Saturday, August 21, 2010

பாராளுமன்றத்தின் சம்பளம் அம்பதாயிரம்

தலைப்பு,சேர்க்கை மற்றும் ஓசை அடிப்படையில் வேறு ஏதேனும் வாசகத்தை நினைவு படுத்தினால் நான் பொறுப்பேற்க முடியாது. நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கான சம்பளம் ஐம்பதாயிரமாக உயர்வதை வரவேற்றே இது எழுதப்படுகிறது.

பழைய ஒரு ரூபாய் நோட்டுகளில் மன்மோஹன் சிங்கின் கையெழுத்து ( h களில் இடைவெளி விட்டு ) காணக்கிடைக்கும். அவரது அறிவு தோன்றும் அதில். இன்னும் அவரது கையெழுத்து மாறியிருக்காது என்றே கருதுகிறேன். சம்பளத்தை விட ஓய்வூதியம், பயணப் படி,உபசரிப்பு அலவன்ஸ் ஆகியவை நாளது தேதிக்கும் ஸ்திதிக்கும் தக்க உயர்த்திக்கொடுக்கப்பட்டிருக்கிறது.

எத்தனை விடலைப் பையன்கள் ‘ எங்க  சம்பளம் எம்.பியை விட அதிகம் எனக் கெக்கலித்திருப்பார்கள். ஒரு சட்ட மன்றத் தொகுதி தமது மையப் பிரதிநிதிக்கு மாதாந்திரம் பத்துப் பதினைந்து செலவிடுவதால் க்ஷீணித்துப்போகாது. வீழ்ச்சியின் விவர நிலைகள் வேறு ரூபங்களில் வருகின்றன. உறுப்பினர்களுக்கான சம்பளத்தை முன்னமே கூட்டியிருக்கவேண்டும்.

பரிந்துரைத்த குழு எண்பதாயிரம் வரை தரலாம் என்று சொன்னதால் ‘எண்பதைத் தா’ எனச் சிலர் கோஷமிட்டு அவையை முடக்கினார்கள்.விண்ணவப் புன்னகையுடன் சபையை அமைதி காக்க ஹஸ்த முத்திரை செய்துவிட்டு பிறகு வழக்கம் போல சபையை ஒத்திவைத்தார் மீரா குமார். அவரைப் பார்க்கும் போதெல்லாம் பாபு ஜகஜீவன் ராமின் மீது எனக்குப் பிரியம் மிகுகிறது. அவரும் ஜெமினி கணேசனும் வாரிசுகளுக்கு கன்னக் கதுப்பை மரபுவழியாகக் கொடுத்ததில் இன்றும் நினைவில் வாழ்கிறார்கள்.நிற்க.

எண்பதாயிரம் கோருகிறவர்கள் முந்தைய சம்பளத்தைக் காட்டிலும் சில மடங்கு எம்.பிக்கு உயர்த்துவதால் அரசு சம்பளம் பெறும் அனைவரும் உடனடியாக ஒப்புமைக் கணக்குப் போட்டு போராட்டத்துக்கு மனத்தை ஆயத்தம் செய்வார்கள் என்பதையாவது எண்ணிப்பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் என்ன செய்வார்கள். இல்லத்தில் இல்லி தூர்ந்த வறுமார்புகளுடன் மனைவிகள் காத்திருக்கிறார்கள். இவர்களது இந்தக் காசில்தான் முதல் வேலையாக விறகு வாங்கிப்போய் அடுப்பில் உறங்கும் பூனையை விரட்ட வேண்டி இருக்கிறது.

இவர்களைப் பார்த்தால் சிங்க முத்து அண்ணன் (வடிவேலு புகழ்) போலத்தான் கேட்கவேண்டும்.

‘என்ன தாய்யா வேணும்?’

Friday, August 20, 2010

கொட்டும் மழையில்...

இந்த சுதந்திர தினத்தில் சென்னையில் கொட்டும் மழையினூடாக கோட்டையில் கொடி ஏற்றி வைத்து அதற்கு முன்னமோ பின்னரோ ஒரு அறிவிப்பை முதலமைச்சர் மு. கருணாநிதி வெளியிட்டதாக அறிகிறேன்.

