கூறியிருக்கிறார்.ஐயாயிரம் சாவிகளை மட்டும் ஒரே இடத்தில் குவித்து வைத்துப்பாருங்கள்... அவற்றுக்கு திறவுக் காடியின் குடைவுகள் எதுவும் அவசியமிருக்கவேண்டியதில்லை. அவை பத்தாம் நிமிடம் காணாமல் போய்விடும். பழைய இரும்புக்குப் போட்டு லயன் டேட்ஸ் வாங்கிவிடுவார்கள்.

நான் என்ன நினைக்கிறேன் என்றால் கிழக்கு பதிப்பகத்தாரின் அந்த மென்பொருளை (அனேகமாக அது வட்டத்தகடு) தங்கள் இல்லத்தின் விலையுயர்ந்த டீப்பாய்கள், கண்ணாடி மேஜை ஆகியவற்றின் மீது தேநீர்க்கறை படியாமலிருக்க கோப்பை தாங்கிகளாக அவர்கள் பயன் படுத்தக்கூடும். இந்தக் கற்பனை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது இந்த மன அமைப்பின் மீது கிழக்கு பத்ரி கோபம் கொள்ளவும் கூடும்.

நவரத்தினம் திரைப்படத்தில் ஒன்பதில் ஒரு நாயகி கிராம போன் தட்டுகளை எறிந்து வில்லன்களைத் துவம்சம் செய்வாள். அப்படி ஒரு தட்டினை பத்ரி என்மீதும் எறியட்டும்.

பட்டணம் - பாட்டுகளூம் பாடூம்

மதராச பட்டணத்தில் (அதாவது திரைப்படம் பற்றி முதலில் பேசுவதாயின் எடுத்தோர் விருப்பப்படி மதராசப் பட்டனம் என எழுதணும்) பாட்டுகள் எப்படி என பத்மா வினவியிருந்தார். பாடல்களில் அபாரமான வரிகள் இருந்ததாக கேட்கும் போது தோன்றியது. நினைவாற்றல் குறைவு அல்லது மறுபடி மறுபடிக் கேட்காமை ஆகிய காரணங்களால் அவற்றை நினைவு கூரமுடியவில்லை.தோய்தலுக்கான வாய்ப்பும் அமையவில்லை. ஆராய்ச்சி செய்யும் வண்ணமான லௌகீக சரத்தும்  அதிலெனக்கு இல்லை. இப்ப எனக்கு மனதில் நிற்பது ‘மேகமே! மேகமே! கொஞ்சம் போயிட்டு நேரஞ்செண்டு வா’ அப்படிங்கிற பாட்டு . அதை எடுத்திருந்த விதமுமே நல்லா இருந்தது.

சென்னையில் மற்றும் தமிழ்நாட்டுல எங்கேயும் இப்ப பரவலான கருத்துக் கவர்ந்த விஷயம் போலி மதிப்பெண் அட்டைகள்தான். இதில் நடுத்தரச் சமுதாய மாணவர்கள் பலபேர் மாட்டிக்கொண்டார்கள்.+2 வில் ஆயிரம்மதிப்பெண்ணுக்குக் கீழே வாங்குகிறனெல்லாம் செத்தே போய்விட வேண்டும் என்பதான மனக் கிறுக்கு பெற்றோரிடம் உள்ளது. மொத்தக் கூகையனுகளும் இப்படி இருந்தால் இது என்ன இதுமாதிரி பலநூறு அபத்தங்களும் அழிமதியும் சமூகத்தில் பெருகித்தீரும். பேசித்தீராது.

பாருங்கள் பல ஊழல்களைத் தோலுரித்து உப்புக்கண்டம் போட்டவர் என பேரும் புகழுலுமாக விளங்கிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ் . போலிச் சான்றிதழ் காட்டிப் படித்தார் என சஸ்பெண்ட் ஆகியிருக்கிறார்.அப்புறம் பூவழகியோ பூவரசியோ எதோ ஒரு பொண்ணு அதுவும் கலெக்கடர் கனவில் உழன்று மதி புரண்டவள் போல்தான் இருக்கிறது. சின்னப் பையனைக் கொன்றுவிட்டு ஜெயிலில் சக கைதிகள் கிட்ட அடிவாங்குகிற நிலைக்குப் போய்விட்டாள்.

ஆகவே இந்தக் கலிகாலத்தில் இப்படியான சென்னைப் பட்டணத்தில் தற்சமயம் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். கொஞ்சம் எனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என நம்புகிற நண்பர்கள் எழுத்து அல்லது காட்சி ஊடகங்களில் வாய்ப்பு இருப்பின் தெரிவிக்கலாம்.எனது அலை பேசி எண் ;
8973194399.

இதனை ஒட்டித் தொடர்பு கொள்வோர் பிளாக்கை பற்றி விமர்சிக்கவேண்டாம் என்றும் அதிலும் குறிப்பாக பாராட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனெனில் .....
முடியல..

(கட்டுரைக் கடைசியை  வைகைப்புயல் வடிவேலுவின் தொனியில் வாசிக்கவும்)

Monday, July 19, 2010

பட்டணம்... பயில்வான்கள்

எவ்வளவோ வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்கள் பார்த்தேன். ஒன்று மதராசப் பட்டணம் மற்றது தேனாண்டாள் பிலிம்ஸ் மொழி மாற்றி வழங்கிய 'உலக நாயகன்' (காற்றைக் கடைசியாய் வளைக்கும் ஒருவன் - என்கிற மாதிரி பொருட் தலைப்பு உடைய படம்) .


உலக நாயகன் படத்துக்குக் குழந்தைகளைக் கூட்டிப் போனால் மகிழ வைக்கலாம்.மதராசப் பட்டணம் வேறு சில வகைகளில் கவர்ந்தது.கவித்துவமான சில காட்சிகளில் புல்லரித்தேன். கவர்னரின் பெண் கழுதை வைத்திருக்கும் வண்ணார் பையனைக் காதலிக்கிறாள்.
அதைவிட வண்ணார்கள் அவ்வளவு பெரும் கொழுக் மொழுக் என இருந்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. குஸ்தி சண்டை பயில்வான்கள் வேறு அவர்களில் பலர் இருந்தனர். காதலன் படத்திலாவது காக்கிநாட காக்கர்லா பொண்ணுதான் கான்ஸ்டபிள் மகனைக் காதலிக்கிறாள். இதில் வெள்ளைக் காரக் கவர்னர் பெண்ணே நம்ம பையனைக் காதலிக்கிறாள். அப்புறம் டைட்டானிக் மாதிரி நினைவுச் சின்னம் ஒன்று . மொத்தத்தில் ஒரு பத்துப் பதினைந்து படத்தை நினைவு படுத்துவதால் நமது ஞாபக சக்தியை சோதித்துக் கொள்வதற்காகவாவது அவசியம் படத்தைப் பார்ப்பது நல்லது.

Wednesday, July 7, 2010

வெளியெல்லாம் உள்ளே...

சுற்றிலுமுள்ள பலதிசை விரிந்த
கோளங்களின் வெளியை
வானம் பார்க்கிறது.

தன் கட்டுப்பாட்டிலும்
வேண்டியபொழுது
ஆட்டுவிக்கப் படுவதாகவும் வெளி
இருக்கவேண்டும் என விரும்புகிறது.

கதிகள் கட்டுக்குள்
இயைவதற்கான அறிகுறிகள்
எதுவும் தோன்றாதபோது

தன்னிடமிருந்து
-எப்போதுமிருக்கிற
நிறப்பிரிகையினை உற்பவிக்கும்
சாயத்தை நினைவு கூர்ந்தவாறு

தூரிகையைக் கையிலெடுக்கிறது.
பிறகு அறைக் கதவைத் தாழிட்டு
அண்டங்கள் கேட்குமாறு
விசும்பலுடன் கண்ணும் மூடி
லயித்து
தன்னைத்தானே வரைகிறது வானம்.

Tuesday, July 6, 2010

குறுஞ் செய்தி

நேச மித்ரனிடம் இருந்து வந்த மின்னஞ்சல் புதிய செய்தி (எனக்குதான் புதுசு) ஒன்றைத் தெரிவித்தது. மகுடேசுவரனின் வலைப்பூ பற்றிய தகவல்.kavimagudeswaran.blogspot.com. எனது லட்சத்திப் பத்தாயிரம் சம்பாத்தியமுள்ள வேலைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு உடனடியாய் கண்ணும் கையும் விரைந்தோடி படித்துமுடித்தேன்.

