Tuesday, December 29, 2009

2010- ஒரு புத்தாண்டு

புத்தாண்டு தினம் வருகிறது. நள்ளெண் யாமத்தில் ஒரு புது விண்மீன் தெரிகிறது என்றோ அது புதிய ஆண்டில் குளம்படி எடுத்து வைக்கிறது என்று எழுதவோ என்ன அற்புதமான வாய்ப்பு.

வாழ்த்துக்கூற வேண்டும் என நினைத்ததும் காலண்டர் பார்க்கத்தோன்றியது. அது தமிழ் மனப் பழக்கம். வியவ, பவ என எதையாவது எழுதி வைத்திருந்தால் அதைச் சொல்லி வாழ்த்தணுமில்லியா அதற்காக. அப்புறம் இது ஆங்கில ஆண்டு
என ஞாபகம் வந்தது.

ஆங்கில ஆண்டு என்று சொல்வதும் அடிமை மனமே இல்லையா... கிருத்துவ ஆண்டு.உலக நடப்பு ஆண்டு.
ஆகவே 2010 என நினைவும்... யாண்டு பல ஆயினும் நரை இல ஆகுக... என்கிற வாக்கியமும் நினைவு வர இந்த வாழ்த்து. எண்ணற்ற வாழ்த்து.

உடுக்கள் போல அளவிலியாய் அண்டங்களில் திரிகிற எண்ணிலும் என்னிலும் ஒன்றைக் காணும் எத்தனிப்பில் பொருளுள்ள அல்லது பொருளற்ற சடங்கை புன்னகையுடன் நினைவு கூர்ந்து  அன்பின் பகைவர், பகிர்வர்,பதிவர், சுற்றம்,நட்பு,  அடையாத் தொலைவின் ஒலி ஒளி ஆண்டுகளுக்கு அப்பாலுள்ளோர் யாவருக்குமாக என்றன் எளிய வாழ்த்து. வலிந்து பெறப்பட்ட கனிவிலும் கனவிலும் முகை விரித்த வாசச் சிறுமலர்.

தப்புத் தாளங்கள்...

நடப்புலக வாழ்விலிருந்து நான்கு நாட்கள் விலகியிருந்த நான் இன்று ஆனந்த விகடன் பார்க்க வாய்ப்புவந்தது.23.12.09 தேதியிட்ட இதழ். இதழின் 18,20,21 பக்கங்களைப் படிக்கும்போது ஒரு அரிய வாய்ப்பை தவறவிட்ட வருத்தம் வந்து சூழ்ந்தது.அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் குஷ்பு தொகுப்பாளராக இருந்திருக்கிறார் என்கிற முதற் செய்தியே என்னை பரவசத்திலும், அந்த நிகழ்வைத் தொலைக்காட்சிகளில் பார்க்காமல் தவறவிட்டோமே என்கிற வருத்தத்திலும் தள்ளியது.

’தமிழ் உச்சரிக்கத் தடுமாறும் நீங்கள் ஏன்  அவ்விழாவின் தொகுப்புப் பொறுப்பை எடுத்துக்கொண்டீர்கள்?’ என்பது விகடனின் கேள்வி.

‘தொகுப்புரை  மிக கவித்துவமான நடையில் அமைந்துவிட்டதால் அந்தத் தடுமாற்றம்’ என்பது குஷ்புவின் பதில். இந்த ஒரு பதில் போதுமே அவர் தமிழ்நாட்டை சமாளிக்க. மூத்த தமிழ்மகனின் ஆட்சியில் அவ்வளவு பேரும் இங்கே கவிஞர்கள்தான். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

கவித்துவத்தை   தவறவிட்டுவிட்டேனே என்றும் வருத்தம் வந்தது கூடுதலாக. குஷ்புவாலேயே அழியாத தமிழ் என்று முதல்வர் வேறு சமாளித்திருப் பார் போலிருக்கிறது. விழா மேடைகளை அல்லது விருது மேடைகளை ’இந்திரலோகம்’ அளவுக்கே மாற்ற முயலும் மாற்ற விரும்பும் பேராசையின் எளிய வெளிப்பாடுகள் இப்படிக் குமிழியிட்டு விடுகின்றன.

என்னென்ன மாதிரி குஷ்பு மொழிந்தார் என்பதற்கு விகடன் (பக்கம் 20-இல்) சொன்ன உதாரணங்கள் சாதாரணங்கள் அல்ல. உளியின் ஓசையை(இவ்வாறு ஒரு திடைப்படத்துக்கு கருணாநிதி வசனம் எழுதியுள்ளார்)- ஒலியின் ஓசை என்று வாசித்திருக்கிறார் குஷ்பு.

கவித்துவத் தமிழை ஆங்கிலத்தில் எழுதி வாசித்தாரோ அவர் என்கிற சிறிய ஐயம் அடுத்த எ.கா வில் தீர்ந்தது எனக்கு . பெரியாரின் கொள்கைகள் என்பதை ‘பெரியாரின் கொள்ளைகள்’ என சொல்லியிருக்கிறார்.

விடுதலை வளாகம் அடுத்து மைந்தன் கைக்கும் கட்டுப்பாட்டுக்கும் போகுமாறு வீரமணி.கி ஏற்பாடு செய்திருப்பதையும் அதை விட அய்யாவின் எழுத்துகளை தங்களைத் தவிர எந்த வெங்காயமும் புத்தகமாகப் புடுங்கப்படாது என வழக்காடித் திரிவதையும்  சமகால சூழலில் வாகாக வைத்து குஷ்பு விளையாடிவிட்டாரோ என்று தோன்றுகிறது. கறுப்புக்குடைகள், கறுப்பு உடைகள் ஆகிய அனைத்து மொத்தக்குத்தகை வியாபாரத்தையும் வீரமணி உரிமை கொண்டாடலாம்.