சில அறிவிப்புகள் கேட்ட உடனே மகிழ்வுதரும். சில எரிச்சல் தரும். இவ்வறிவிப்பு முதல் வகையைச் சேர்ந்தது என்னளவில். விவசாயிகளுக்கு இலவச மோட்டார் என்பதே அது. பம்ப் செட்டுகள் அதில் அடக்கமா என்பது தெரியவில்லை. இலவசமாகப் பெற்றுக்கொள்வதன் மனச் சங்கடத்தை பல பிரிவினரைப் போலவே உழவர்களும் இழந்தாயிற்று என்பதால் வினியோகச் சிக்கல் இல்லை. இதில் என்ன சங்கடம். நம்ம அரசு நாம் அதன் மக்கள். இதன் சலுகைகளை நாம் நன்கு அனுபவிக்க வேண்டியதுதான். மருத்துவர் ராமதாஸ் சொல்கிறபடி விவசாயிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் பத்தாயிரம் மானியம் கிடைத்தால் இன்னும் உவப்பானது.

இந்த மின் மோட்டார் உண்மையிலேயே பயனுள்ளது.பாட்டன் காலத்து மோட்டார்கள் பலபக்கம் உள்ளன. இந்த புது மின் மோட்டார் வழங்கும் அதே நேரத்து மின் இணைப்புகளை பெயர் மாற்றித் தந்துவிடலாம். பல மோட்டார்கள் 60 களில் வாங்கி இன்னும் அமரராகிப் போனவர்களின் பெயரில் இருக்கின்றன. மோட்டார்களில் விலை கூடிய பகுதி காயில் என அறியப்பெறும் செம்புக் கம்பிச் சுற்று மட்டுமே. மற்றவை இரும்பாலானது. மொத்தமாகத் தயாரிப்பதில் அரசுக்கு செலவு அதிகம் வந்துவிடாது.

பழைய மோட்டார்கள் இழுக்கும் மின்சாரத்தை விட குறைவான மின்சாரத்தையே புதுத் தொழில் நுட்ப மோட்டர்கள் உறிஞ்சும் என்றால் இயந்திரத்துக்கான காசு இரண்டே வருடத்தில் மின்சேமிப்பு மூலமாகவே தமிழ்நாட்டுக்கான பொதுப் பயனில் வந்துவிடும்.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டியது இன்னும் ஏராளம் உள்ளது. அதைப் பற்றி நூலே எழுதலாம். நூற்கள் தமிழ் நாட்டில் என்னென்ன பயனை விளைவிக்கும் என்பது நாம் அறிந்ததே. அது அங்கேயே நிற்க.

விவசாய மேம்பாட்டுக்கு செய்யவேண்டிய முதலாவது வேலைகள். ஒரு ஒன்றியத்துக்குள்ளேயே இருக்கிற விவசாய ஆஃபீசர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இடைவெளியை ஆயிரம் கிலோமீட்டர்களில் இருந்து குறைப்பது. அடுத்தது... விவசாயம் என்றால் என்ன என்று தெரிந்தவர்களை விவசாய ஆஃபீஸ் வேலைக்கு எடுத்துக்கொள்வது.

அடக் கடவுளே.... நல்லது பண்றதுல இவ்வளவு கஷ்டம் இருக்குதா?!

Monday, August 16, 2010

மண் வாசனை

இன்று நெடு நாட்களுக்குப் பிறகு தொலைக் காட்சியில் கிரிகெட் ஆட்டம் பார்த்தேன். கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சிப் பெட்டி.சமீபத்தில் 99- இல் சதத்தைத் தவறவிட்ட வீரேந்திர சேவக் இம்முறையும் 99. அடித்த சிகசர் அப்படியே இருக்க ஒரு ‘இல்லாத பந்தில்’ (நோ பால்) இந்தியா ஜெயித்துவிட்டது.வெற்றியைக் கடந்த ஏமாற்றம் சேவக்கின் முகத்தில் ஒளிர்ந்தது.

ஆடு மகன் தோனி தனது தெரிவிப்பில் அவரை வீரேந்திர சேவக் என்றே  குறிப்பிட்டார். வீரு, சேவக், வீரேந்திர சேவக் எனப் பலபெயர்களில் அவர் அறியப்படுவதுண்டு.