வழக்கம் போல அவரது கவிதைகள் துய்ப்புக்கும் கட்டுரைகள் படித்துச் சிந்திக்கவும் சிலாகிக்கவும் ஆனவை. இச்செய்தியை எட்டுத் திக்கும் கொட்டி முழக்குவதற்காக உடனடியாக இது பதியப் படுகிறது. ஆஸ்கர் அவார்டு ரஹ்மான் பற்றி அவரது கட்டுரை ஒன்று உண்டு. அதன் மீது உடன்பாட்டுத் தளங்கள் ஒரு பக்கம் இருக்க அவரது அவார்டு விஷயத்தை ஒட்டி வேறொரு அவதானம் எனக்கு உண்டு.

ஆஸ்கார் வாங்கியதால் ரஹ்மானுக்கு பத்ம விருது தவிர்க்கப் பட இயலாததாயிற்று.செம்மொழி ‘மையச் செய்தி’ப் பாடலுக்கு அவரைவிடப் பொருத்தம் யார்? ரஹ்மானுக்குத் தந்ததாலேயே இளையராஜாவுக்கும் பதம விருது கிடைத்தது.

விருது கிடைத்த அன்று இளையராஜா உளறிய உளறல் புது இலக்கிய வகை. உளறலினூடாக அவர் செய்தியைச் சொல்லிவிட்டார். அவர் அதில் சொல்லாத செய்தியே எனது கேள்வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் பத்ம விருது பெற்றிருக்கிறாரா என்பதுதான் அது. ஒருவேளை இல்லையெனில் தமிழின் வரலாறு, இசை,சிற்பம், கட்டடம், மங்கானி அனைத்தையும் நாற்பது அல்லது எண்பத்தேழு ஆண்டுகளுக்குள் சுருக்கிக்கொண்டு பொத்தித் திரியவேண்டியதுதான்.

இரட்டை உலையும் பரிதிக்கரமும்

நாளிதழ்கள் படித்துப் பதினைந்து தினங்களுக்கும் மேலாகிவிட்டது என்கிற ஒரே தைரியத்தில்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். ஏனெனில் தமிழக அரசியல் பற்றி எழுதுவதற்கு விநோதத் தகுதிகள் தேவையாயிருக்கின்றன. ஒன்று கோள் வல்லுநராயிருந்து கருத்துச் சொன்னால் பலிக்கக் கூடும். அல்லது தொகுதி வாரியாக ஒற்றறிந்து உளவு வேலை செய்து ஒரு அறிக்கையைத் தயாரிக்கவேண்டும்.

இப்போது அதையும் தாண்டிய ஒரு சிக்கல் புதிதாக வந்து சேர்ந்திருக்கிறது. மக்கள் வாக்குகளை விற்கத் தயாராகிவிட்டார்கள். காசு வாங்கிக்கொண்டு காசு தந்தவர்களுக்கே வாக்களிக்கிற அளவுக்கு மக்கள் நேர்மையாக இருக்கிறார்கள். இது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. காசு அவர்களிடம் வாங்கிக்கொள்ளுங்கள் வாக்கு எங்களுக்குப் போடுங்கள் என்று சொல்கிறவர்களின் பேச்சு எடுபடுவதில்லை.

‘எங்களை என்னதாண்டா நெனச்சு வச்சிருக்கீங்க?’ என்பதாக பதில் அமைந்துவிடுகிறது.மாதா மாதம் பணம் தருகிற ஏற்பாடு உண்டென்றால் நானும் வாக்குவிற்கத் தயார்தான். அது மாதா, அய்யன், சொறியன்,முடிச்சவிழ்க்கி யாருக்காக இருந்தாலும் சரி. ஆனால் அப்படி நடக்காது. ஜனநாயகம் சிவகுமாருக்காகப் படைக்கப்பட்டதல்ல.

சுவாரசியமான யூகங்களுக்கு இடந்தரவல்லதாக இப்போதைய நிலை -வரும் சட்டமன்றத் தேர்தல் - உள்ளது.சரத் குமாரோ கார்த்திக்கோ முதலமைச்சர் ஆகமாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம்.கடனோ உடனோ வாங்கி இதற்காக ஐந்தாயிரம் வரை பணம் கட்டுவேன்.

இன்று காலை சந்தித்த கிராம நண்பன் ‘காங்கிரசும் அ.இ.அதி.மு.கவும் கூட்டாகிருவாங்க போல இருக்கே?’ என்றான்.ஆகட்டும் அதற்கென்ன.ஆனால் தி.மு.கவுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அது காங்கிரசுக்கு உத்தரவாதக் கூட்டணி. காங்கிரஸ் அ.தி.மு.க வுடன் கூட்டு வைத்துக்கொண்டால் அதுவும் உத்தரவாதமாக வெற்றிக்கூட்டணிதான். முதல் முறையாக ஸ்பஷ்டமாக திராவிடக் கட்சிகள் காங்கிரஸ் மீது கழுதியேறும் நிலை உருவாகியுள்ளது. காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணி என்பது ஒருவேளை காங்கிரசே கிளப்பிவிடுகிற ஒன்றாக இருக்கலாம்.

மைனாரிட்டி அரசாக இருந்துகொண்டு (செம்மொழியில் பகரவேண்டுமெனில் தனிவலுக் குன்றிய அரசாக ) தி.மு.க பெற்ற பலன் அதிகமே. நிச்சயமாகவும் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கோரியிருக்க முடியும். லஞ்சக் களங்கம் கண்ணை மூடிக்கொண்டு வந்துசேருமே என்கிற பயத்தில் சோனியாவோ ராகுலோ தமிழக அரசவையில் கூட்டுச் சேர மருகியிருக்கவேண்டும். அல்லது ஈழத்து மண்ணில் படிய வேண்டிய குருதிக்கு தெக்கத்திச் சாட்சியாக நிற்கவேண்டியதில்லை என்பதும் காரணமாக இருந்திருக்கலாம்.

கூட்டணி பற்றிக் கோடு காட்டி டங்குவாறு அறுந்த தங்கபாலுவின் நிலை நமக்குத் தெரியும்.
(என்னா ஒரு எகத்தாளம்!)ஆனால் இம்முறை துணை முதல்வர் உள்ளிட்ட பல கோரிக்கைகளை காங்கிரஸ் எழுப்பலாம். 2000 வரை துணை முதல்வர் என்பது செய்தி அளவில் கூட பல மாநிலங்களில் தெரியப்பட்டிருக்கவில்லை. இன்று நிலை வேறு. அதிலும் தமிழகத்தில் துணை முதல்வர் என்பது ஒரு சுமை அல்ல சுவை என்று தி.மு.க நிரூபித்திருக்கிறது.

ஜெயலலிதா ஒரு தடுமாறும் தலைவி என்றாலும் தடம் மாறாத தலைவி.அதாவது ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முட்டாள்தனங்களுக்குக் குறைவில்லாமல் பார்த்துக்கொள்வார். கட்சியில் இருந்து யார் யார் விலகினார்கள் என்பதை நினைவிலேயே வைத்துக்கொள்ள முடியாத படிக்கு சரம் கட்டி வெளியேற்றம் நடந்துகொண்டிருந்தது. கடைசியாக முத்துசாமியும் சின்னசாமியும். பட்டியல் சாமிகளுடன் முடிவடையாது. பட்சிகள் பறக்கக் காத்திருக்கின்றன.

கட்சிக்காரர்களை மதிப்பது என்பது ஜெயா டி.வி யில் கடைசியாக அஞ்சலி சொல்லிவிட்டு ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதல்ல.செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதற்கு வாழும் உதாரணமாக இருக்கிறார் அவர். கட்சிக்காரர்களின் நிலை என்ன வென்றால் ...’அடிமை புகுந்த பின்னும் எண்னும் போதங்கு வருவதற்கில்லை, கடுமையுடையதடி காவலுன் மாளிகையில்... ‘ என்பதுதான்.

மற்ற படி அரசாசனத்தில் இல்லையென்றால் அம்மைக்கு மன்றத்துக்குப் போகப் பிடிக்காது. இது தமிழ் நாட்டில் வியப்பான ஒன்றல்ல. கொள்கைச் சிங்கம் கோபால புரத்தில் இருக்கும் கோமளவல்லி கோடநாட்டில் இருக்கிறது. இதை தி.மு.க காரர்கள் விமர்சித்துப் பேசுவது எலும்பில்லாத நாக்கின் சௌகரியம் கொண்டு.