தமிழைப் படாத பாடு படுத்தினார் குஷ்பு என்று விகடனில் எழுதியிருக்கிறார்கள்.அவர் அப்படி வாழ வைத்த தமிழை வீழ வைத்து மனதறிந்து  வேடிக்கை பார்க்கிறவர் அல்ல என்று மனசுக்குப் படுகிறது.

ஆனால்,( என்  ஒரு தலை மற்றும்  தறுதலை நேசத்துக்குரிய பரிமள) அன்பான குஷ்பு ! நீங்க, எங்க பெருசுகள வச்சு காமெடி கீமெடி பண்ணலியே?





Wednesday, December 23, 2009

ஹைகூ

வெட்டவெளியில்
எரியும் அடுப்பு
நேற்று அங்கில்லை

Tuesday, December 22, 2009

குத்துங்கடா... உருவுங்கடா...

காற்றும் மழையும் கலந்தடித்துக்கொண்டிருந்த நவம்பர் 09 -2009 அன்றைக்கு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த வாரத்தில் மனதில் சட்டமன்ற நடவடிக்கைகள் பெரிதும் இடம்பூண்டிருந்தன.தமிழ்நாடு சட்டமன்றம் அல்ல.கர்நாடக சட்டமன்றம். முதல்வர் எடியூரப்பாவுக்கு இடியூரப்பாக்களாக இறங்கினர் ரெட்டி சகோதரர்கள் இருவர்.கதறி மனமுருகி என்னவோ செய்து எடி தாக்குப்பிடித்தார் தற்காலிகமாக.ரெட்டி சகோதரர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு கோமணம் கட்டி பீப்பி ஊதும் ‘ஜெமினி’ ராசி இரட்டைக் குழந்தைகளைப் பார்க்கையில் ஏற்படும் பரவசம் உண்டானது.அப்படி ஜொலிப்பும் இணைப்புமாக அவர்கள் காட்சியளித்தனர்.

எடியூரப்பா மந்திரித்த கோழியாய் மாறிப்போனாலும் நெற்றியில் வைத்தபொட்டு அவரது வனப்பைக் காப்பாற்றவே செய்தது.மந்திரி சோபாவின் (பதவி) இறக்கத்தாலும் இரக்கத்தாலும், விதான் சௌதாவை அவர் மீண்டும் அலங்கரிப்பது உறுதியானது.சன் நியூஸ் சேனலில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.வேளச்சேரி மக்கள் வெள்ளத்தில் த்த்தளித்துக்கொண்டிருந்தார்கள்.திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்கத்தில் மூன்று அடித்துக்கொண்டுபோக த்வி லிங்கமாகிவிட்டது.சீக்கிரம் ஒரு குடமுழுக்கு உண்டு கோவை மாவட்டத்தில்.

சன் நியூஸ்- சேனலில் செய்தி ஓடிக்கொண்டிருக்கும் போதே சுண்டுவிரல் அகல நாடா ஒன்று சுருளாக ஓடுகிறது அடர்நீலப் பின்னணியில்.அதற்கு மேலே அகலங்கூடிய செவ்வகப் பட்டையில் ’சற்று முன்’ என்கிற ஃப்ளாஷ் நியூஸ்கள் ஓடுகின்றன.அது அவ்வப்போது விளம்பரப் பகுதியாகவும் மாறுகிறது.அதற்கும் மேலே அவ்வப்போது பங்குச்சந்தை மற்றும் பொன்வெள்ளி விலை நிலவரங்கள்.சேனலைத் தொடர்ந்து பார்த்தால் நீங்கள் ஒரு சதுராவதானி ஆவது திண்ணம்.

சாயங்கால நேரத்தில் திருநாவுக்கரசர் தில்லியில் காங்கிரஸில் இணைந்த ’சற்றுமுன்’ கிடைத்தபோது மேலே ’பங்குச் சந்தை நிலவரம்’ என்று ஓடியது.இயற்கையும் இதர மொழிகளும் சமயங்களில் ஏற்படுத்தும் நகைச்சுவை அலாதியானது. சமீபத்தில் அப்படித்தான் சிறையில் மட்டன் பிரியாணி கிடைக்கவில்லை என்று ஒருவர் தட்டைத் தூக்கி எறிந்தார்.எறிந்தவரின் பெயர் அஜ்மல் ‘கசாப்’.

பிறகு ஆதித்யா சேனலுக்கு மாறிவிட்டேன்.கட்டுரைக்கான ஆதார சம்பவம் நிகழ்ந்தது சன் – னின் ஏழு மணிப் பிரதான செய்தியில்.மகாராஷ்ட்ர மாநிலத்தில் சமாஜ்வாடி எம்.எல்.ஏ இந்தியில் பிரமாணம் எடுக்க முற்பட்டபோது மாற்றுக்கட்சி ஆட்கள் பாய்ந்து தாக்கிவிட்டார்கள்.தாக்கியவர்களில் நான்குபேர் நான்காண்டுகளுக்கு சஸ்பென்ஸ் செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.அவர்கள் ஒருவேளை ஐந்தாம் ஆண்டில் பதவிக்கு மீள்வார்களோ என நினைத்துக்கொண்டேன்.

அடிவாங்கும் நபரை ஒரு வீரப்பெண்மணி இடைப்புகுந்து காப்பாற்றினார். குழாயடிச் சண்டையில் குறுக்கே புகுந்து குருதி இழப்பைத் தடுக்கும் அப்படிப்பட்ட குறுந்தெய்வங்களை நேரில் பார்த்திருக்கிறேன்.தொலைக் காட்சியில் தரிசிப்பது இதுவே முதல்முறை.

தாக்கியவர்கள் ராஜ்தாக்கரே கட்சிக்காரர்கள்.இதை ராஜ் ’தாக்கறே’ என்று புரிந்துகொள்ளத் தக்கவிதமாகத்தான் கட்சியின் பெயரும் இருக்கிறது.’புத்துருவாக்கப் படை ’என்னும் பொருளில் நவ்நிர்மாண் சேனா. படையாம் படை.எந்தக் காலத்தில் எப்படிப் பெயர் பாருங்கள்.பெயர் சூட்டுவதற்குத் தமிழகத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும். ஒரு கண்கட்டு மயக்கத்தில் ‘குழுமம்’ என்று தொனிக்கக்கூடிய அளவில் கழகம் என்று வைத்திருக்கிறார்கள்.