இழந்த அணியின் கேப்டன் அவரை , ‘வீரேந்த்ரா’ என்றே குறிப்பிட்டார். கதுப்புகளில் இளமையும் செழிப்பும் பொங்கும் அந்த விக்கட் சேவகர் மற்றும் அணி வேந்தர் வேறு யாருமில்லை.

 ‘குமார சங்ககாரா’

Sunday, August 15, 2010

பிராது..

ஒரு விமானத்துக்கு இரண்டு இயக்குனர்கள் இருந்தார்கள். இவர்களை ஓட்டுநர் என்று சொல்வதா பறக்குனர் என்று சொல்வதா என்பது புரியாததாலேயே இப்படி சொல்கிறேன். சரி... பைலட்டுகள்.

இந்த பைலட்டுகள் தங்கள் குறைகளை எழுதி மேலிடத்துக்கு தெரிவிக்க ஒரு நோட்டு இருந்தது. அது வெகு நாட்கள் இவர்களின் உபயோகிப்பு இன்றியே இருந்தது. இருவரில் ஒருவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அதாவது தினமும் குடித்துவிட்டுத்தான் விமானத்துக்கே வருவார். மற்றவருக்கு அந்த ஜோலி
கிடையாது.

குடிக்காதவர் ஒருநாள் அந்த நோட்டில் எழுதிவைத்துவிட்டார்.’ சக விமானி இன்று குடித்துவிட்டு விமானம் இயக்கினார் ’என்று. இது மேலிடத்துக்குப் போகுமுன் அதைப் பார்த்துவிட்ட சக விமானி உடனடியாக தன் தரப்புக்கு ஒரு குறிப்பு எழுதிவைத்தார்.

‘இன்று என் சக விமானி குடிக்காமல் விமானம் ஓட்டினார்.’

(எழுத்தாளர் எஸ். லட்சுமணப்பெருமாள் வாயிலாக ஒலி பெருக்கியில் கேட்டது இது)

Saturday, August 14, 2010

விடுதலை...

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். இதைச் சொல்லுவதற்கு சாக்லெட் செலவு அல்லது பிறைவடிவ (பழைய) ஆரஞ்சு முட்டாய் செலவு கூட இல்லை என்பதாலேயே இதைத் தெரிவித்தலும் ஆகிறது. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை என்பது ‘விடுதலை விரும்பி’களுக்கு கொஞ்சம் கஷ்டமாகக் கூட இருக்கும்.

அவர்களுக்கு விடுதலை தினமும் மற்றுமொரு நாளே. இது திங்கள் செவ்வாய் என இதர நாளில் வந்து ‘தொலைந்தால்’ என்ன என்று அவர்கள் நினைக்கக்கூடும்.காலண்டர்களை மாற்ற முடியாது. விடுதலை நாளை முன்னிட்டு காலத்தை மாற்ற பாரத மணித்திரு நாட்டு மணிகள் (ஆண்மணி/பெண்மணிகள் ) என்ன செய்தோம் என்பதை கடுமையாக யோசிக்கவேண்டி இருக்கிறது.

வெள்ளையரே ஆண்டிருந்தாலும் இன்றைய நிலையிலிருந்து பெரிய மாற்றம் இருந்திருக்குமா தெரியவில்லை. ஆனால் இந்தியப் பெயர்களைச் சொல்லி தாய்மொழிகளில் ரத்தம், தம்பி, அண்ணன் என்றெல்லாம் வாக்குச் சேகரிக்க முடிவதும் முயல்வதும் விடுதலையின் ஒரு பகுதிதானே?

பின்னே சுதந்திரம் என்பது சுக்கா?மிளகா?

Sunday, August 1, 2010

அய்ய.... மின்சாரமுங்க மின்சாரம்...