இப்படி நிலைமைகள் இருக்க அ.தி.மு.க வின் அஸ்திவாரம் அசைத்த விஜயகாந்த் சமரசத்துக்கான இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இதை அவர் புரிந்து கொள்ளாமல் தனித்து நின்றால் அதற்கான பலனை அனுபவிப்பார். கூட்டுகள் ஜெயலலிதாவை நோக்கி மும்மரம் அடைந்தால் வை.கோ கம்யூனிஸ்டுகளுடன் கை கோர்ப்பதற்கான மூன்றாம் அணி நான்காம் அணி பற்றிய திட்ட முன் வரைவுகளைப் பற்றிப் பேச வேண்டிவரும். தமிழ் நாட்டில் இரண்டுக்கு மேல் எண்கள் கிடையாது.விகிதாசார வாக்குமுறை வரும் வரை தமிழ்நாடு எம்மனோரின் இத்தகைய கட்டுரைகளை சந்தித்தே தீரவேண்டும்.

கம்யூனிஸ்டுகள் இந்த முறையாவது தனித்தே போட்டியிடாவிட்டால் தமிழகத்தில் நக்சல் (மாவோ)ஆதரவு பெருகுவதற்கு ஏதுவாகிவிடும். இதுவரை சொல்லாத முக்கிய சுவாரசியம்
தி.மு.க வில் நிகழப் போகும் உட்பூசல் (இதைக் ’குடும்பச்’ சண்டை என்று கொச்சைப் படுத்தலாகாது). வரும் ஆனால் வராது என்பது மாதிரியான போக்கில் இருக்கிற அதை நம்பி இதர கட்சிகள் கனவுகள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வது அவ்வக் கட்சியின் நலன்களுக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் மு.கருணாநிதி அல்ல என்பது என்னளவில் கணிப்புக்குள்ளாகிறது.

Wednesday, June 30, 2010

கிளிகள்....

நூறாம் நூறாம் கிளிக்கணக்கில் முப்பத்தாறு கிளிகள் என பதில் சொன்ன இர்ரண்டு பேருக்கு நன்றி.

நிலா நாற்பது - 6

ஆண்முகம் துதிக்குதென்றோ
பெண்ணொ,பெண் முகம்
உதிக்குதென்று ஆணொ சொன்னாலது
பவுர்ணமி

Friday, June 25, 2010

நூறு எப்பதான் ஜகன் வரும்.

கால் பந்தில் கோல்களின் எண்ணிக்கையை மனதில் வைக்காமல் ஆடுவது. இறக்கையுள்ள அரைப்பந்தில் ( ஷட்டில் காக் ) பாயிண்டுகளை மனங்க்கொள்ளாமல் ஆடுவது. பழைய (அதிலும் பழைய) காவஸ்கரைப் போல போர்டைப் பார்க்காமலே செஞ்சுரியைக் கடந்துவிடுவது இப்படியெல்லாம் நடந்து விடுதல் நல்லதுதான்.

நான் பிளாக்கின் ‘100’ போஸ்ட்ஸ் என்பதை நம்பித்தான் நூறைக் கடந்துவிட்டதாக நம்பினேன். கணக்கு தவறு என்கிறார் ’காலடி’யார் ஜகன்.

சரி நூறு வரும்போது வரட்டும். அதற்கு முன் 100 பற்றிய சிறு புதிர்.

ஒரு கிளிக்கூட்டம் பறந்துபோகிறது. பறக்கும் அவற்றைப் (அவைகளை அல்ல - செம்மொழிக் குறிப்பு) பார்த்து ஒருவர் கேட்கிறார்.
‘நூறாம் நூறாம் கிளிகளே எங்கே போறீங்க?’
அதற்கு ஒரு கிளி சொன்ன பதில் இப்படி.

‘நாங்க நூறு பேர் அல்ல. நாங்களும் எங்களொத்த இனமும் எங்களிற் பாதியும் பாதியில் பாதியும் உன்னையும் சேர்த்தால்தான் நூறு’

அப்படியானால் பறந்த கிளிகளின் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாகச் சொல்வோர் ‘செம்மொழிக் கணக்க்கர்’ விருதும் பட்டயமும் பெறுகிறார். மற்றபடி அவருக்கு சிறப்பாக கூடுதலாக ஒரு கேள்வி தரப்படும். அந்தக் கேள்வி அமைந்திருக்கும் விதம் இப்படி.

13 -ம் தேதி முதல் 18 -ம் தேதி வரை ஒரு மாநாடு என்றால், அந்த மாநாடு ‘முடிய’ வேண்டியது எப்போது?

நிலா நாற்பது - 5

கீழ் நோக்கு மேல் நோக்கு
உரைப்பது நாட்காட்டிகளின்
பகற்பொய்.நிலா வரும்
இரவெலாம் மேல்நோக்கு நாட்களே.

நிலா நாற்பது - 4

அண்ட வெளியில்
துடுப்பின்றித் தடுப்பின்றி
சஞ்சரிக்கும் வெண்படகு
அஞ்சாம் வளர்பிறை.

Friday, June 4, 2010

என்னவாகிறது இவ்விரவுக்கு...

நமக்குத் தூக்கம் வராமலிருக்கையில்
இவ்விரவுக்குப்
பைத்தியம் பிடித்துவிடுதல் உசிதம்.
நமக்குப் பைத்தியம் பிடித்து
விடுதல்
இவ்வுலகுக்கு நன்மை.

தவிர்க்கமுடியா
தவிப்பின் நனவில் உள்ளத்து
உடன்
இருப்பவர்கள் எல்லாம் விழித்தவாறே
உடனிருத்தல் நலமே நலம்.

பிரக்ஞை தெளியுமுன் வாக்குமூலங்களைக்
கொடுத்துவிடுதல்
உயிரின் விருப்பமாயும்
பேசும் வார்த்தைக்கு வருந்துதல்
பிழைப்பின் வருத்தமாகவும் இருக்கிறது.

பேதலிப்பின் நிலைகள் உணர்ந்த
பின்னும்
உண்மையறியாமல் தெளிவை
நிலை நாட்ட விழைகிறது
விடுபடாத ஒன்று.

அனைத்திலிருந்தும் விடுபடாத ஒன்று
ஒன்றிலிருந்தும் கூட
விடுபடப் போவ தில்லை.

Thursday, June 3, 2010

நட்பினை யோசித்தல்...

நட்பு பற்றி ,நட்பின் சுகம் (அ-(காதலின் சுகம்) பற்றி யோசிக்கும் போதெல்லாம் என் நண்பன் ஒருவன் அவனது கல்லூரி முதலாமாண்டுக் காலத்தில் சமவயது மாணவியுடன் நிகழ்த்திக்கொண்ட பரிவர்த்தனை நினைவுக்கு வருகிறது.எண்பத்தைந்தாம் வருடங்களில் அவர்களுக்கு இடையே நடந்துகொண்ட எழுத்துரையாடலைக் காணும் போது இப்போதும் எனக்கு வியப்பு மேலிடுகிறது. அப்புறம் அவர்கள் பிரிந்தார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். காதலினும் பெரிது உலகு.

நண்பன் ஒரு ஊடல் சமயத்து காதலிக்கு எழுதிய கடிதம் இப்படி:

மறந்து விடுவதை விட எப்படியும் தண்டித்துவிட முடியாது. தண்டித்துவிடாமல் எதுவும் செய்க.

பெண்ணின் பதில் : ‘நீ என் சுவாசம்.”
(சுவாசத்தை நினைவு வைத்துக்கொண்டிருப்பதில்லை என்பது உட்கிடை)

நண்பன் பதில் : ‘நான் உன் குளத்து மீன் மறுபடியும் தூண்டில் போடாதே.’

ஆக இவ்வாறாயிருந்தன காரியங்கள்.இருக்கின்றனவும் கூட காரியங்கள். நட்பின் களிபேருவகையும் இணையொரு வகையும் நானறிய வேறில்லை என்றபோதும் நரம்பும் ஆன்மாவும் தளர்வுற்றிருக்கிற சமயங்களில் எது ஒன்றும் பொருட்படத் தக்கதாகக் காணாமல் சாவின் நலிவை முத்தமிட முனைகிறேன்.

மற்றபடிக்கு நூறாம் பதிவின் பின்னூட்டமிட்டுக் கிளர்த்தி மலர்த்திய ஆதிரனுக்கு இதில் வரும் பெண்ணின் பதில் எப்போதும் உண்டு. ஆதிரனைப் படிக்கையில் நான் என்னளவில் தத்துவ விசாரணையைத் தனி விசாரணையாகக் குறுக்குவதை உணர்கிறேன்.

Wednesday, June 2, 2010

நூறுக்கு முன்னால் வரும்...

இது நூறாவது பதிவு.தமிழில் நூறுக்கு முன்னால் தொண்ணூறு வருவதும் ஆயிரத்துக்கு முன்னால் தொள்ளாயிரம் வருவதும் போல பிற மொழிகளில் வருகிறதா எனத் தெரியவில்லை. ஆனால் பித்துற்ற நிலையில் விரல் வழி உளறப்போகிறேன் என்பது தெரிகிறது.