மகாராஷ்ட்ராவில் பதவி ஏற்ற எம்.எல்.ஏ பிரமாணம் செய்தது லத்தீன் அல்லது பாரசீகம் போன்றவற்றில் அல்ல. இந்தியில்.நான் எழுத்துருக்களைக் கவனித்த அளவில் இந்தியில் c என்று போடுவதை மராட்டியில் < என்பது போல எழுதுவார்கள்.இது குறியீட்டுப் பொருளில் உரைக்கப்படுகிறது.யாரும் அகராதியுடன் சண்டைக்கு வரவேண்டாம்.வாய்ப்பிரயோக அளவிலும் அவ்வண்ணமான வித்யாசங்களே இருக்கக்கூடும். பாராளுமன்றர்கள் ஆங்கிலத்தில் பதவி ஏற்பதைக்கூடச் சகிக்கிற மராட்டியர்களுக்கு இந்தி ஏனோ பிடிக்காமற்போய்விட்டது.அல்லது மராட்டிப் பற்று மலையளவு ஏறிவிட்டது. அல்லது இதில் மேலும் சில உள் விவரங்கள் உள.

மராட்டியை எனக்கு ஐந்து வயதில் இருந்து தெரியும் - பள்ளிக்கூட பிரேயர்களில் நின்றதன் வாயிலாக.பஞ்சாப ஸிந்து குஜராட்ட மராட்டா... எனப் பாடுகையில் இந்த மராட் என்னமோ செய்யும்.மெல்லினத்தில்(ம) தொடங்கி இடையின(ர) ஊடாக வல்லின(ட)த்தை அடைகிற ஒலிக்கோர்வை அதன் காரணமாக இருக்கலாம்.

அப்புறம் பத்தாம் வகுப்புப் பருவத்தில் ’சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு’ என்று பாடிய பாரதி. கவிதையைக் கூட கர்ஜிப்பார்களோ!

விஜய் டெண்டுல்கர் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை மராட்டாவின் வேறுபல மாதிரிகளும் இருக்கலாம்.வாழிய மராட்டா!

தில்லி ராஜதானி முதல் ராஜபாளையம் வரை பற்பல இடங்களில் மன்றக்கூச்சல்கள் இவ்விதமாய் இருக்கின்றன.மக்களுக்கு எதாவது செய்வார்கள் என நம்பி அனுப்பப் படுகிறவர்கள், எவ்வளவோ செய்யறோம் இதையும் செய்யமாட்டோமா? எனக் கிளம்பிவிடுகிறார்கள்.

இந்தியில் வீறுகொண்டு பிரமாணித்த அந்த வெள்ளை ஜிப்பா மனிதரின் முகம் மறுநாளும் மங்கலாக நினைவில் இருக்கிறது.

இதை எழுத முற்படும்போது ‘சிங்க மராட்டியர்’ என்றுதான் தலைப்புத் தோன்றியது.சிங்கங்கள் செய்ததென்ன பாவம்? ஆகவே..வன்முறைச் சுவையை மனதில்கொண்டு மேற்படித்தலைப்பை வைத்தேன்.எங்கேயோ கேட்டமாதிரி இருந்தால் சங்கத்தமிழும் சிங்கத் தமிழருமே பொறுப்பு.

Monday, December 21, 2009

கே.பி.சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்...

முந்தாநாள் அதிகாலை ஒரு கனவு.

முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் இருந்து கே.பி . சுந்தராம்பாள் வருகிறார்.அவரது கைகளில் ஓலைச்சுவடி இருக்கிறது. அவர் ஜோசியக்காரராக என் மனதுக்குப் படுகிறது. அடுத்து அவர் மரத்தடி ஜோசியக்காரருடன் அமர்ந்து உரையாடுகிறார். உண்மையில் அது விவாதம். எனக்கே கூட அது சுந்தராம்பாளாக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது. அவர் இறந்துவிட்டார் என்பது காரணமில்லை.ஏனோ ஒரு தோணல், அவராக இருக்க வாய்ப்பில்லை என்று படுகிறது.

ஜோசியக்காரரின் பிரச்சனை வேறு . அவர் சுந்தராம்பாள் இறந்துவிட்டார் என நினைக்கவில்லை. ஆனால், அது சுந்தராம்பாளாக இருக்கக்கூடாது என விரும்புகிறார். அவரது தொழில் போட்டி.தான் நுழைய வேண்டிய இடத்துக்கு அந்த அம்மா எப்படிப் போகலாம் என்பது அவரது பாவனையில் தொனிக்கிறது.

திரும்பவும் அவர் கருணாநிதியின் வீட்டுக்குள் செல்கிறார்.மதில் தாண்டியதும் அவரது கனவுப் பாத்திரம் முடிகிறது.இப்போது நான் பாடுகிறேன். இப்போதும் எனது கனவிருப்பு சாரீர நிலையையே எட்டியிருக்கிறது.ஒரு பாடலை அச்சு அசலாகப் பாடுகிறேன்.(பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே என்பது போன்ற ஆன்மாவுக்கு நெருக்கமான பாடலாக அது இருக்கக்கூடும்- பாடல் நினைவில்லை.)

அடுத்து பாடலின் இசைக்கோர்வைகளையும் எனது வாயாலேயே இசைக்கிறேன். அடுத்துப் பாடும்போது குரலில் பிசிறு தட்டுகிறது. இப்போது கமலைப் பார்க்கிறேன். இருவரும் அடுத்த நொடியே ஒரு இருட்டுக்குள் செல்கிறோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள இயலவில்லை.நான் ஒரு பாறைமேல் அமர்ந்திருக்கிறேன்.