உலக நட்பு தினம் ஒரு புறத்தில் இருந்தாலும் உலக நடப்பு தினம் என ஒன்று இருக்கிறதல்லவா?அதன் படிக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. புள்ளிவிவரங்கள் நமக்கு ஆகாது எப்பவுமே. இந்த உயர்வு எனப்படுவது சர்வமட்டதிலும் அல்லாமல் வரையறுக்கப்பட்ட அளவுகளில் இருக்கிறது. வீடுகளுக்கு அறுநூறு யூனிட்டுக்குமேல் ஓடும் போது யூனிட்டுக்கு ஒரு ரூபாய் கூடுகிறது. இந்த எண்ணிக்கை முதலாவது யூனிட்டிலிருந்தே கணக்காகும் என்றே நினைக்கிறேன். மின்சாரக் கண்ணன்கள் பின்னூட்டமிட்டு ஐயந் தீர்க்கலாம்.

செய்தி வெளியாகிவிட்டது.பொதுவாக செய்தி தரப்படும் (தரப்    படும்!) போது இரு மாதத்துக்கு என்பதாக அல்லாமல் மாதாந்தரம் என்கிற தொனியிலேயே தெரிவிக்கப்படுகின்றன.இது நம் செய்தியியல் பற்றாக்குறை. கோளாறு. பள்ளிக்கூடங்கள்,தொழில் நிறுவனங்களுக்கும் தொகை கூடுகிறது. தொழில்கள் பற்றிய புரிதல்கள் இல்லாவிட்டாலும் கல்விக் கூடங்களுக்கு ஏற்றியது பற்றி எனக்குக் கேள்வியில்லை. நிர்வாகம் அதனால் தளர்வுறப் போவதில்லை. இதையுங் காரணங்காட்டி குழந்தைகளுக்கு மாதம் பத்தோ இருபதோ ஃபீசு கூட்டப்போகிறார்கள் அவ்வளவே.

ஒரே செய்தியை சன்னிலும் கலைஞரிலும் ஜெயாவிலும் மக்களிலும் பொதிகையிலும் கேட்கும்போது விஷயத்தின் பன்முகத் தன்மையை உணரலாம். சித்தரிப்பில் ஜெயா டி.வி க்கு தனித்தன்மை உண்டு. தனித் தன்மையை மெருகேற்ற  ஃபாத்திமா பாபு.நடுத்தர வர்க்கத்தை இந்த மின் கட்டணம் கடுமையாகப் பாதிக்கிறது என்றவுடன் பொதுஜனப் பெண்மணி ஒருவர் தோன்றி பிளந்து கட்டினார். அவரது ஆவேசத்தை அடுத்து எனக்குத் தோன்றிய ஆச்சரியம். ’தமிழகத்தில் நடுத்தரக் குடும்பங்கள் அறுநூறு யூனிட்டைத் தாண்டி உபயோகிக்கிறார்களா... வாரே வாவ்’ என்பதுதான்.

வாயுருளி, உருளித் திரவம் இப்படி எவ்வளவோ பாத்தாச்சு இந்தக் கட்டண ஏற்றத்தை ...ப்பூ....துவரம் பருப்பூ... என்று ஊதித்தள்ளிவிட மாட்டோமா? விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இன்னும் இலவச மின்சாரம்? அவர்களுக்கும் விரைவில் கட்டணம் அமலாக்கவேண்டும்.

வெள்ளைக் குதிரையேறி கல்கி வருகிற கோலம் பார்க்க ஆசையிருக்காத என்ன இந்த இருண்ட மனதுக்கு?

iஇன்று நண்பர் தினமாம்... சொல்றாங்க...

தூக்கத்திலிருந்து கண்கள் விழித்து மூளை முழுதும்  விழிக்காத (இது ஒரு பாவனை) காலையில் அதிகாலையில் வெளிநாட்டிலிருந்து தோழி தன் பேச்சின் பலதினூடே சொன்னாள். இன்றைக்கு ’நண்பர்கள் தினம்’ என்று. ஓகோ எனக் கேட்டுக்கொண்டேன்.

புன்னகை ,கண்ணில் ஒரு மின்னல், உளக் கிளர்ச்சி  எதுவும் தோன்றவில்லை எனக்கு.எப்படி இருந்த நான் இப்படி ஆயிப்போயிட்டேனே... என்று தோன்றினாலும் அரசியல் காரணங்களுக்காக தினங்கள் ஏனோ உவப்பளிப்பதில்லை.