திடீரெனத் தோன்றும் மனதின் பாடல் பண்டையதொரு மெட்டில்...இந்தப் பச்சைக்’கொடி’*க்கொரு செவ்வந்திப் பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன். அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை மெல்லென இட்டுவைத்தேன். நான் யார்? யார்? யாரோ?... என்று ஒலிக்கிறது. நிச்சயமாகவும் அது யேசுதாஸின் குரல் அல்ல. எஸ். வரலட்சுமியின் குரலில் இன்னும் கூடக் கொஞ்சம் சோகபாவமும் ஏகாந்தமும் கூடக்கூடியதே என் மனதில் ஒலிக்கும் குரல்.

உண்மையில் எனது மெயில் பக்கத்தில் பக்கவாட்டில் ஓடிய பெயர்கள் பட்டியலில் சில நண்பர்களின் பேருக்கு அருகில் பச்சை நிறக் கடுகுப்பொட்டு ஒளிர்கிறது. எப்போது பொட்டுகள் ‘ஆன் லைன் ’காட்டினாலும் உடனே ஜி - டாக்- கில் எழுத்துரையாடிய காலமும் ஸ்கைப்பில் உரையாடிய காலமும் நினைவில் வந்துபோனது. இன்றும் ஆன் லைனில் சில நட்பின் பெயர்கள் ஒளிர்கின்றன.

எரி தழல் நரகத்தில் அந்தரத்தில் பொட்டித்து வெப்பக்காற்றில் சிதறுகிறது நான் நாவிய கடுகு.

பேரழகுகளே... பெருந்துயரங்களே... காவியமாய்ப் பூத்துப்போன சிற்றலகுகளே.. சிறு மிகு தருணங்களே! இந்த விநாடியன்ன விநாடிகள் இனி வாய்க்காமல் போவதே புரிதலின் மேம்பட்ட நிலையாக இருக்கும்.

நான் நாடித் திரிந்தவையும் தேடித் தேர்ந்தவையும் இணைந்து பரிசளித்தவை இப்போதுள்ள தனிமை.விடியல்களில், இருப்பின் பேதமையே என் உடலின் இருப்பென கழிவிரக்கம் கொள்ளவைக்கும் இதை கசப்பின் சுவையோடு விழுங்கிக்கொள்கிறேன். கலனும் களமும் பெரிதாகையால் கடலினும் பெரிது இது. பரவசமுறும் என் இதயத்தினும் சிறிதே.

நன்று. இது நிற்க. தீர்க்க.

வலைத்தளம் தோன்ற உடன் துணையாய் இருந்த தோழி சாந்திராணி, தோன்றாத் துணையாய் இருந்த நேசமித்ரன், வடிவமைப்பில் உசாவும் ஜகநாதன்.கே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தல் என்பதை சடங்காய் ஆற்றி நூறை நிறைவு செய்கிறேன். முன்னிகள் தொடரிகள் பற்றிய பிரக்ஞை எப்போதும் உண்டு.

* - பழையபாடல் பாடபேதத்துடன் இங்கு பயிலப்படுகிறது.பாடல் இடம் பெற்ற படம் , ‘நீதிக்குத் தலை வணங்கு’ என எண்ணுகையில் புன்னகை வருகிறது . சிரித்த முகத்துடன் நான் இப்போது தொங்கு கயிற்றுக்கு முத்தமிடலாம். ஆனால் கழுவேறத் தயாரில்லை.

Tuesday, June 1, 2010

தார்...கபர்தார்

முந்தாநாள் விண்ணொளிப்பெட்டிகளில் செய்தி பார்த்தேன். நேற்றிலிருந்து சென்னையில் கடையில் பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்கவேணும்(ஜூன் -1) என மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.போர்டே இல்லாமல் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக பெயர்ப்பலகை வைத்துத் தருவதும் அவரது திட்டமாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

நேற்று அங்காடித்தெருக்களின் பக்கம் போகவாய்ப்பில்லை.எத்தனை கடைகளை ‘தமிழ்ப் பலகை’ இல்லாததற்காக அடைத்து நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. வியாபாரிகள் விஷயத்தில் இவ்வளவு தீவிரம் கடைப்பிடிக்கவேண்டியதில்லை.(நீலகிரி மாவட்டம் கம்பத்தில் பெயர்ப் பலகைகள் பெரும்பாலும் மலயாளத்தில் இருப்பது தனிக்கதை.)

பொருட்கள் அதன் (தரம் என்பது இங்கு மறுபுறம்) அதன் ‘டாம்பீகம் மற்றும் விளம்பரம்’ காரணமாக செலாவணி ஆகின்றனவேயன்றி போர்டுக்காக அல்ல. வெளியில் வாட்ச்மேன் வைத்து முகமன் கூறி அழைப்பார்களே அன்றி கடைக்காரர்கள் கையைப் பிடித்து உள்ளே இழுப்பதில்லை. மாநகரத்தந்தை மா.சு வை விடவும் பணக்கார வியாபாரிகள் நிறைந்த உலகமிது. அவர்களுக்குத் தெரியும் பண்டத்தை எப்படி விற்பது என்பது.

தமிழில் பெயர் எழுதாவிட்டால் அங்கு போகமாட்டேன் என்கிற சொரணை தமிழருக்கே இருந்துவிட்டால் இப்படியான சட்ட திட்டங்களுக்கு இல்லை. கடுகுக்குத் தமிழில் பெயர் தெரியாத குழந்தைகள் பலர் வளர்ந்து உருவாகி வ(ள)ரும் சென்னையில் பெயர்ப்பலகை லத்தீன் அல்லது பிரெஞ்சில் இருந்தால்தான் என்ன. அப்படி என்ன தமிழ்க்கன்னி உங்கள் கனவில் வந்து நொட்டுகிறாள்? தமிழை இப்படியெல்லாம் மீட்கச்சொல்லி.

சதுர அங்குலத்துக்குக் கணக்குப் போட்டு கடை,கல்லா,கம்ப்யூட்டர் பில்லிங், கடை முகப்பு அவ்வளைவையும் பொறியமைவு கொண்டு டிசைன் செய்த (எனதருமை) வியாபாரப் பெருங்குடி மக்கள் ஏன் தமிழில் பெயர்ப்பலகை வைக்கவேண்டும். குன்றா மூன்றாம் பிறை என்றோ நல்லதங்காள் வருஷம் என்றோ அவர்களுக்கு தங்கமும் புடவையும் விற்கத்தெரியும்.

தங்கத்தின் மோகத்திலிருந்தும் பட்டு மோகத்திலிருந்தும் விடுபட்டுவிட்டாலே இங்கே பாதிப்பரலோகம் மண்னில் லபித்துவிடும்.அவனவன் அவனவன் வேலையை அவ்வளவு நொம்பலங்கள் அல்லது இன்பங்களினூடே பார்த்துக்கொண்டு போவதற்கிடையில் இருப்பை நிரூப்பிக்க இவர்கள் போடும் கோட்டாலை வெந்தணலில் புழுங்க வைக்கிறது.

எனது துரதிர்ஷ்டம்தான் போயும் போயும் இப்படி ஒரு செய்தியை நானும் sun net work-கில் கேட்டிருக்கவேண்டியதில்லை.எழுத்துகளை அழிக்க தார் எடுத்த வமிசத்தார் எம் தமிழ்ச்சிங்கத்தார் மரபில் இன்னும் என்னென்ன நடக்குமோ?

நிலா நாற்பது -3

அந்தர மல்லிகைப்
பந்திலிருந்து சரம்
சரமாய் உருவுகிறார்கள்
ரம்பையும் ஊர்வசியும்.
தேய்பிறைகள்.

Monday, May 31, 2010

நிலா நாற்பது - 2

வரம்புகளில்லாத
நட்சத்திர கிரிகெட்டுக்கு
நிரந்தரமில்லாத
நடுவர்

Sunday, May 30, 2010

வாழும் அருங்கலை.

இன்றைய நாளிதழ் செய்தி ஒன்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது(சுவாரசியம் அளித்தது என்று எழுதினால் என்னதான் ஆகும். ஆனாலும் உண்மை உங்களுக்குத் தெரியும்தானே) .ஆம்.ஆன்மீக வாதி ரவிசங்கர் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கிறார்.அவரது குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பேசும்போது எனக்கு சச்சின் டெண்டுல்கர் பேசுவது நினைவுக்குவரும். ஒரு மாதிரியான வசீகரத்தன்மை கொண்ட குரல் இருவருக்கும்.

எனக்கு அவரது குரல் பிடிப்பது இருக்கட்டும். எல்லோருக்கும் எல்லோரையும் பிடிக்கவேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு ‘போட்டு எறிய வேண்டிய’ அளவு கொலைவெறி போலும். துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.கூட்டத்தில் செருப்பெடுத்து எறிந்தால் சனியன் பிடித்தவன் தலையில் விழும் என்பார்கள். அவ்வண்ணம் குண்டு (அப்பாவி?) பக்தர் ஒருவர் மீது பட்டுவிட்டது. அமைதி காக்குமாறு பக்தர்களைக் கேட்டுக்கொள்கிற ரவிசங்கர் சுட்டவரையும் தன்னிடம் பாடம் கேட்கவருமாறு பேட்டியில் பணித்திருக்கிறார். கிளாசுக்கு துப்பாக்கியுடன் வரலாமா என்பது பற்றி குறிப்புகள் இல்லை.

ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டில் தப்பித்தார் என்பது எனக்கு மகிழ்ச்சிச் செய்தி. வேட்டியைப் போர்த்திக்கொண்டு நடமாட நம் தலைமுறையிலும் ஆள் இருக்கிறதே என்கிற எண்ணத்தால் விளைந்த மகிழ்ச்சி. அதைவிடவும் ‘வாழும் கலை’ (தப்பிக்கும் கலை+தாக்குப் பிடிக்கும் கலை= வாழும் கலை) பயிற்சி நடத்த தகுதியானவர் என்பதை அன்னார் நிரூபித்துள்ளமை
மெத்த மகிழ்ச்சியில் மேலும் ஆழ்த்துகிறது.

Thursday, May 27, 2010

நிலா நாற்பது - 1

இலக்குக் கம்பங்களை
இழந்துவிட்டு
அந்தரத்தில் நிற்கிறது
கந்தர்வர்களின் கால்பந்து

Tuesday, May 25, 2010

காப்புரிமை

பொதுவாகக் காப்புரிமை என்பது பல திறப்படும்.ஏனெனில் பணம் சம்பாதிக்கிற விவகாரங்கள் இல்லையா. இசைக் கீற்றினை பதினைந்து நொடிகள் வரை யாருடையதாவதை அப்படியே அடித்துவிடுவது எல்லாம் காப்புரிமையில் இருந்து விலக்கப்பட்டது. பிறகும் இசை முதலிய சங்கதிகளுக்கு மொழி கிடையாதாகையால் சர்வதேச அளவிலிருந்து - எட்டுத் திக்கும் சென்றும் நம் இசையமைப்பாளர்கள் நன்றி கூடச் சொல்லாமல் மண்ணில் இறக்கிவிடுவது உண்டு. இதேபோல இங்கு உருவானவற்றையும் பிறரும் அடித்துத் தேற்றுவார்கள் என நம்பலாம்.

அதேபோல திரைப் படப் பெயர்களுக்கான ஆயுள் பதினாறு ஆண்டுகள் என்பது நான் கேள்விப்பட்டது.(சரியான தகவல்கள் வரவேற்கப்படுகின்றன) நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், பொல்லாதவன், திருவிளையாடல், நினைத்தாலே இனிக்கும்... என எவ்வளவோ படங்கள் வந்துவிட்டன.

பழைய படத்தின் மரியாதையைக் கெடுக்காத படம் என்றால் ‘பில்லா’ மட்டும்தான் என்பது எனது துணிபு. பல படங்களின் பெயர்களுக்காகவும் இப்போது எடுக்கப்பட்ட விதத்துக்காகவும் திலகங்கள் இருவரும் சொர்க்கத்தில் துன்புறுவார்கள்.

இஃது இவ்விதம் இருக்கட்டும். இன்று மத்தியானம் கோடம்பாக்கத்தில் கமலாதியேட்டர் பக்கம் நண்பர் ஸ்ரீதரின் வரவுக்காகக் காத்திருந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கிய போது நடந்தது. நின்ற இடத்தின் அருகிலுள்ள மதில் சுவரில்‘ஆயிரத்தில் ஒருவன்’ கார்த்தியின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களைப் பார்த்தேன். நல்லவேளை அவருக்குக் கட்- அவுட் வைக்காமல் இந்த அளவில் அடக்கமாக விட்டார்களே என வியந்து மகிழ்ந்து பார்த்துக்கொண்டிருக்கும்போது ஒரு 55வயது அளவிடத்தக்க நபர் வந்து என்னருகில் நின்று போஸ்டர்களை முறைத்தார்.முணுமுணுத்தார்.

எனக்கு வரலாறு பிடிபட்டுவிட்டது.நண்பன் வரும் வரை பொழுதும் போகணுமே என அவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

’’ஆயிரத்தில் ஒருவன்னா அது எம்.ஜி.ஆர் மட்டும் தான்ங்கறீங்களா?”

‘’ஆமாங்க. இந்த .. யாருங்க?” என்றார்.(ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு எழுத்து)

சென்னையில் இன்னும் அக்கினி நட்சத்திரம் வேறு முழுதாகக் கடந்திருக்கவில்லை.
‘சிவகுமாரோட பையனுங்க’ என்று சொல்லலாமா என நினைத்தவன் உடனே அமைதியாகிவிட்டேன். அவர் சிவகுமாரையும் திட்டுவார் என்னையும் திட்டுவார் எனத் தோன்றியது. அமைதி காத்தேன். அக்னி நட்சத்திரம் (இந்தப்பேரு இன்னம் காலாவதி ஆகலியா?)கடந்துவிட்டது.அமைதியாய் இருந்ததற்கு என்னை நானே மெச்சிக்கொண்டேன்.

‘காப்புரிமை’களில்தான் எத்தனை வகை?

Friday, May 21, 2010

விருகை - வட பழனி

விருகம் பாக்கத்தில் இருந்து வடபழனிக்கு பேருந்து ஏறலாம் என வந்து நின்றபோது இளங்காலை நேரம்.சம்பவம் சென்னையில் எனத் தெரிவிக்கிறேன்.ஏனெனில் இதே பெயரில் வேறு ஊர்கள் எங்கேனும் இருக்கக் கூடும்.
போரூர் போகிற திசைக்கு நிற்காமல் சரியான திசைக்கு வந்து நிற்கிற அளவில் இருப்பதே எனக்கு சமீபத்திய வளர்ச்சிதான். நிறுத்தத்தில் எனக்கு வலதுபக்கம் முப்பத்தைந்து வயது அளவிடத்தக்கவாலிபர் நின்று கொண்டிருந்தார்.விரலிடுக்கின் மேலாகவும் ஆமைமுகட்டின் மேலாகவும் பாதத்தின் மேலாகவும் இரண்டு பட்டைகள் கவ்வுகிற அழகான செருப்புகள் (இதை ஒருமையில் சொன்னால் என்னவாம்?) அணிந்திருந்த அவர் கரும்பச்சையில் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.கறுப்பான அவர் என்னிலும் அழகானவர்.அதனாலேயே விவரமானவர் என்பதாகவும் மனப்பதிவு ஊர்ஜிக்கிறது:கர்ஜிக்கிறது. சிரைத்த முகத்தின் மேலாக படிய வாரப்பட்ட முடித்தலை.வெள்ளை அரைக்கைச் சட்டை அதில் முக்கால் அங்குலத்துக்கு ஒன்றாக வெள்ளி நீர்க்கோலக் கோடுகள்.மூன்று மில்லி மீட்டர் அகலங்கள் கொண்டவை.

முதலாவது பேருந்தின் போர்டை முழுக்கப் படிப்பதற்குள் வண்டி பக்கவாட்டுக்கு வந்துவிட ''ஏங்க இது வடபழனி போகுங்களா?'' எனக் கேட்கிறேன். ''போகாது'' எனப் பதிலளிக்கிறார்.

அடுத்த வண்டி. சொகுசு வண்டி. இருக்கைகள் ஆட்களின் வரவுக்கு இரைஞ்சுகிற நிலையில் தாடாத்தியாக இருந்தது. ஆங்கிலத்தில் ஸ்டாப்புகளின் பெயர் எழுதி அவை நகர்ந்துகொண்டிருப்பது போல பிராம்ப்டர் ஏற்பாடு உள்ளது.எனது காலத்தோடு இயற்கை விளையாடும் கண்ணாமூச்சி இம்முறையும் துல்லியமாக விளையாடுகிறது. நின்று போகிற பேருந்து மூன்றாம் கியருக்கு மாறுகிற தூரத்தில் 'வட பழனி' என்கிற சிவப்பெழுத்துகள் பேருந்தின் முகுளப்பகுதியில் ஓடுவதைப் பார்க்கிறேன்.

அருகில் உள்ள அழகனை மனதால் சடைகிறேன்.வடபழனிக்கு இந்த வண்டி போறதைச் சொல்வதற்கு இந்த ஆளுக்கென்ன கேடு? அல்லது சொகுசு பஸ்சுக்கு காசில்லாதவன் என முடிவு செய்திருக்கிறாரா? இப்படிப் பலதும் ஓடியது.

தவிர, கிரி அபார்ட்மெண்ட்ஸில் அறை வாசியும் எனக்கு ஆதிரனுக்கெல்லாம் நிழற்குடை வேந்தனாயிருக்கிற சிவராமன் 'உரையாடல்' ,பொசிசன்,பர்சப்சன் என்றெல்லாம் நள்ளிரவு வரை பேசி(அதிகம் கேட்டும்) வந்ததில்...

இந்த நபரிடம் நான் கேட்ட கேள்வி தப்பு. 'வட பழனி போற பஸ் வந்தா சொல்லுங்க!'ஞ என்று எதைப் பேச வேண்டுமோ அதை மட்டும் பேசியிருக்கவேண்டும் என்றும் தோன்றியது.

இப்போது அடுத்த வண்டி.மூன்றாம் கியரில் முகுளத்தில் வட பழனி.'மறு படியும் வண்டி போச்சே' என மனம் அங்கலாய்த்தது.இன்று நின்று செத்தான் சிவகுமார் என முடிவு செய்தேன். இப்போது ஒரு சாதாரணப் பேருந்து.பக்கத்தில் நிற்கிறவர் இரண்டாம் முறையாக இப்போது என்னிடம் பேசுகிறார். மொழிபெயர்க்கவும் மொழியவும் முடியாத அற்புதப் புன்னகையோடு சொன்னார்.
''இது போகாதுங்க."

நீண்ட நெடுமூச்சு விட்டேன். இந்தப் பேருந்து எங்கே சென்றாலும் ஏறுவது என முடிவெடுத்தேன். அவர் அந்தப் பேருந்தில் ஏறவில்லை. பலருக்கு வழி காட்ட அவர் நிற்கக் கூடும். நான் ஏறிய பேருந்து வட பழனி சென்றது. பத்து ரூபாய் நோட்டை நீட்ட நடத்துனர் ''மூணு ரூபாய் கொடுங்க'' என்றார். சரியாக காதில் வாங்கிக் கொள்ளாத நான் 'ஒரு ரூபாய் ' எடுத்துக்கொடுத்தேன்.

'உங்க கிட்ட கேட்டே இருக்க வேண்டியதில்லை' என்ற நடத்துனர் எட்டு ரூபாயை மீதியாகக் கொடுத்தார்.அவரிடம் பேசாததை இப்போது எழுதுகிறேன்,

''வானப்பிரஸ்தம் போகாமல் ஒருத்தன் வட பழனி போறானே அதே பெருசு. விடூங்க கண்டக்டர்.''

Monday, May 17, 2010

இரும்புக்கோட்டை முக்கா டவுசர்

நேற்று மத்தியானம் பேருந்து நிலையத்துக்கு முந்தின நிறுத்தத்தில் பேருந்து இறங்கிவிடுகிற போக்கின் அடிப்படையில் ஒட்டன் சத்திரத்தில் பேருந்து இறங்கியபோது.கார்த்திக் தியேட்டரில் அது மத்தியானக் காட்சி தொடங்கி ஓடுகிற நேரமாக இருந்தது.டிக்கெட் கவுன்ட்டரின் வால் முனையில் ஒரே ஒரு நபர் நின்றுகொண்டிருந்த நேரம் 2.45. படம் தொடங்கும் நேரம் 2.15 என பக்கவாட்டில் ஒரு பலகையில் கண்டிருந்ததால் ஏங்க படம் போட்டு அரை மணி நேரம் ஆச்சா? என வினவ அவர் 2.40க்குத்தான் படம் தொடங்கிற்று என்றார்.

என்னா ஆனாலும் சரி என்று டிக்கெட் எடுக்கப்போனால் அவரே சீட்டுக் கொடுக்கும் கூண்டினுள்ளும் வந்து நின்றார். 40 ரூபாய் டிக்கெட்டுக்கு இரண்டாம் மாடிக்கு சீட் எடுத்து மிச்சமுள்ள மொத்தப்படமும் ஒற்றை ஆளாக உட்கார்ந்து பார்த்தேன்.நூறுக்கும் மேற்பட்ட நாற்காலிகளுக்கு ஒரு ஆள் என்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

நான் நுழைகிற நேரம் சிங்கம்(லாரன்ஸ்) உலக்கையுடன்(சாய்குமார்)சீட்டு விளையாட ஆரம்பித்திருந்தார். சீட்டு விளையாட்டு என்றால் சீட்டின் எண்களுடன் விளையாடாமல் சீட்டுக்கட்டில் விளையாடுவது. முதலில் படத்துக்குத் தேர்ந்தெடுத்த வண்ணத்தை மனங்கொண்டு சிம்புதேவனை மெச்ச வேண்டும்.வேறு ஒரு நில அமைப்பிலும் பிரமிப்பிலும் நம்மை வைத்திருக்கும் வண்ணம் அது இருந்தது.பிறகு செட்டுகள்.என்றாலும் கூட செட்டுகளைப் பார்த்துவிட்டு இடைவேளை வரை படம் பார்த்ததில் நிறைய தச்சர்களின் உழைப்பு வீணாகி விட்டதோ என நினைத்தேன். ஆனால் டிரவுசர் இனிக் கிழியும் என இடைவேளை விட்டபின் சிம்புதேவன் ஈடுகட்டிவிட்டார்.

கலைப் படைப்பில் முழுக்கவும் ஒன்றித்து நாம் பிரக்ஞை இழந்துவிடக்கூடாது (இது பிரட்டோ பிரெக்டோ சொன்னது அல்லவா) என்பதற்கான நினைவூட்டல்கள் அடிக்கடி வந்துபோகின்றன. படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது 14 மொழி பேசும் டிரான்சுலேட்டர்.
விவிலிய எழுப்புதல் கூட்ட மொழிபெயர்ப்பின் விரைவை எட்டுகிறார். அதேபோல மூல மொழி பேசும் எம்.எஸ். பாஸ்கர்.(விகரம் படத்தின் அம்ஜத் மற்றும் ஜனகராஜை நினைவுகொள்க).

கைகளைப் பிசையாமல் நம்பியாரை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் நாசர்.லாரன்ஸ் மட்டும் ரஜினியிலிருந்து வெளிவர கொஞ்சம் கிரமப்பட்டிருக்கிறார். தேடிப்போன புதையல் இடத்துக்கு ‘சுங்கச் சாவடி’ போட்டிருப்பதிலிருந்து படத்துக்கு ஒரு சமகாலத் தன்மை வந்துவிடுகிறது.கௌ பாய் தொப்பிக்கு ரொம்பப் பொருந்திய முகம் மௌலியினுடையது.

பாஸ் மார்க்,பனகல் பார்க் என பல வித ’ஓட்டு’கள் படத்திலுண்டு. படத்திற்கும் உண்டு.நாயகிகள் தேர்வு நல்ல தேர்வு.(சாப்பாடு நல்ல ஏற்பாடு என்று திருவிழா நாடகங்களில் பபூன்கள் சொல்லும் தொனியில் இதைப் படிக்கவேண்டும்.)பாட்டுகள் நன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும் கொட்டகை அமைப்பு காரணமாகவோ காதுக்கோளாறு காரணமாகவோ அதை நான் மனங்கொள்ள முடியவில்லை. வைரத்தை எடுத்து பொதுமக்களுக்குக் கொடுத்தாயிற்று என்கிற அளவில் தமிழில் கௌபாயை முதலும் முடிவுமாக்கிய சிம்புதேவனுக்கு நன்றி.(பயலுகளைப் படிக்க வைங்கடா- என்பது அவரது கடைசி வசனம்)

படத்தின் இறுதி வசனம் சிங்கத்தினுடையது அல்ல. பத்மப்பிரியாவினுடையது.எப்போதா வந்து இடறிவிட்டு கனவாய்ப் போகிற காதலி போன்ற தோற்றம் அவருக்கு. ஆனால் இந்தப் படத்தில் அவரது காதல் மட்டும்தான் ஈடேறுகிறது.

இந்தப் படத்தில் வேறொரு விசேஷம் இருக்கிறது. படத்தில் தலைகாட்டுகிற பெண்களில் கிட்டத்தட்ட முப்பத்து மூணு சதவீதம் பெண்களை சிங்கம் காதலிக்கிறது.சந்தேகம் இருக்கும் யாராகிலும் படம் பார்த்துவிட்டு அதில் காணக்கிடைக்கும் பெண் தலைகளை எண்ணிச்சொல்லுங்கள்.

Monday, May 10, 2010

பிரார்த்தனை வகை

ஒரு மனைவி ரொம்பவும் கடவுள் பக்தியுடன் இருந்தார்.சுமாரான விவசாயக் குடும்பம். ’ஆடுகறக்க பூனை நக்க’- என்பார்களே அதுபோல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. கணவன் பெயருக்கு அப்போது சொசைட்டி( நில வளவங்கி) லோன் எடுத்திருந்தது. அந்த வங்கிகளில் செகரட்டரிகளுக்குத்தான் பவர்.
அப்போது ஒரு காலை நேரம் .மனைவி குளித்து முழுகி கோயிலுக்குத் தயாரான சமயம் கணவனின் வசனம் இப்படியாக இருந்தது.

’’ம். கொழம்பு தாளிக்கறதுக்கு இருக்கற எண்ணையையும் கொண்டு போயி அங்க கோயல்ல ஊத்தீட்டு வந்தர்றே. சரி... சரி... போப்போ. அப்படியே சாமி கிட்ட, நம்ம செகரட்டரி சுப்பிரமணிக்கு நம்மளைப் பாக்கற நேரம் மட்டும் மயமயன்னு கண்ணைக் கட்டிக்கோணும் சாமின்னு வேண்டிக்க!”

Sunday, May 9, 2010

அம்மம்மா தனயன் என்று நம்பி...

இன்று, ’காகித ஓடம்’ பிளாக் பார்க்கப் போனபோது அன்னையர் தினம் என்கிற செய்தி தெரிந்தது. மாலைக் கருக்கல் வானில் வரும் வரை இந்தத் தகவல் தெரியாத நான் அமராவதி ஆற்றங்கரையில் ஆமையைக் கொன்ற பாவத்திலும் தாமிரபரணிக் கரையில் தவளையைக் கொன்ற பாவத்திலும் போவேனாக.அன்னையர் தினம் மகிழ்ச்சிக்குரிய ஒன்று. வாழ்த்து விரும்புவோர்க்கு என் வாழ்த்துக்கள்.

பெற்ற அன்னையை மகிழ்வித்திருக்கிறேனா... இனியாவது மகிழ்விக்க வித்து ஏதும் வைத்திருக்கின்றேனா என யோசிக்கிறேன். சான்றோன் எனக் கேட்டு மகிழ்வதற்குமுன் வேறு விதமான செய்திகள் அவளைச் சென்றடைந்துவிடுகின்றன. எழுத்து சரியில்லை என நினைக்கிறேன். அல்லது உலகத்தின் தகவல் தொடர்பு அமைப்பை மாற்றவேண்டும் என்பது அவாவாக இருக்கிறது.

அம்மாவைப் பற்றி நினைக்கும்போது எஸ்.எஸ். வாசன் தயாரித்த சிவாஜி நடித்த படம் நினைவுக்கு வருகிறது.(இரும்புக் கோட்டையோ என்னவோ பேர். இரும்பு இதயமாகக் கூட இருக்கலாம், அறிந்தவர் தவறு கூர்க). அதில் சிவாஜி அம்மாவிடம் பேசும் வசனம்.
சிவாஜி: அம்மா கடவுள் கொடுமைக் காரனம்மா...
மம்மி ; ஏப்பா அப்படி சொல்றே?
சிவாஜி: எனக்கு ஒரு நல்ல அம்மாவைக் கொடுத்த கடவுள் உனக்கு ஒரு நல்ல புள்ளயக் கொடுக்காமப் போயிட்டானே....
(வசனம் முடிந்தது)

என்ன செய்றதூஊஊஊஊ?..... சொல்லு எஞ் செல்லம்மா?

Friday, May 7, 2010

பொன் முட்டை....

மூன்று நாட்களுக்கு முன் அண்ணன் மாதவராஜ் ‘தீராத பக்கங்க’ளில் இட்ட இடுகையை இப்போதுதான் காலையில் ஆயிபோயிக் கழுவி வந்த கையோடு படித்தேன். ஜெ என்றால்... என்கிற மகத்தான பதிவை இட்டிருந்தார். ஒரு குழந்தை இசா(2) போவது பற்றியது அது.
பதிவில் வரும் பீயான ’ஜெ’யை குழந்தையோடு சேர்ந்து புரிந்துகொள்ளாமல் செல்வியோடு சேர்ந்து புரிந்துகொண்டால் அது அவர்கள் தவறு.

ஏனெனில், மாதவராஜுக்கு முன்னெழுத்தாகவும் முன்னெழுத்தாகவும் உடனெழுத்தாகவும் ஏற்கெனவே இரண்டு ‘ஜெ’கள் உண்டு. இது அவரைத் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.நிற்க.. உடல் சுகாதாரம் உடலியல் போக்குகள் குறித்து நாகரிகம் என்ற படுதாவில் ஒரு சங்கதியையும் பேசாமல் காலத்துக்கும் கஷ்டப்பட்டுக்கொடிருக்கிற சமூகங்களில் தமிழ்ச் சமூகமும் ஒன்று.

இரண்டு உதாரணங்கள்.2001 இல் ஒரு மாணவரின் மருத்துவ ஆய்வறிக்கை (ஸ்டடி) முடிவடைய நானும் உதவினேன்.(ஐம்பதுக் கணக்கான கேள்விகள் கொண்ட நூற்றுக்கணக்கான தாள்களை அவர் ஆட்கள் பிடித்து நிரப்பவேண்டும்)அப்போது ஒரு நபரிடம்
வயது;32.படிப்பு;எட்டாவது. தினமும் எத்தனை முறை மலம் கழிப்பீர்கள்? என்று கேட்டதற்கு அவர் ஐந்து முறை என்றார். நான் திகைத்தேன். நானே மூனுமுறைதானே இவன் என்னைவிடப் பெரிய ஆளா என்று. ‘’ஏங்க நல்லா யோசிச்சு சொல்லுங்க. அஞ்சு தடவையா?’’
‘’ஆமாங்க. தினம் போறவன் எனக்குத் தெரியாதா? ஒன்னுக்குப் போறதத்தான கேக்கறீங்க?’’
- ஆக மலம் என்றால் ஒன்னுக்குப் போறது என நினைத்துக்கொண்டிருக்கிற ஆட்கள் இருக்கிற மாநிலம் நம்முது.

ஒரு தடவை எங்க ஊர் ஐயன் ஒருவர் இருட்டில் முள்ளுக்காடு ஒன்றுக்கு வெளிக்கிருக்கப் போனார்.ஒரு சுற்று கழிந்து முடிந்து இரண்டாம் கழிப்புக்கு இடம் மாறி அமர்கையில் தொடையில் முள் கீறவும் பாம்பு ஒன்று நகர்ந்து போகவும் சரியாக இருந்தது. பாம்புதான் போட்டுவிட்டது என மருத்துவமனைக்குச் சென்றவரிடம் ‘’முதல்ல காலைக் கழுவிக்கிட்டு வாங்க அய்யா’’ என்றார் டாக்டர். கால் கழுவுதல் என்பது பீ கழுவுதலின் இடக்கரடக்கல்.
அய்யன் உயிர்ப்பதற்றத்தில் இருந்ததால் இடக்கரடக்கல் சாரமிழந்தது. காலை மட்டும் கழுவிக்கொண்டு போய் டாக்டருக்கு பீக்குண்டியைக் காட்டினார் அய்யன்.

டாக்டர் இரண்டாம் முறையும் கால் கழுவிவருமாரு பணித்தார்.மறுபடியும் பீக்குண்டி.டாக்டர் நாகரிகத்தைக் கைவிட்டார்.’’யோவ் போயி பொச்சக் கழுவிக்கிட்டு வா.’’

நாகரிகம் எல்லாம் ஒரு அளவுக்குத்தான். மதிப்பீடுகள் மாறுபடுகிற அன்றுதான் வார்த்தைகள் பொருள் பெறும். காட்டாக பாலியல் தொழிலாளி என்று பகர்ந்துகொண்டு ‘தெவ்விடியா’ என மதித்தீர்களேயானால் வார்த்தை மாறுவதில் பொருளில்லை.ஆயி போவதற்கு அழகியலின் உச்சமாக நான் வைத்த பெயர்தான் பொன்முட்டை இடுதல்.

சிகரெட் குடிப்பவர்கள் ஆயி போகும்போது கடைசிக் கங்கு முடிவதற்கும் அவர்கள் ஆயி போகும் நேரம் முடிவதற்கும் சரியாக இருப்பது எப்படி என்றேல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டும். மனைவியிடம் தம் அடிப்பதில்லை என்று வாக்குத்தத்தம் செய்த நண்பனின் கழிவறையில் மனைவி தீப்பெட்டியைக் கண்டு பிடித்துவிட்டாள். அவன் சொன்னான்.’’ இல்லம்மா... பாத்ரூம் போகையில சிகரெட்டெல்லாம் குடிக்கிறதில்ல. ஆனாப் பாரு இந்த தீக்குச்சி கொளுத்தறத விடமுடியலே.’’

இப்படிப் பாவ்லோவின் நாய்ப் பழக்கம் எவ்வளவோ உள்ளன். இற்றை நாளிலும் மலத்தில் புது டிசைன் கண்டுவிட்டால் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. தம் கழிவைத் தாம் பாராதவர் யாரும் உளரா?

மாதவராஜ் பதிந்த குழந்தை கழிந்த ஜே, சின்ன வயதுகளில் நான் ஒன்னுக்கில் வரைந்த இரட்டை இலைகளையெல்லாம் ஞாபகப் படுத்துகின்றன. ஒன்னுக்குப் பட்ட கையோடு சிறுவர்கள் தீண்டவந்தால் பதிலுக்கு நாம் நம் தலை முடியைப் பிடித்துக்கொண்டு தீட்டிலிருந்து தப்பவேண்டும்.

குழந்தைகளின் பீயினால் உலகம் நாறிவிடும் என்று பத்து மணி நேரத்திற்கு குழந்தைகளுக்கு உறிஞ்சு கோமணம் (ங்கொய்யால அதுக்குப் பேரன்னங்க) கட்டுகிற மானுடர் வாழும் மாட்சிமை தங்கிய நாட்டில் இன்னும் பலதைப் பேசவே வேண்டியுளது.அவர்கள் தான் என்ன பண்ணுவார்கள் பயண வழியில் நீங்கள் குண்டி கழுவத் தண்ணீர் தர எவருமில்லை. பதினாறு ரூபாய் பாட்டில்காரர்கள் தவிர.அப்புறம் மோட்டலில் போட்டோ மாட்டியிருந்தால் லிட்டர் தண்ணி இருபது ரூபாயாயிருந்தால் ஆச்சரியமும் படாதீர்கள் சண்டையும் போடாதீர்கள்.

குழந்தையின் குண்டிகளை கல்லெடுத்துத் துடைத்துவிடுங்கள்.’மலந் துடைத்த கற்களை மழைக்காலம் கழுவிப்போகும்.’

Thursday, May 6, 2010

வேர்கள் வேலியைக் கடக்கின்றன...

கவிஞர் வைரமுத்துவைப் பற்றிய - உண்மையில் அப்படி அல்ல அது நர்சிம் குறித்தானது- பதிவினைத் தொடர்ந்து அதற்கு பின்னூட்டப் பிரதிவினையில் ஜகன் பொழிந்து தள்ளிவிட்டான்.
எதிர்வினை என்பதை விட பிரதிவினை என்கிற வார்த்தை ‘மறுவினை’ என்பதை லேசாகத் தொடுகிறது. சில பகிர்வுகள் பின்னூட்டத்தால் கொஞ்சம் பலம் பெறுகின்றன. சில பின்னூட்டங்கள் அடிவேர் மறந்த ஆலின் தாங்கு விழுதுகளாக நின்று விடுகின்றன.
கண்ணதாசனை வைரமுத்து தாண்டவில்லையா பல இடங்களில் அவ்வண்ணமே இது.
வைரமுத்துவை கவிஞர் என்றால் சிலர் சண்டைக்கு வரக்கூடும். ஆனால் அவர்களும் சினிமாப் பாடல்களில் கவிதை உள்ளது என்பதை ஒப்புக்கொளவர்.

அவ்விதமாகக் கவிஞர் எனக்கொள்வோமெனில் வைரமுத்து கவிஞர் என்றும் கண்ணதாசன் துயருற்றவர்களின் கவிஞர் என்றும் சொல்வேன். வைரமுத்துவை ஸ்தாபிப்பதற்கு எனக்குள் சில தகவல்கள் உண்டு. ஒரு நூறு பக்க தெரிவிப்பிற்கு காலம் வரும்போது அது நடக்கும்.இல்லாவிட்டால் தமிழுக்கு ஒரு சுக்கும் நஷ்டமில்லை.

இங்கே ‘கவிப்பேரரசு’ அவரல்ல. கவிதையில் அவர் காட்டுகிற நுண்மானை வெளிப்பாடுகளில் காட்டுவதில்லை. அவரது தோலை உரித்துப்பார்க்க ஒரு சபை வெளிப்பாடு போதுமானது.

அப்புறம் ஒரு ரகசியம் சொல்கிறேன். இப்போது நான் தண்ணீர் பாய்ச்சுகிற சில செவ்வாழைகளை வைரமுத்துவின் தோட்டத்திலிருந்து ‘கண்டு’களாய் வாங்கிவந்தேன்.
(மக்களே இது கவித்துவ வெளிப்பாடு அல்ல உள்ப்பாடாக்கும்.)

வைரமுத்து தனது தோட்டத்துக்கு ‘கவிஞர் தோட்டம்’ என பெயரிட்டிருக்கிறார்.என்னுடைய தோட்டங்கள் எனது பெயரில் இருக்கப்போவதில்லை. நீங்கள் பினாமி அளவுக்கு யோசிக்கவேண்டியதில்லை. எனக்கு , வாழை வாழும் தோட்டத்துக்கு கருங்கல்லால் மதில்வைக்கத் தெரியாது.

இல்லாமல் உள்ளது.

நினையாமல் இருக்கையில்
மறந்திடக் கூடிய ஒன்றுதான்.
இழப்பை உணர்கையில் பூ ரணம்.
திளைத்து இருக்கையில் பூரணம்.

இன்று வேறொன்றினைப்
பெற்ற பின்னும் எதிரெண்ணாமல்
முகங்கொள்ளும்
இழக்கப்பெற்றதின் சிறுவலி.
புறக்கணிப்பின் பெருவலி.

சுள்ளிமுள்ளுக் காட்டினிலே
கள்ளிப்புதர் உள்ளடுக்கில்
உள்ளது உன் பெயரே!

இல்லாமல் உள்ளது.

Wednesday, May 5, 2010

கசடதபற...

www.narsim.in -சதம் கண்ட வலைத் தளத்தில் இன்று பல கட்டுரைகள் படித்து இன்புற்றேன்.
ஒரு கட்டுரையில் கவிஞர் வைரமுத்துவின் கவித்துவங்களைப் பாராட்டிவிட்டு அவருக்கு வாழ்த்த்துக்கள் தெரிவித்திருந்தார்.பெரிய மனது நர்சிம்முக்கு.

நிமிடத்துக்கு இதயம் துடிக்கும் எண்ணிக்கை,திருப்பதி உண்டியலில் விழும் காணிக்கை,தன் தணிக்கை இப்படி அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் வைரமுத்து நர்சிம்முடைய வாழ்க்கையும் கணக்கில் எடுத்துக்கொள்வார் என நம்புகிறேன்.

நான் எழுதும் செய்தி அதன் பின்னூட்டப் பகுதியில் வருவது.’மெல்லினங்கள் பாடுகண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும்’ என்ற ஆண் குரலையடுத்து வருகிற பெண்குரல் ஆண் சொல்லுக்குக் கட்டுப்பட்டு மெல்லினத்திலேயே பாடுவதாக ’கார்க்கி’ பதிந்துள்ளார்.
(இந்த கார்க்கி வைரமுத்துவின் வாரிசு அல்ல என நம்புகிறேன்.)

நல்ல குறும்புக்காரன் இந்த கார்க்கி - என ரமேஷ்வைத்யா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் இத்தனை குறும்பை நான் எதிர்பார்க்கவில்லை.ஆண்குரலை அடுத்து...
’கங்கையே இங்கு வந்தது... சந்தமே ... தந்தது.அன்றில்கள் ரண்டு அட்டை போல்’ என பெண் குரல் பாடும் வல்லினம் தமிழில் ஒரு அசாதரணங்களில் ஒன்று.

எவ்வளவு வல்லினம் என்பதை அருமைத் தோழன் நேசமித்ரன் முழுப்பாடலையும் பின்னூட்டமாகப் போட்டு கார்க்கிக்கு மெய்ப்பிப்பார்.

அப்புறம்... என்னிக்கோ வருகிற அல்லது வந்துபோன பிறந்தநாளுக்காக நர்சிம்முக்கு வாழ்த்துக்கள்.கூவாகம் கட்டுரையில் வருகிற ‘ராஜ சுந்தர்ராஜன்’ அவரா இவரு. அல்லது இவரு வேறயா... கண்ணக் கட்டுதே!