எனக்கு மூச்சா வருகிறது எனக் கமலிடம் தெரிவிக்கிறேன்.அவர் அந்த மேனிக்கே அடிக்குமாறு பரிந்துரைக்கிறார். நான் முக்கிப் பார்க்கிறேன் மூச்சா வரவில்லை.அந்த முக்கலில் இருந்த இடம் வெளிச்சமாகிறது. அது கொடைக்கானலில் உள்ள குணா குகை.

அதைப்பார்த்ததும் விழித்துவிட்டேன். அப்புறம் எழுந்து பாத்ரூம் போனேன். மெத்தை போர்வைகள் தப்பித்தன. விழித்த நிலையில் கனவின் சரடுகளை ஆராய ஆரம்பித்தேன்.
‘வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்’ என்று பாடுகிற அவ்வைசுந்தராம்பாளுக்கு(இது கமல் லிங்க்) ஜோசியத் தோற்றம் பொருத்தம்தான்.கையில் சுவடி ஜோசியக்காரர்களுக்கும் புலவருக்கும் உரியதே.

கருணாவும் ஜோசியம் பார்க்கக்கூடும் என்பது மஞ்சள் சாட்சி.சமீபத்திய குலச்சாமி கோயில் தரிசனம் சாட்சி.ஜோசியக்காரன் பிழைப்பைக் காக்க நினைக்கும்:தக்கவைக்க நினைக்கும் எனது பிரதிநிதி என நினைக்கிறேன்.

கனவில் வந்த மற்ற மூவரின் அடையாளம் ஆங்கில எழுத்து கே.வில் தொடங்குகிறது.குணா பாறை ஏன் வந்தது. என்ன கேயாஸ் தியரி...குரலிலும் பிற்பாடு உருவிலும் கூட சுந்தராம்பாளுக்கு இணை வந்து விட்ட எஸ்.வரலட்சுமி காரணமா...

குணா படத்தில் கமலின் அம்மா.பாடல்; உன்னை நானறிவேன் என்னயன்றி யாரறிவார்?...
(அல்லது ராஜராஜ சோழனில் ,’ஏடு’ தந்தானடி தில்லையிலே பாடலை கைச்சுவடியுடன் நினைவு கொள்ளலாம்.)

கனவை யோசிக்க யோசிக்க காலைப்பொழுது சுவாரசியாக கன்னித்தீவு போல நீண்டுகொண்டிருந்தது.காலையில் தினத் தந்தி பார்த்தால் தலைப்புச்செய்தி,’கலைஞர் கருணாநிதிக்கு மூத்த தமிழ் மகன் விருது.’

சங்கதி இதுதானா... இளைய மகன்களுக்கு இப்படியான கனவுகள்கூட வராவிட்டால் நாட்டில் பிறகு என்னதான் நடக்கும்.

Sunday, December 20, 2009

தலைமைக் கழகப் பேச்சாளர்கள்

நன்னிலம் நடராஜன், பொத்தனூர் மணிமாறன்,திருப்பூர் கூத்தரசன்,பொத்தனூர் மணி மாறன்,திருப்பூர் விஜயா,புதுக்கோட்டை விஜயா, வண்ணை ஸ்டெல்லா... ஊர்ப்பெயரை முன்னால் வைக்காத கட்சிப்பேச்சாளர்களைத் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்.

ஊர்ப்பெயரையே கொஞ்சம் மாற்றி, கலிங்கத்துப்பரணியினை நினைவூட்டும் விதமாக வைத்துக்கொள்ளும் வாய்ப்பை இழந்து தமிழ்ப்பெயர் வைத்துக்கொண்டவர் ஜெயங்கொண்டானைச் சேர்ந்த வெற்றிகொண்டான்.’நெல்லை’ கண்ணனை இதில் யோசனையுடன் சேர்த்துக்கொள்கிறேன்.’கடையிலே பொருளில்லை கஜானாவுக்கு அடித்துக்கொள்கிறார்கள்’ என சேர்ந்திருந்த தமிழ்நாடு காங்கிரஸையே கலங்கடித்தவர் அவர்.

ஊர்ப்பெயரை வைத்துக்கொள்ளாதவர்களும் வேறெதாவது ஒன்றை ஒட்டு வைத்துக்கொள்வார்கள். தீப்பொறி ஆறுமுகம், தமிழருவி மணியன் இப்படி. தமிழருவி அறிவுத்தளத்தில் இப்போது காங்கிரஸுக்கு ஆப்பு வைத்துக்கொண்டிருக்கிறார். சுரத்திடை பெய்த மழை.

எனது ஞாபகத்தில் இருந்து சிலவற்றைப் பதிவு செய்யுமுன் தமிழ்ப் பதிப்பகங்களுக்கு ஒரு ஆலோசனை. பேச்சாளர்களை கேள்விகளுடன் அணுகி (சுமாராக 50 கேள்விகள்) அவர்களது பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகக் கொண்டுவரலாம். அது தமிழின் சமகால ஆவணங்களில் ஒன்றாகத் திகழும். கொஞ்சம் பொருட்செலவு பிடிக்கக்கூடிய இந்த வெட்டி வேலையை யார் செய்யக்கூடும் எனத்தெரியவில்லை.
(இப்படியான எனது கனாத் திட்டத்திற்கு மூன்று ஒலிநாடாக்கள் பேசிக்கொடுத்த புதுக்கோட்டை விஜயாவுக்கு பயனிலி நன்றியைப் பகிர்ந்துகொள்கிறேன்.) இந்த வெட்டிவேலைக்கு எனது அரசியல் அறிவை (முன்னால் பேச்சாளன் நான்:மற்றவை மந்தணம்) உபயோகிக்கத் தருவேன். கம்மியான செய்கூலியில்.

தீப்பொறி ஆறுமுகத்துக்கு உண்மையில் எரிமலை என்பது மாதிரிப் பெயர்தான் வைத்திருக்கவேண்டும்.தீப்பொறியும் வெற்றிகொண்டானும் தான் பதினைந்து இருபது மைல் சைக்கிள் எடுத்துக்கொண்டு போய் கேட்கிற பட்டாளத்தின் வியர்வையைச் சம்பாதித்தவர்கள்.

முன்பொரு சமயம் ஆற்காட்டில் ( அது ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நேரம்) கூட்டம் பேச வந்திருந்த வெற்றிகொண்டான் (அப்போது அவர் வெ.கொ அல்ல) தீப்பொறியை ரசனையோடு சிலாகித்தார். ஆறுமுகம் ஒரு கஜல் பாடகன் என்பது போல இருந்தது வெற்றிகொண்டானின் விதந்துரை.

ஆனால் அன்றைக்கு வெற்றிகொண்டானின் பேச்சில் தெறித்த நிஜமான தீப்பொறி வேறு. அந்த உள்ளடக்கத்தை அவரது (சில மாறிப்போய்விட்ட )வார்த்தைகளில் நினைவுபடுத்திக்கொள்கிறேன்.

“இங்க பாருங்க... நான் வெற்றிகொண்டான். தி.மு.கவுல ஒரு ஒன்றியச் செயலாளர் கூடக் கிடையாது. ஒரு சாதாரணப் பேச்சாளன். இப்ப நான் கார்ல வந்து எறங்கினேன் பாத்தீங்கள்ல... தம்பி சுப்பிரமணி கிட்ட வந்து என்னயக் கூட்டிக்கிட்டு வந்தாப்டி. சுத்தி நாலஞ்சு உடன்பிறப்புகள் இருந்தாங்க. இப்ப எனக்கு குண்டு வச்சாங்கன்னு வைங்க... ஒரு நாலஞ்சு பேராவது தி.மு.க காரன் சாவமா இல்லியா?... எனக்கே இப்படின்னா, ஒரு வருங்காலப் பிரதமர்...நேரு பேரன்! அந்த ஆளு செத்துப்போறாரு..கூட பத்துப்பதினஞ்சு பேரு செத்துப்போறாங்க... ஏங்க...யோசிச்சுப்பாருங்க... ஒரு..ஒரு காங்கிரஸ்காரன்கூட சாகலைன்னா அது எப்படிங்க?”

யோசிக்கத்தீராத கேள்வியாகத்தான் இன்னிக்கும் இருக்கு இல்லீங்களா?

Saturday, December 19, 2009

வைப்பாற்று நதிக்கரை....

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதற்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று அழைக்கப்பட்டு வந்தது.95 வாக்கில் நான் மதுரையில் இருந்தபோது அதில் நான் அங்கத்தினனாக இருந்தேன்.

எழுதுகிறதை விட அருப்புக்கோட்டை,ராஜபாளையம்,கோவில்பட்டி,விருதுநகர்,எட்டயபுரம் என பேருந்து ஏறிப்போய் ஏறிப்போய் கலை இரவு பார்ப்பதுதான் அப்போது விருப்பமாக இருந்தது.மதுரையில் இருந்து போவதற்குள் நன்மாறன் பேசி முடித்திருப்பார். நன்மாறன் நன்றாகப் பேசினார்- என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.நான் நன்மாறனைப் பார்த்ததில்லை. பார்த்ததும் அறிவாளியைப்போலத் தோற்றம் காட்டுகிற வனப்பும் அவருக்கு இல்லை. நான் பலநாட்கள் எஸ்.ஏ.பெருமாளைப் பார்த்துவிட்டு ‘இவர்தான் நன்மாறன்’ என நினைத்துக்கொண்டிருந்தேன். எஸ்.ஏ.பியின் தோற்றம் அப்படி.

எதோ ஒரு ஊரில் நன்மாறனின் பெயர் ஒலிக்கப்பட்டு அவர் வந்து பேசியதைக் கேட்டேன்.அனேகமாக அது இப்போதைய என் மாவட்டத் தலை நகரான் திருப்பூரிலாக இருக்கவேண்டும்.சிறுகதைகளில் புதுமைப்பித்தன் காட்டிய அவ்வளவையும் அவர் பேச்சில் காட்டினார். அவர் பேசுங்கால் பல ஊர்களில் சிரிப்புத்தாளாமல் எழுந்து பத்திருபது மீட்டர்கள் எழுந்து ஓடியிருக்கிறேன்.

இப்படி எவ்வளவோ நினைவுகளை உள்ளடக்கிய த.மு.எ.ச வில் மாதவராஜையும் சந்தித்தேன். சாத்தூர் கிளையில் அப்போது இருந்தார். இப்போது இருக்கிறாரா தெரியவில்லை. ’வீர சுதந்திரம் வேண்டி’ என்று வருடம் தவறாமல் மறுபதிப்புக்கோ அல்லது சின்னவயதுப் பாடப்புத்தகத்துக்கோ தகுதியான அந்த நூலை சாத்தூர் கிளை வெளியிட்டிருக்கிறது. அந்தப் புத்தகங்களை தூக்கிச் சுமந்த நினைவுகள் தனி.

சாத்தூர் வைப்பாற்றின் கரையில் இருக்கிறது.எஸ்.லட்சுமணப்பெருமாள் (இவர் ஒரு நாவாலும் பேனாவாலும் கதைஞர்),லட்சுமி காந்தன்(காட்சிக்கு இனியன் கவிஞன் என தன்னை நம்புபவன்),காமராஜ்,தியாகு,கார்த்திக்குகள் என சிறிய வட்டம் எனக்கு சாத்தூரில் உருவானது.

தொடர்ந்து கதைகள் எழுதுவார் எனப் பலராலும் நம்பப்பட்ட மாதவராஜ் 2000 வாக்கில் மும்மரமாக கணினியில் புகுந்து கற்றுக்கொள்ளப்போனார். நான், பாண்டியன் கிராம வங்கி வேலையை விட்டுவிட்டு கணினித் துறைக்குப் போகப்போகிறார் என நம்புமளவு அவரது தீவிரம் இருந்தது.அவரது இந்த வார கட்டுரைகளைப் படிக்கையில் அவர் அப்படிக்கூட செய்திருக்கலாம் என்றுபடுகிறது.

பிளாக் ஆரம்பித்தார். அவரது தூண்டுதலில் ச.தமிழ்ச்செல்வனின் ‘தமிழ் வீதி’ உருவாகி அந்த வீதியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்வளிக்கிறது.இதுகாறும் மனையில் வந்த பலவற்றை (சேவு செய்து) தொகுத்து மூன்று புத்தகங்களாகவும் அதுதவிர அவரே எழுதியவற்றின் தொகுப்பு ஒன்றையும் வெளியிட இருக்கிறார் மாதவராஜ்.கவிதைகள் மற்றும் கட்டுரைகளாக அவை ‘வம்சி வெளியீடு’

தொகுப்புகள் பற்றிய விவரத்தை அடுத்து எழுதுவதற்குமுன்... புத்தகங்கள் வரட்டும் வரட்டும் எனக் காத்திருக்கிறேன். இந்த மழைப்பருவத்துக்கு என் பிரியநதி வைப்பாற்றில் தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும்.

Wednesday, December 16, 2009

இயலாமை

வெற்றிடமாக் காணும்
பெருவெளியில் நேசத்தை
(அழுக்குருண்டை போல
சுகமாய்த் திரளுவதுஅது)
மெல்லமனதில் திரட்ட
அது ஒரு கோள வடிவத்தினை
எடுத்து
கரகரவெனச் சுற்றி மேல்
கீழற்ற
-பிரக்ஞைக் குறிப்புகள்
வசத்திலில்லை-
விதமாகச் சுழன்று சுற்றி
மோதி நின்ற இடம் உன்
காற் பெரு விரலின் நகமாய்
இருந்தது.

உருவகித்த பொருளின்
பிரதிநிதி நீயே எனக் கற்பிதம்.
மோகமும் பேரமும் ஒருங்கே
பேசி
‘சீக்கிர’ங்களுக்கு மத்தியில்
இடம்பிடித்தபோது
நீட்டலளவையை ஊதிப்
பெரிதாக்கும் உள்ளுறை
உயிரிழந்திருந்தது.
தோற்று நடந்த அதிகாலை
வானின் கீழ்
விண்மீன்கள் மங்கிக்கொண்டிருந்தன.
நண்பகலில் தூக்கம் வந்தது-
கறைபட்ட வரைபடத்தின்
ஈரத்தின் மேலாக.

Friday, December 11, 2009

இன்று திருவண்ணாமலையில்...

குளிர் காலம். திருவண்ணாமலை மார்கழிகள் தோறும் வரவேற்றுக்கொண்டிருக்கிறது என்னை. முன்பெல்லாம் டிசம்பர்- 31 கலை இரவு நிகழ்ச்சிகளுக்காக வந்து போய்க்கொண்டிருந்தது. கலை இரவு என்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சி வடிவம் அனேகமாக வழக்கொழிந்து போய்விட்டது என நினைக்கிறேன்.

சரியாக கடைசி மாநில மாநாட்டில் அவர்கள் ; ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ எனப் பெயர்மாற்ரியதிலிருந்து இந்த மாற்றம் தொடங்குகிறது. இனி ஒருவேளை எங்காவது கலை இரவுகள் நடந்தாலும் முந்தைய பொலிவில் நடைபெறுவது சந்தேகம்தான். தோழர்கள் களைத்துப்போய்விட்டார்கள்.

இம்முறை திருவண்ணாமலை வந்தது வம்சி புத்தக வெளியீடு வேலைகள் சம்பந்தமாக. மாதவராஜின் தீராத பக்கங்களிலிருந்து மூன்றோ இரண்டோ புத்தகங்கள் வெளிவருவது மகிழ்ச்சியாய் இருந்தது.பொறுப்பை பெரிய அளவு சிரமேற்கொள்ளாமல் புரூஃப் பார்ப்பது சுவாரசியமான அனுபவம். நேற்ரு தனிமையின் இசை’- அய்யனார் விஸ்வநாத்தின் இரண்டு கவிதைப்புத்தகங்கள் வாசித்தேன். துபாயிலிருக்கிற நண்பன் கிளம்பி இந்தியா வந்துவிட்டால் தேவலை என மனதார நினைத்தேன்.

எண்ணெய் மண்டலத்திடையே பற்றியெரியும் காதல் தீ. வாழ்வில் வந்து போகிற பெண்கள் சும்மாவும் போகாமல் செண்ட் வாசம் கிட்டத்தில் அடிக்கிற மாதிரி ஒருதடவை வந்துவிட்டுச் சென்றுவிடுவார்கள் போலிருக்கிறது.
நேசத்தின் நெய் ,மண் அகலில் இட்ட திரிச்சுடராய் மென்கருகலோடு மணக்கிறது. இருதயத்தை இரண்டாய் வெட்டி கிளியாஞ்சட்டிகள் ஆக்குவது பற்றி கற்பனை செய்தேன்.

நினைத்துக்கொண்டேன்,
’பாழுந் தனிமையில் பெட்ரோல் ஊற்றிக்கொளுத்த’.

Monday, December 7, 2009

முழுமை

கருக்கொண்டு பருத்திரண்டு
முற்றுமதன் அங்கங்கள்
உருவாகி உலவுலாவி
அசைந்தும் புரண்டும்
நகர்ந்தும் எழுந்தும்
நீண்டோ உயர்ந்தோ
குறுக்கிற் பெருத்தோ
உயிரென்னும் பெயரில்
உலவிடும் ‘விந்தை’.
ஓருயிர் முதலாம் ஆறுயிர்
உயிரிடை ...அளவிற்
சிதைந்தும் ஆக்கலிற்
கலைந்தும் பாதியிற்
போதல் பகரவும்
துக்கமாம் பாவியேன்
சொற்களில்...

Sunday, December 6, 2009

ரச மட்டம்

சமீபத்தில் உள்ளறையில் இருந்தவாறு வெளியில் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிச் செய்தியை காது மடுத்துக்கொண்டிருந்தேன்.’இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டிடத்தை’ என்று அது விளம்பிக்கொண்டிருந்தது.ஆங்... நீங்கள் யூகிக்கிறது சரியேதான்.

இந்த செய்தியாளர்களே இப்படித்தான் முறையாக எதையாவது சொல்கிறார்களா? பீளமேட்டில் இரட்டைக்கொலை ஆகவே கோயமுத்தூரே பதட்டம் என்கிற ரீதியிலும் பலசெய்திகள் சொல்லுகிறார்கள். பரபரப்பு என்பதற்குக் குறைவான உணர்ச்சி நிலையே இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டமாதிரி.

எல்லா ஊரும் கண்ணகியைக் கண்டிட்ட மதுரை மாதிரி(அல்லலுற்றாற்றாதழ்

Saturday, December 5, 2009

ஆடிப்போதல்

அலைபேசி நிறுவனங்களின் செலவு தரும் செய்திகள் அல்லது இன்பம் நல்கும் செய்திகளில் இருந்து தப்ப ஒரு மார்க்கம் உண்டா எனத் தெரியவில்லை. மாதக்கட்டணம் வெறும் முப்பதே ரூபாய்தான் என ஆரம்பித்து பெண்குரல்கள். ஜோசியம் சொல்றோம், ஜோக் சொல்றோம்,ஜொள்ளு சொல்றோம், குழந்தைக்கு கதை சொல்றோம்,பாட்டுப்போடறொம் என விதவிதமாக பின்னிப்பெடலெடுக்கிறார்கள்.

ஒரு விவஸ்தை கெட்ட உறவைப்போலவும்,குடிப்பழக்க அன்பர்களைப்போலவும் நமது நிலை அறியாது அடகு வைத்து விட்டு வருகையில்,ஆயி போகையில்,அடுப்படியில் பால் காய்ச்சுகையில் என வினோத நேரங்கள் பார்த்து அழைத்து நாம் ஆவலுடன் அல்லது பதற்றத்துடன் வந்து எடுத்தால் இந்த ரெகார்டட் செய்திகள்.

கட் பண்ணிவிட்டு அடுத்து நாம் போன் செய்தால் இந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வேறொரு பதிவு செய்யப்பட்ட செய்தி வரும்.இந்த எண்ணை இப்படியான காரியங்களுக்கு அழைக்காதீர்கள்... நானெல்லாம் ரொம்பப்பாவமுங்க’ என்று பதிவு செய்துகொள்ள எதாவது ஏற்பாடு இருக்கிறதா எனத் தேடவேண்டும்.

இன்று காலையில் கழிப்பறையில் இருக்கையில் ஒரு அழைப்புச்சத்தம். ’வரும் ஆனா வராது’ என்கிற கடுமையான கண்டிஷன். வெளியே ஓடி வந்து எடுத்தால் ஆண்குரல். இது வாழ்வினிலே முதல்முறை. ஜோக் சொல்கிறது.

புது படம் ஒன்றுக்கு புக் பண்ண நயன்தாராவைச் சந்திக்கப்போன புரட்யூஷர் அவர் கேட்ட சம்பளத்தைக்கேட்டு ஆடிப்போயிட்டாராம். அதுசரி, தியேட்டரில் புரட்யூஷர் வந்து ஆடினால் ஜனங்க ஆடிப்போக மாட்டாங்களா?

நல்லஜோக்தான்.இதற்கான மாதக்கட்டண விகிதங்களைக் கேட்டுக்கொள்ளாமல் நான் உள்ளேபோய் வெளியே போக ஆரம்பித்தேன்.

ஆடிப்போகவைக்காம அடங்கமாட்டார்கள் போலத்தான் தெரிகிறது.

Thursday, December 3, 2009

உலக வாழ்வு தரும் கேள்விகள்

பின்னூட்டம் என்பதன் பொருளுக்கு மேலும் செறிவு கூடியது என்னளவில் இன்று.பின்னால் வரும் கருத்து என்கிற அளவில் சௌகரியப் பொருள் கொண்டிருந்த எனக்கு இதன் முந்தைய பதிவுக்கு ஜகநாதன் தந்த பின்னூட்டங்கள் பின்+ஊட்டம் என விளங்கப்பண்ணின.

பகிர்கிறவதை விட அதிகமான ‘கேரக்டர்’களில் பின்வினைகள் வருகிறபோது மகிழ்வும் உடம்பில் ஆகார சக்தியும் மூளையில் ஆதாரத் திறப்புகளும் இருந்தால் சிந்தனையும் ஏற்படுகிறது. உலகத்தின் விரிவு பற்றி (இது பிரபஞ்ச பிரமாண்டமே போன்றது)- ஜகன் தெள்ளிதின் எடுத்துரைத்திருந்தான்.

கோபிகிருஷ்ணன் உலக அளவில் அறிந்திருக்கப்படவேண்டியவர் என நான் எழுதப்போந்தது ,யான்பெற்ற இன்பம்... என்கிற பாலூட்டு வகையையும் பாராட்டு வகையும் சேர்ந்தது.உலகம் முழுக்க அறியப்பட்டவர் என்றால் ஏசுநாதரைத்தான் சொல்லமுடியும்.ஒரு 75 சதவீதம் பேராவது அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். அதிலும் பாம்புபல்லி முதலாக எறும்பெருமை ஈறான பற்பலபற்பல உயிரிகள் அவரை அறிந்திருக்காது. உலகம் என்பது மனிதர்கள் மட்டுமன்று. ஆனால் ‘மனிதர் மாட்டு’ என்பது ஆறாம் அறிவுடைத்த இருகாலிகளின் நம்பகம்.

அங்கே இடி முழங்குது... பாடல் பாடிய தேக்கம்பட்டி சுந்தர்ராசன் இறந்துவிட்டாரா எனத் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். களையெடுக்க வந்த 50 வயது அளவிடத்தக்க எங்க ஊர்ப்பெண்மணி ‘அவரு ஏசுநோய் வந்து செத்துப்போயிட்டாரு’ என்று சொன்னபோது திகைத்துப் போய்விட்டேன். ஒன்று அவர் மதம் மாறி இறந்திருக்கவேண்டும். அல்லால் எய்ட்ஸ். ஆனாலும் உள்ளங்கை காயமாகிக் குருதி கொப்பளிக்கும் நிலையிலும் உதவிக்கரம் நீட்டுகிற தெய்வம் யேசுவன்றி வேறார்.எய்ட்ஸ் என்பதை உதவி எனப் பொருள் கொள்க.

மிகை நவிற்சியாக சிலதை வெளிப்படுத்துகிறோம்.
‘வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்குவாழும் உயிர்க்கெலாம்’ என்றும் பாடுகிற (ஏரியாவ சொல்லி சோறு கேக்கலீனா நம்மாளுக செவிக்குணவு அப்படி இப்படின்னு சொல்லி வயித்துல தட்டிருவாங்க) பாரதி, ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ‘ஜக’த்தினை அழித்திடுவோம்’ என்கிறான். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சோத்தினை அளித்திடுவோம்’ என்று பாடுவதல்லவா சிலாக்கியம்.என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்கலாம்னா பெருசே பட்னி கிடந்து ஒருநேரமோ ரெண்டு நேரமோ சோத்துக்கு வீங்கீருக்கு.

அதும் கஞ்சாப் போத தீர்ந்ததும் சோறு கிடைக்காம இருந்தா என்னதான் ஆகும் ‘அன்னந்தான் கிட்டாதெனில் அண்டந்தனை (அண்டா அல்ல) அழித்திடுவோம்’ எனவும் பாடவேண்டியதுதான்.பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று செந்நாப்போதர் சொல்லவில்லையா. அப்டி...அப்டி.

ஊர் சிரித்தது என்பதையெல்லாம் விட்டொழித்து விழாக்காலம் ஆகிறது.ஆக உலகம் என இனி எழுதுவதற்கு முன் இனிக்கொஞ்சம் யோசிக்கிறேன்.ஈ ஜகமுலோனா எந்தோ உந்தி.

Wednesday, December 2, 2009

மானுட வாழ்வில் வரும் கனவு...

இன்றைக்கு உறக்கத்தில் கோபிகிருஷ்ணனைப் பார்த்தேன். முந்தைய இரவின் நாளைக் கழித்துக் கட்டிவிட்டே உறங்கச் சென்றதால் அதை இன்றைய கனவு என உறுதியாகக்கூறலாம்.முன்னிரவில் அல்லது நள்ளிரவில் காணும் கனவுகள் - இடைத் தூக்கம் விழிக்காவிட்டால் - அனேகமாக மறந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.

ஆகவே, எழுத்தாளர் கோபியைப் பார்த்தது அதிகாலைக் கனவில்தான்.நல்ல கறுத்த நீளமான முடியும் முன் வழுக்கையும் கொண்டவராகக் காணப்பட்ட அவர் ஆனந்தன் என்ற பெய்ரில் வந்தார்.நிறம்,உடை (இன்று அணிந்திருந்த சாந்துப்பொட்டு நிறத்திலான முழுக்கை சட்டையில் அவரை ஒருதடவையும் பார்த்ததில்லை நான்) போன்றவற்றில் அவரென அறுதியிட முடியாதிருந்தும். அதே கண்கள், கன்னக் கதுப்புகள்.

கனவுக்கும் விழிப்புக்குமான கால இடைவெளியும் மனவெளியுமே பக்கபக்கத்தில் இருந்திருக்கவேண்டும்.தர்க்கமாக யோசித்தது கனவின் ஊடாகவேவா அல்லது விழித்த துவக்கக் கணங்களிலா என்பது கூடத் தெரியாத மயக்கம்.

கோபி ஆனந்தன் என்ற பெயரில் வருவது ‘மானுட வாழ்வு தரும் ஆனந்தம்’ என்ற தொகுப்புத் தலைப்பினாலா. ஏன் அவர் ’தூயோன்’ என வரவில்லை. தர்க்கம் அல்லது நிகழ்கூறுவெளிகளை என் மனம் உறக்கத்திலும் ஆதரித்து ஆனந்தன் என்ற பெயரைச் சூட்டியதா?

ஜ்யோவராம் சுந்தர்- சிவராம் இணை கொடுத்திருந்த கோபி நூல்கள் பற்றிய அறிவிப்பை காலம் தாழ்த்திப் பார்த்ததால் வந்த கனவா?

கார்த்திகை தீபத்தின் நாளில் வந்த கனவு இது என்கிறபோது இறுதியாக நான் அவரைப் பார்த்தது திருவண்ணாமலையில்தான் என- அறுதியிட முடியாதது இது- நினைவும் வருகிறது.

கோபிகிருஷ்ணன் தவறுவதற்கு பத்துப்பதினைந்து தினங்களுக்கு முன் அவரது நூல் ஒன்றுக்கு ஒரு வாராந்திரியில் அறிமுகம் எழுதினேன். மைப்பிரதி இப்படித்தொடங்கியது...

‘உலக அளவில் பேசப்பட்டிருக்க வேண்டியவர். உள்ளூரிலேயே கண்டு கொள்ளப்படாதவர்...’

அச்சிடப்பட்டது இப்படி,

கோபிகிருஷ்ணன்... உள்ளூரிலேயே கண்டுகொள்ளப்படாதவர்.

‘லே அவுட்’ எனது நவிற்சியை விழுங்கிவிட்டது.

அவரது அஞ்சலிக்கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பேசும்படி நிகழ்வுகள் விதித்தன.
இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்பொழுதும் ஒருமுறை பாதியில் மின்சாரம் போய்விட்டது. முதலிலிருந்து இரும்பு காய்ச்சவேண்டும் என்றுதான் நினைத்தேன். தப்பித்துவிட்டது.

ககன வெளி பற்றியும் கனவுகள் பற்றியும் ஒருங்கே யோசிக்கிறேன்.