தினங்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு குழந்தைகளை எப்பொழுது கொண்டாடப் போகிறீர்கள்? - என அப்துல் ரகுமான் கேள்விகேட்ட நாளிலிருந்து இந்த தீர்க்கமுடியா வியாதி தோன்றியிருக்கவேண்டும். ஆனாலும் பாருங்கள் தமிழ் அரசியல் சூழலில் வானம் பாடிகள் ஒரு ஃபீனிக்ஸ் தான். இன்னும் எவ்வெவற்றுக்காக அவர்களை
அவர்களது சொற்களை நினைவுகூரப்போகிறேன் என நினைக்கும்போது தீப ஆவளி, ரம்ஜான், கிருஸ்துமஸ் ஆகியனவற்றுக்கும் மகிழ்வைத் தொலைத்துவிடுவேன் என பயமாக இருக்கிறது.

பெயர்ச்சொல் பிளாக்கில் ஒரு வாழ்த்து அட்டையையும் படத்தையும் பார்த்தபோது நமக்கு ஒரு படம் போட்டு பிளாக் எழுதத் தெரியலியே என வருத்தமாக வந்தது.

முதல் மரியாதை வீராச்சாமிக்கு உள்ள ஏக்கத்தை நிகர்த்தது இது. சிவாஜியிடம் வீராசாமி முறையிடுவதுஅது .( படத்தில் பெருசின் பாத்திரப் பெயர் நினைவில்லை.வீராசாமி வந்து செங்கோடன்)

‘’சாமி உங்க காலுக்கு ஒரு செருப்பு தெச்சுப் போடணும்னு இந்த செங்கோடனுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்க!”

கட்டிய பெண்டாட்டியை ஃபிட்டிங்ஸ் போடாமல், மாமனார் காலில் விழுந்தார் என்பதற்காக செருப்பும் போடாமல்  செங்கோடனின் செருப்புத் தைக்கும் தொழிலுக்கு குந்தகம் விளைவித்து செங்க்ஸை முள் எடுக்க விட்டு ... எசப் பாட்டுப் படித்ததைத் தவிரவும் பாசி கோர்க்க முடி பிடுங்கித் தந்ததைத் தவிரவும் ( எதுக்கு எதை செய்யணுமோ அதை செய்யவே மாட்டியா பெருசு?)
பெருசு அந்தப் படத்தில் எதுவும் செய்யவில்லை. நிற்க...

நான் செய்து கொண்டிருந்த காரியம் நட்புக்கு மரியாதை பற்றி எழுதிக்கொண்டிருந்ததல்லவா? ’நட்டல்’(அய்யன் சொல்) பற்றி ‘நட்பதிகாரம்’ என சொல் நீக்கி வள்ளுவன் எவ்வளவோ சொல்லியிருக்கக் கூடும். நட்பு இருவகைப் படும் ஒன்று கொண்டாடப் படவேண்டிய நட்பு மற்றது பந்தாடப் படவேண்டிய நட்பு. பந்தாடுதல் என்றால் அது அரங்கத்துக்கும் வெளியே போய் நம் ஜீவிய காலத்துக்கும் கண்ணிலேயே படக்கூடாது- அந்தப் பந்து அந்த பந்தம்..

இப்படியெல்லாம் அன்பும் வன்மமும் ஒருங்கே பூண்டு மண்ணில் நல்லவண்ணம் வாழ ஆசையாய் இருக்கிறது. செய்திகள் வந்த அளவில் ’நட்டல் தினம்’ பற்றிய தகவலுக்கு அனிச்சையான நன்றிகள்.

இன்னும் இருபத்தி நாலு மணித்தியாலத்துக்கு ஒரு ஆம்பளைக்கோ ஒரு பொம்பளைக்கோ ஒரு மூணாம் பாலுக்கோ நானாகப் போன் பேசுவதில்லை என முடிவு செய்துவிட்டேன்.

நட்புக்கொள்கை-தற்காலிகக் கோட்பாடு- குடும்பத்துக்கு ஒவ்வாது என நினைக்கையில் பயமாக இருக்கிறது. any way...மானிலம் எல்லாவும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே....